சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.111
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தளிர் இள வளர் என பண் - நட்டராகம் (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=I3ZgtC3Dewg |
5.050
திருநாவுக்கரசர்
தேவாரம்
எங்கே என்ன, இருந்த இடம் பண் - திருக்குறுந்தொகை (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=gP5OpbzqOs4 |
6.077
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாட அடியார், பரவக் கண்டேன்; பண் - திருத்தாண்டகம் (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=dW7dH_3fNrg |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.111  
தளிர் இள வளர் என
பண் - நட்டராகம் (திருத்தலம் திருவாய்மூர் ; (திருத்தலம் அருள்தரு பாலினுநன்மொழியம்மை உடனுறை அருள்மிகு வாய்மூரீசுவரர் திருவடிகள் போற்றி )
அப்பர் அரிய வேதங்களால் திருக்காப்பிடப்பெற்றகதவுகள் தாம் பாடிய திருப்பதிகத்தால் அரிதில் திறக்கப்பெற்றதையும் ஞானசம்பந்தரின் பாடலுக்கு எளிதில் அடைத்துக் கொண்டதையும் எண்ணியவராய்த் துயில் கொண்டார். அவர் தம் மனக்கருத்தை அறிந்த இறைவன் அவர் எதிரே சைவ வேடத்துடன் காட்சி நல்கி நாம் வாய்மூரில் இருக்கின்றோம். நம்மைத் தொடர்ந்து வருக என அழைத்து முன்னே செல்ல அவரைப் பின் தொடர்ந்து சென்றார் அப்பர் நெடுந்தூரம் சென்ற நிலையில் பெருமான் மறைந்தார். அப்பர் வாய்மூரை அடைந்து வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். இந்நிலை யில் அப்பரை அவர்தம் திருமடத்தில் காணாத ஞானசம்பந்தர் அவர் சென்ற வழி கேட்டறிந்து அவரைத் தேடித் திருவாய்மூர் வந்தடைந் தார். ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த அப்பர் அவரைக் கண்டு மகிழ்ந்து தாம் அருளிய திருப்பதிகத்தில் திறக்கப்பாடிய என்னினும் சிறப்புடைய செந்தமிழ்பாடித் திருக்கதவம்அடைப்பித்த ஞானசம்பந்தர் வந்துள்ளார் திருக்காட்சி நல்குக,என வேண்டினார். வாய்மூர் உறையும் இறைவர் ஞானசம்பந்தருக்கு மட்டும் தமது ஆடல்காட்சியைக் காட்ட பிள்ளையார் தளிரிள வளரென எனத் திருப்பதிகம் பாடிப் போற்றி அக்காட்சியை அப்பருக்கும் காட்டியருளி னார். பின்னர் அப்பரும் அவ்வருட் காட்சியைக் கண்டு பதிகம் பாடிப் போற்றினார். இருவரும் வாய்மூரில் சில நாள் தங்கி மகிழ்ந்து மீண்டும் திருமறைக்காடு சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைவாராயினர்.
நீண்ட நாள் தடைப்பட்டிற்கும் விஷயங்கள் விலக
தளிர் இள வளர் என உமை பாட, தாளம்(ம்) இட, ஓர் கழல் வீசி, கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து, ஆடும் வேடக் கிறிமையார்; விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு அணிந்து, ஓர் சென்னியின் மேல் வளர் இளமதியமொடு, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [1] |
வெந்தழல் வடிவினர்; பொடிப் பூசி, விரிதரு கோவண உடைமேல் ஓர் பந்தம் செய்து, அரவு அசைத்து, ஒலி பாடி, பல பல கடைதொறும் பலி தேர்வார்; சிந்தனை புகுந்து, எனக்கு அருள் நல்கி, செஞ்சுடர் வண்ணர் தம் அடி பரவ, வந்தனை பல செய, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [2] |
பண்ணின் பொலிந்த வீணையர்; பதினெண் கணமும் உணரா நஞ்சு உண்ணப் பொலிந்த மிடற்றினார்; உள்ளம் உருகின் உடன் ஆவார்; சுண்ணப்பொடி நீறு அணி மார்பர்; சுடர் பொன் சடை மேல் திகழ்கின்ற வண்ணப் பிறையோடு, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [3] |
