எங்கே என்ன, இருந்த இடம் தேடிக்கொண்டு, அங்கே வந்து, அடையாளம் அருளினார்; தெங்கே தோன்றும் திரு வாய்மூர்ச் செல்வனார் அங்கே வா! என்று போனார்; அது என்கொலோ?
|
1
|
தென்னைகள் நன்கு தோன்றுகின்ற திருவாய்மூரில் எழுந்தருளியுள்ள அருட்செல்வராகிய இறைவர் , என்னை எங்கே என்று தேடி , இருந்த இடத்தைக் கண்டுகொண்டு அங்கே வந்து அடையாளம் அருளியவர் , திருவாய்மூர்க்கு வா என்று கூறியருளிச் சென்றார் ; அதன் காரணம் என்னை கொல் ? | |
மன்னு மா மறைக்காட்டு மணாளனார் உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத் தன்னை வாய் மூர்த் தலைவன் ஆமா சொல்லி, என்னை, வா! என்று போனார்; அது என்கொலோ?
|
2
|
எம்பெருமானையே நினைந்து , நினைந்து உறங்குகின்ற எளியேனுக்கு நிலைபெற்ற பெருமை உடைய மறைக் காட்டுறையும் மணவாளனார் தன்னை வாய்மூர் இறைவனாமாற்றை விளங்கக்கூறி என்னை அங்கு வா என்று கூறியருளிச் சென்றார் ; அதன் காரணம் என்னை கொல் ? | |
தஞ்சே கண்டேன்; தரிக்கிலாது, ஆர்? என்றேன்; அஞ்சேல்! உன்னை அழைக்க வந்தேன் என்றார்; உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன்; வஞ்சே வல்லரே, வாய்மூர் அடிகளே?
|
3
|
தரித்து ஓரிடத்தில் இராதவர்க்குத் தஞ்சப் பொருளைக் கண்டேன் என்றேன் ; ` அஞ்சாதே ! உன்னை அழைக்க வந்தேன் ` என்று அருளினார் ; ` உய்ந்தேன் ` என்று மகிழ்ந்து எழுந்து ஓட்டம் எடுத்தேன் ; வாய்மூர் அடிகள் வஞ்சனையில் வல்லவரோ ? | |
கழியக் கண்டிலேன்; கண் எதிரே கண்டேன்; ஒழியப் போந்திலேன்; ஒக்கவே ஓட்டந்தேன்; வழியில் கண்டிலேன்; வாய்மூர் அடிகள் தம் சுழியில் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ?
|
4
|
அவர் என்னைவிட்டு நீங்குமாறு கண்டேனில்லை ; கண்ணெதிரே கண்டேன் ; என்னைவிட்டு அவர் நீங்கியபின் போந்தேனில்லை ; ஒக்கவே ஓடிவந்தேன் ; ஆயினும் இடைவழியிற் கண்டேனில்லை ; வாய்மூர் அடிகளின் மாயச்சுழலில் அடியேன் இவ்வாறு பட்டுச் சுழல்கின்றதன் காரணம் என்னையோ ? | |
ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று உள்கி உள்கி, உகந்து, இருந்தேனுக்குத் தெள்ளியார் இவர் போல, திரு வாய்மூர்க் கள்ளியார் அவர் போல, கரந்ததே!
|
5
|
ஒளியுடையவர் இவரையன்றி மற்றுயாரும் இல்லை என்று நினைந்து நினைந்து மகிழ்ந்திருந்த எளியேனுக்கு , திருவாய் மூரின்கண் தெளிந்தவர் இவர்போலக்காட்டிக் கள்ளம் உடையவர் போல ஒளித்துவிட்டனரே . | |
| Go to top |
யாதே செய்தும், யாம் அலோம்; நீ என்னில், ஆதே ஏயும்; அளவு இல் பெருமையான் மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார்- போதே! என்றும், புகுந்ததும், பொய்கொலோ?
|
6
|
எச்செயல் செய்தாலும் அவன் செயல் என்று எண்ணினால் அதுவே நல்ல பயனைத்தரும் . அளவில்லாத பெருமையுடையான் அவன் , மாதேவனாகிய வாய்மூர் இறைவா என்றதும் சென்றதும் பொய்யோ ? | |
பாடிப் பெற்ற பரிசில் பழங் காசு வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப் போல்- தேடிக்கொண்டு, திரு வாய்மூர்க்கே எனா, ஓடிப் போந்து, இங்கு ஒளித்தஆறு என்கொலோ?
|
7
|
பாடி அதனாற்பெற்ற பரிசிலாகிய பழங்காசினைக் கொண்டு வாடிய வாட்டத்தைத் தவிர்ப்பாரைப்போலத் திருவாய் மூர்க்கே தேடிக்கொண்டு ஓடிவந்து இங்கே ஒளித்தவாற்றிற்கான காரணம் என்னையோ ? | |
திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந் நின்றார்; மறைக்க வல்லரோ, தம்மைத் திரு வாய்மூர்ப் பிறைக் கொள் செஞ்சடையார்? இவர் பித்தரே!
|
8
|
வேதங்களாற் பூசிக்கப்பெற்று அடைக்கப்பட்டிருந்த மறைக்காட்டுத் திருக்கதவத்தைத் திறக்குமாறு பாடிய என்னினும் , செந்தமிழ்ப்பாடலை உறுதியுடன்பாடி அடைப்பித்தவராகிய திருஞான சம்பந்தப் பிள்ளையார் உதோ நின்றார் ; திருவாய்மூரில் பிறையைக் கொண்ட செஞ்சடை உடையாராகிய பெருமான் தம்மை மறைக்க வல்லரோ ? இவர் பித்தரேயாவர் . | |
தனக்கு ஏறாமை தவிர்க்க என்று வேண்டினும், நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன் எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா, புனற்கே பொன்கோயில் புக்கதும் பொய்கொலோ?
|
9
|
தனக்கு உள்ளம் பொருந்தாமையைத் தவிர்த்தருள் வாயாக என்று வேண்டினும் , பொய்யாக நினைக்கும் எளியேன் பொய்க்கும் அருள் செய்யும் நின்மலனாகிய இறைவன் , எனக்கு எதிரேவந்து வாய்மூருக்கே வா என்று கூறிவந்து தீர்த்தத்தை அடுத்த பொற்கோயிலில் வந்து புகுந்ததும் பொய்தானோ ? | |
தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால் மீண்டற்கும் மிதித்தார், அரக்கன் தனை; வேண்டிக் கொண்டேன், திரு வாய்மூர் விளக்கினை தூண்டிக் கொள்வன், நான் என்றலும், தோன்றுமே.
|
10
|
பன்றி வடிவாகச் சென்று தோண்டியும் தீண்டுதற்கரிய திருவடியின்கண் அமைந்த திருவிரல் ஒன்றினால் அரக்கனை மீண்டு அருள்புரிவதற்கும் மிதித்தவராகிய பெருமானை வேண்டிக் கொண்டேன் ; திருவாய்மூர் விளக்கினைத் தூண்டிக்கொள்வேன் நான் என்றலும் தோன்றி அருள்புரிந்தான் . | |
| Go to top |