சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.050   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவாய்மூர் - திருக்குறுந்தொகை அருள்தரு பாலினுநன்மொழியம்மை உடனுறை அருள்மிகு வாய்மூரீசுவரர் திருவடிகள் போற்றி
திருவருள் நலம்பெற்ற இரு பெருங்குரவர்களும் அடியார் புடைசூழத் திருமறைக்காட்டில் திருமடத்தில் தங்கினர். அன்றிரவு திருநாவுக்கரசர் தாம் அரிதில் திறக்கப்பாடியதையும், ஆளுடைய பிள்ளையார் விரைவில் அடைக்கப் பாடியதையும் எண்ணித் தம் பாடலுக்குக் கதவு திறக்கக் காலந்தாழ்ந்தமைக்குக் காரணம், இறைவன் திருக்குறிப்பை நாம் உணராது அயர்த்தமையே என்று கவைலகொண்டு திருமடத்தில் ஓர் பால் அறிதுயில் கொண்டார். அவர் கனவில் இறைவன் தோன்றி நாம் திருவாய்மூரில் இருப்போம் எம்மைத் தொடர்ந்து வா என்று கூறி மறைய, உடனே துயிலெழுந்து நாவுக்கரசரும் இறைவனைப் பின் தொடர்ந்து எங்கே யென்னை என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிக்கொண்டே வாய்மூருக்குச் சென்றார்.
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=gP5OpbzqOs4   Add audio link Add Audio

எங்கே என்ன, இருந்த இடம் தேடிக்கொண்டு,
அங்கே வந்து, அடையாளம் அருளினார்;
தெங்கே தோன்றும் திரு வாய்மூர்ச் செல்வனார்
அங்கே வா! என்று போனார்; அது என்கொலோ?

1
தென்னைகள் நன்கு தோன்றுகின்ற திருவாய்மூரில் எழுந்தருளியுள்ள அருட்செல்வராகிய இறைவர் , என்னை எங்கே என்று தேடி , இருந்த இடத்தைக் கண்டுகொண்டு அங்கே வந்து அடையாளம் அருளியவர் , திருவாய்மூர்க்கு வா என்று கூறியருளிச் சென்றார் ; அதன் காரணம் என்னை கொல் ?

மன்னு மா மறைக்காட்டு மணாளனார்
உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத்
தன்னை வாய் மூர்த் தலைவன் ஆமா சொல்லி,
என்னை, வா! என்று போனார்; அது என்கொலோ?

2
எம்பெருமானையே நினைந்து , நினைந்து உறங்குகின்ற எளியேனுக்கு நிலைபெற்ற பெருமை உடைய மறைக் காட்டுறையும் மணவாளனார் தன்னை வாய்மூர் இறைவனாமாற்றை விளங்கக்கூறி என்னை அங்கு வா என்று கூறியருளிச் சென்றார் ; அதன் காரணம் என்னை கொல் ?

தஞ்சே கண்டேன்; தரிக்கிலாது, ஆர்? என்றேன்;
அஞ்சேல்! உன்னை அழைக்க வந்தேன் என்றார்;
உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன்;
வஞ்சே வல்லரே, வாய்மூர் அடிகளே?

3
தரித்து ஓரிடத்தில் இராதவர்க்குத் தஞ்சப் பொருளைக் கண்டேன் என்றேன் ; ` அஞ்சாதே ! உன்னை அழைக்க வந்தேன் ` என்று அருளினார் ; ` உய்ந்தேன் ` என்று மகிழ்ந்து எழுந்து ஓட்டம் எடுத்தேன் ; வாய்மூர் அடிகள் வஞ்சனையில் வல்லவரோ ?

கழியக் கண்டிலேன்; கண் எதிரே கண்டேன்;
ஒழியப் போந்திலேன்; ஒக்கவே ஓட்டந்தேன்;
வழியில் கண்டிலேன்; வாய்மூர் அடிகள் தம்
சுழியில் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ?

4
அவர் என்னைவிட்டு நீங்குமாறு கண்டேனில்லை ; கண்ணெதிரே கண்டேன் ; என்னைவிட்டு அவர் நீங்கியபின் போந்தேனில்லை ; ஒக்கவே ஓடிவந்தேன் ; ஆயினும் இடைவழியிற் கண்டேனில்லை ; வாய்மூர் அடிகளின் மாயச்சுழலில் அடியேன் இவ்வாறு பட்டுச் சுழல்கின்றதன் காரணம் என்னையோ ?

ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று
உள்கி உள்கி, உகந்து, இருந்தேனுக்குத்
தெள்ளியார் இவர் போல, திரு வாய்மூர்க்
கள்ளியார் அவர் போல, கரந்ததே!

5
ஒளியுடையவர் இவரையன்றி மற்றுயாரும் இல்லை என்று நினைந்து நினைந்து மகிழ்ந்திருந்த எளியேனுக்கு , திருவாய் மூரின்கண் தெளிந்தவர் இவர்போலக்காட்டிக் கள்ளம் உடையவர் போல ஒளித்துவிட்டனரே .
Go to top

யாதே செய்தும், யாம் அலோம்; நீ என்னில்,
ஆதே ஏயும்; அளவு இல் பெருமையான்
மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார்-
போதே! என்றும், புகுந்ததும், பொய்கொலோ?

6
எச்செயல் செய்தாலும் அவன் செயல் என்று எண்ணினால் அதுவே நல்ல பயனைத்தரும் . அளவில்லாத பெருமையுடையான் அவன் , மாதேவனாகிய வாய்மூர் இறைவா என்றதும் சென்றதும் பொய்யோ ?

பாடிப் பெற்ற பரிசில் பழங் காசு
வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப் போல்-
தேடிக்கொண்டு, திரு வாய்மூர்க்கே எனா,
ஓடிப் போந்து, இங்கு ஒளித்தஆறு என்கொலோ?

7
பாடி அதனாற்பெற்ற பரிசிலாகிய பழங்காசினைக் கொண்டு வாடிய வாட்டத்தைத் தவிர்ப்பாரைப்போலத் திருவாய் மூர்க்கே தேடிக்கொண்டு ஓடிவந்து இங்கே ஒளித்தவாற்றிற்கான காரணம் என்னையோ ?

திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந் நின்றார்;
மறைக்க வல்லரோ, தம்மைத் திரு வாய்மூர்ப்
பிறைக் கொள் செஞ்சடையார்? இவர் பித்தரே!

8
வேதங்களாற் பூசிக்கப்பெற்று அடைக்கப்பட்டிருந்த மறைக்காட்டுத் திருக்கதவத்தைத் திறக்குமாறு பாடிய என்னினும் , செந்தமிழ்ப்பாடலை உறுதியுடன்பாடி அடைப்பித்தவராகிய திருஞான சம்பந்தப் பிள்ளையார் உதோ நின்றார் ; திருவாய்மூரில் பிறையைக் கொண்ட செஞ்சடை உடையாராகிய பெருமான் தம்மை மறைக்க வல்லரோ ? இவர் பித்தரேயாவர் .

தனக்கு ஏறாமை தவிர்க்க என்று வேண்டினும்,
நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன்
எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா,
புனற்கே பொன்கோயில் புக்கதும் பொய்கொலோ?

9
தனக்கு உள்ளம் பொருந்தாமையைத் தவிர்த்தருள் வாயாக என்று வேண்டினும் , பொய்யாக நினைக்கும் எளியேன் பொய்க்கும் அருள் செய்யும் நின்மலனாகிய இறைவன் , எனக்கு எதிரேவந்து வாய்மூருக்கே வா என்று கூறிவந்து தீர்த்தத்தை அடுத்த பொற்கோயிலில் வந்து புகுந்ததும் பொய்தானோ ?

தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால்
மீண்டற்கும் மிதித்தார், அரக்கன் தனை;
வேண்டிக் கொண்டேன், திரு வாய்மூர் விளக்கினை
தூண்டிக் கொள்வன், நான் என்றலும், தோன்றுமே.

10
பன்றி வடிவாகச் சென்று தோண்டியும் தீண்டுதற்கரிய திருவடியின்கண் அமைந்த திருவிரல் ஒன்றினால் அரக்கனை மீண்டு அருள்புரிவதற்கும் மிதித்தவராகிய பெருமானை வேண்டிக் கொண்டேன் ; திருவாய்மூர் விளக்கினைத் தூண்டிக்கொள்வேன் நான் என்றலும் தோன்றி அருள்புரிந்தான் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாய்மூர்
2.111   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தளிர் இள வளர் என
Tune - நட்டராகம்   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
5.050   திருநாவுக்கரசர்   தேவாரம்   எங்கே என்ன, இருந்த இடம்
Tune - திருக்குறுந்தொகை   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
6.077   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாட அடியார், பரவக் கண்டேன்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000