துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு அணி, பொன் நக்கன்ன சடை, புகலூரரோ! மின் நக்கன்ன வெண்திங்களைப் பாம்பு உடன் என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே?
|
1
|
கோவண ஆடையையும் , வெண்ணீற்றுப் பொடி யணிந்த மேனியையும் , பொன் விரிந்து மலர்ந்தாலொத்த சடையையும் உடைய புகலூர்த்தலத்துப் பெருமானே ! மின்னல் மலர்ந்தது போன்ற வெண்திங்களைப் பாம்புடன் எதற்காகத் தேவரீர் திருச்சடையில் உடன்வைத்துக் கொண்டுள்ளீர் ? | |
இரைக்கும் பாம்பும், எறிதரு திங்களும், நுரைக்கும் கங்கையும், நுண்ணிய செஞ்சடை, புரைப்பு இலாத பொழில் புகலூரரை உரைக்குமா சொல்லி ஒள்வளை சோருமே.
|
2
|
இப்பெண் , நெட்டுயிர்க்கும் பாம்பையும் , அதனால் கவ்வப்படுகின்ற திங்களையும் , நுரைத்தெழுந்து அலைவீசும் கங்கையையும் நுண்ணிய செஞ்சடையில் வைத்துக் குற்றமில்லாத பொழில்கள் சூழ்ந்த புகலூரில் உறையும் பெருமானை உரைக்குமாறு கூறித் தன் ஒளிபொருந்திய வளைகள் நெகிழ்கின்றாள் . | |
ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர்குழல்! ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டன- ரோ? சொலாய், மகளே! முறையோ? என்று பூசல் நாம் இடுதும், புகலூரர்க்கே.
|
3
|
அசைந்தாடும் அரவத்தின் படத்தைப் போன்ற அல்குலை உடைய என் சோர்குழலாளாகிய பெண்ணைச் சுற்றத்தார் முதலாயினோர் ஏசலாகும் பழி சுமத்தி அவள் எழிலைக் கொண்டனர் . ஆதலால் , ` ஓ , மகளே ! சொல்வாயாக ! முறையோ ` என்று புகலூர் இறைவர்க்கு நாம் பூசல் இடுவோமாக . | |
மின்னின் நேர் இடையாள் உமை பங்கனை, தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை, புன்னைக் காவல் பொழில் புகலூரனை, என்னுள் ஆக வைத்து இன்பு உற்று இருப்பனே.
|
4
|
மின்னலையொத்த இடையாளாகிய உமையினை ஒருபங்கில் உடையவனும் , தன்னை நிகர்க்குமொன்றில்லாத தலைவனும் ஆகிய புன்னைக்கானல் பொழில் சூழ்ந்த புகலூரனை என் உள்ளத்து வைத்து அடியேன் இன்பமுற்றிருப்பேன் . | |
விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை எண்ணி, நாமங்கள் ஓதி, எழுத்து அஞ்சும் கண்ணினால், கழல் காண்பு இடம் ஏது எனில், புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே!
|
5
|
விண்ணிற் பொருந்திய பிறைமதியினைச் சூடிய அருள்வேந்தனை , நாமங்கள் கூறியும் , திருவைந்தெழுத்தால் தியானித்தும் , கண்ணினாற் கழலடிகளைத் தரிசிக்கும் இடங்கள் எவை என்றால் அப்புண்ணியன் எழுந்தருளியிருக்கும் புகலூரும் என் நெஞ்சமும் ஆம் . | |
| Go to top |
அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு, பண்டு நால்மறை ஓதிய பாடலன்; தொண்டர் ஆகித் தொழுது மதிப்பவர் புண்டரீகத்து உளார்-புகலூரரே.
|
6
|
புகலூர்த் தலத்து இறைவர் , தேவர்கள் அமுதுண்ணவும் தாம் நஞ்சுண்டவர் ; பழமையில் நான்மறைப் பாடல்களால் ஓதப்பட்டவர் ; தொண்டராகித் தொழுது மதிக்கின்றவர்களின் இதயத் தாமரையில் உள்ளவர் ஆவர் . | |
தத்துவம் தலை கண்டு அறிவார் இலை; தத்துவம் தலை கண்டவர் கண்டிலர்; தத்துவம் தலை நின்றவர்க்கு அல்லது தத்துவன்(ன்) அலன், தண் புகலூரனே.
|
7
|
தத்துவங்களின் கூறுபாடுகளை முடிவு போகக் கண்டு அறிவார் இலர் ; அவ்வாறு தத்துவங்களை முடிவு போகக் கண்டவர் காணாதவரேயாவர் ; தத்துவம் தலைநின்றவர்க்கே அல்லது தத்துவவடிவானவன் அல்லன் புகலூர்ப் பெருமான் . | |
பெருங் கை ஆகிப் பிளிறி வருவது ஓர் கருங்கையானைக்-களிற்று உரி போர்த்தவர்; வரும் கை யானை மதக்களிறு அஞ்சினைப் பொரும் கை யானை கண்டீர்-புகலூரரே.
|
8
|
புகலூர்த்தலத்து இறைவர் , பெருங்கையோடு பிளிறி வருவதாகிய ஒரு வலியகையானையை உரித்துப் போர்த்த இயல்பினர் ; துதிக்கையை உடைய மதயானைகளாகிய ஐம்புலன்களைப் பொறாது வெல்லும் ஆனைபோல்வார் ஆவர் . | |
பொன் ஒத்த(ந்) நிறத்தானும் பொருகடல் தன் ஒத்த(ந்) நிறத்தானும் அறிகிலா, புன்னைத் தாது பொழில், புகலூரரை, என் அத்தா! என, என் இடர் தீருமே.
|
9
|
பொன்னை ஒத்த நிறம் உடைய பிரமதேவனும் , அலைவீசும் கடலையொத்த நீல நிறத்தவனான திருமாலும் அறியப் படாத இயல்பினரும் புன்னையின் மகரந்தங்களை உடைய பொழில் சூழ்ந்த திருப்புகலூரின்கண் எழுந்தருளியிருப்பவருமான பெருமானை ` என் தந்தையே !` என்று கூற என் இடர்கள் அனைத்தும் தீரும் . | |
மத்தனாய், மதியாது, மலைதனை எத்தினான் திரள் தோள் முடிபத்து இற ஒத்தினான் விரலால்; ஒருங்கு ஏத்தலும் பொத்தினான் புகலூரைத் தொழுமினே!
|
10
|
மதச் செருக்குடையவனாய்ச்சிறிதும் மதியாமல் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்ற இராவணனின் திரண்ட தோள்களும் , முடிபத்தும் இறும்படியாகத் திருவிரலால் ஒற்றியவனும் , தன் நரம்புகளே யாழாகக்கொண்டு அவன் ஏத்துதலும் மீண்டும் அருள்செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருப்புகலூரைத் தொழுவீர்களாக . | |
| Go to top |