எரி கிளர் மதியமொடு எழில் நுதல்மேல், எறி பொறி அரவினொடு, ஆறு மூழ்க விரி கிளர் சடையினர்; விடை ஏறி; வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார்; புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த வாய்மையர்; பொன்மிளிரும் வரி அரவு அரைக்கு அசைத்து, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [4] |
அஞ்சன மணிவணம் எழில் நிறமா அகம்மிடறு அணி கொள, உடல் திமில, நஞ்சினை, அமரர்கள் அமுதம் என, நண்ணிய நறு நுதல் உமை நடுங்க வெஞ்சின மால்களியானையின் தோல் வெரு உறப் போர்த்து, அதன் நிறமும் அஃதே, வஞ்சனை வடிவினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [5] |
அல்லிய மலர் புல்கு விரிகுழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ, எல்லி அம்போது கொண்டு எரி ஏந்தி, எழிலொடு தொழில் அவை இசைய வல்லார்; சொல்லிய அருமறை இசை பாடி, சூடு இளமதியினர்; தோடு பெய்து, வல்லியந்தோல் உடுத்து, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [6] |
கடிபடு கொன்றை நன்மலர் திகழும் கண்ணியர்; விண்ணவர் கன மணி சேர் முடி பில்கும் இறையவர்; மறுகில் நல்லார் முறை முறை பலி பெய, முறுவல் செய்வார்; பொடி அணி வடிவொடு, திரு அகலம் பொன் என மிளிர்வது ஒர் அரவினொடும், வடி நுனை மழுவினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [7] |
கட்டு இணை புதுமலர் கமழ் கொன்றைக்கண்ணியர்; வீணையர்; தாமும் அஃதே; எண் துணை சாந்தமொடு உமை துணையா, இறைவனார் உறைவது ஒர் இடம் வினவில், பட்டு இணை அகல் அல்குல் விரிகுழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய, வட்டணை ஆடலொடு, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [8] |
ஏனமருப்பினொடு எழில் ஆமை இசையப் பூண்டு, ஓர் ஏறு ஏறி, கானம் அது இடமா உறைகின்ற கள்வர்; கனவில் துயர் செய்து தேன் உண மலர்கள் உந்தி விம்மித் திகழ் பொன் சடைமேல் திகழ்கின்ற வான நல்மதியினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [9] |
சூடல் வெண்பிறையினர்; சுடர் முடியர்; சுண்ண வெண் நீற்றினர்; சுடர் மழுவர்; பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம்தார் பாம்பொடு ;நூல் அவை பசைந்து இலங்க, கோடல் நன் முகிழ்விரல் கூப்பி, நல்லார் குறை உறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய, வாடல் வெண்தலை பிடித்து, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [10] |
திங்களொடு அரு வரைப் பொழில் சோலைத் தேன் நலம் கானல் அம் திரு வாய்மூர், அங்கமொடு அருமறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்தம் அடி பரவி, நங்கள் தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ் மாலை தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி, உலகுக்கு ஓர் தவநெறியே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.050  
எங்கே என்ன, இருந்த இடம்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருவாய்மூர் ; (திருத்தலம் அருள்தரு பாலினுநன்மொழியம்மை உடனுறை அருள்மிகு வாய்மூரீசுவரர் திருவடிகள் போற்றி )
திருவருள் நலம்பெற்ற இரு பெருங்குரவர்களும் அடியார் புடைசூழத் திருமறைக்காட்டில் திருமடத்தில் தங்கினர். அன்றிரவு திருநாவுக்கரசர் தாம் அரிதில் திறக்கப்பாடியதையும், ஆளுடைய பிள்ளையார் விரைவில் அடைக்கப் பாடியதையும் எண்ணித் தம் பாடலுக்குக் கதவு திறக்கக் காலந்தாழ்ந்தமைக்குக் காரணம், இறைவன் திருக்குறிப்பை நாம் உணராது அயர்த்தமையே என்று கவைலகொண்டு திருமடத்தில் ஓர் பால் அறிதுயில் கொண்டார். அவர் கனவில் இறைவன் தோன்றி நாம் திருவாய்மூரில் இருப்போம் எம்மைத் தொடர்ந்து வா என்று கூறி மறைய, உடனே துயிலெழுந்து நாவுக்கரசரும் இறைவனைப் பின் தொடர்ந்து எங்கே யென்னை என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிக்கொண்டே வாய்மூருக்குச் சென்றார்.
எங்கே என்ன, இருந்த இடம் தேடிக்கொண்டு, அங்கே வந்து, அடையாளம் அருளினார்; தெங்கே தோன்றும் திரு வாய்மூர்ச் செல்வனார் அங்கே வா! என்று போனார்; அது என்கொலோ? | [1] |
மன்னு மா மறைக்காட்டு மணாளனார் உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத் தன்னை வாய் மூர்த் தலைவன் ஆமா சொல்லி, என்னை, வா! என்று போனார்; அது என்கொலோ? | [2] |
தஞ்சே கண்டேன்; தரிக்கிலாது, ஆர்? என்றேன்; அஞ்சேல்! உன்னை அழைக்க வந்தேன் என்றார்; உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன்; வஞ்சே வல்லரே, வாய்மூர் அடிகளே? | [3] |
கழியக் கண்டிலேன்; கண் எதிரே கண்டேன்; ஒழியப் போந்திலேன்; ஒக்கவே ஓட்டந்தேன்; வழியில் கண்டிலேன்; வாய்மூர் அடிகள் தம் சுழியில் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ? | [4] |
ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று உள்கி உள்கி, உகந்து, இருந்தேனுக்குத் தெள்ளியார் இவர் போல, திரு வாய்மூர்க் கள்ளியார் அவர் போல, கரந்ததே! | [5] |
யாதே செய்தும், யாம் அலோம்; நீ என்னில், ஆதே ஏயும்; அளவு இல் பெருமையான் மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார்- போதே! என்றும், புகுந்ததும், பொய்கொலோ? | [6] |
பாடிப் பெற்ற பரிசில் பழங் காசு வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப் போல்- தேடிக்கொண்டு, திரு வாய்மூர்க்கே எனா, ஓடிப் போந்து, இங்கு ஒளித்தஆறு என்கொலோ? | [7] |
திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந் நின்றார்; மறைக்க வல்லரோ, தம்மைத் திரு வாய்மூர்ப் பிறைக் கொள் செஞ்சடையார்? இவர் பித்தரே! | [8] |
தனக்கு ஏறாமை தவிர்க்க என்று வேண்டினும், நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன் எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா, புனற்கே பொன்கோயில் புக்கதும் பொய்கொலோ? | [9] |
தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால் மீண்டற்கும் மிதித்தார், அரக்கன் தனை; வேண்டிக் கொண்டேன், திரு வாய்மூர் விளக்கினை தூண்டிக் கொள்வன், நான் என்றலும், தோன்றுமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.077  
பாட அடியார், பரவக் கண்டேன்;
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருவாய்மூர் ; (திருத்தலம் அருள்தரு பாலினுநன்மொழியம்மை உடனுறை அருள்மிகு வாய்மூரீசுவரர் திருவடிகள் போற்றி )
முன்னே சென்று கொண்டிருந்த பெருமான் பொற்கோயில் ஒன்றைக் காட்டி மறைந்தனன். ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசர் வாய்மூருக்குச் சென்றதை யறிந்து அவரைத் தொடர்ந்து வாய்மூரை அடைந்தார்.திறக்கப்பாடிய என்னினும் அடைக்கப்பாடிய ஞானசம்பந்தரும் வந்துவிட்டார். இனியும் தம்மைக் காட்டாது மறைப்பரோன்று பாடினார். இறைவன் ஞானசம்பந்தர் காணக் காட்சி வழங்கினன். ஞானசம்பந்தர் காட்ட நாவுக்கரசரும் இறைவன் திருக்காட்சி கண்டு இன்புற்று பாட அடியார்என்று தொடங்கிப் பாடிப் பணிந்தார்.
பாட அடியார், பரவக் கண்டேன்; பத்தர் கணம் கண்டேன்; மொய்த்த பூதம் ஆடல் முழவம் அதிரக் கண்டேன்; அங்கை அனல் கண்டேன்; கங்கையாளைக் கோடல், அரவு, ஆர் சடையில் கண்டேன்; கொக்கின் இதழ் கண்டேன்; கொன்றை கண்டேன்; வாடல்-தலை ஒன்று கையில் கண்டேன்-வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. | [1] |
பாலின் மொழியாள் ஓர் பாகம் கண்டேன்; பதினெண்கணமும் பயிலக் கண்டேன்; நீல நிறமுண்ட கண்டம் கண்டேன்; நெற்றி-நுதல் கண்டேன்; பெற்றம் கண்டேன்; காலைக் கதிர் செய் மதியம் கண்டேன்; கரந்தை திருமுடிமேல்-தோன்றக் கண்டேன்; மாலைச் சடையும் முடியும் கண்டேன்-வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. | [2] |
மண்ணைத் திகழ நடம் அது ஆடும், வரை சிலம்பு ஆர்க்கின்ற, பாதம் கண்டேன்; விண்ணில்-திகழும் முடியும் கண்டேன்; வேடம் பல ஆம் சரிதை கண்டேன்; நண்ணிப் பிரியா மழுவும் கண்டேன்; நாலுமறை அங்கம் ஓதக் கண்டேன்; வண்ணம் பொலிந்து-இலங்கு கோலம் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. | [3] |
விளைத்த பெரும் பத்தி கூர, நின்று மெய் அடியார் தம்மை விரும்பக் கண்டேன்; இளைக்கும் கதம் நாகம் மேனி கண்டேன்; என் பின்கலம் திகழ்ந்து தோன்றக் கண்டேன்; திளைக்கும் திருமார்பில் நீறு கண்டேன்; சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற, அன்று, வளைத்த வரிசிலையும் கையில் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. | [4] |
கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன்; காலில் கழல் கண்டேன்; கரியின் தோல் கொண்டு ஊன் மறையப் போர்த்த வடிவும் கண்டேன்; உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன்; நால் மறையானோடு நெடிய மாலும் நண்ணி வரக் கண்டேன்; திண்ணம் ஆக மான்மறி தம் கையில் மருவக் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. | [5] |
அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்பக் கண்டேன்; அவ் அவர்க்கே ஈந்த கருணை கண்டேன்; முடி ஆர் சடைமேல் அரவம் மூழ்க மூரிப் பிறை போய் மறையக் கண்டேன்; கொடி, ஆர், அதன்மேல் இடபம் கண்டேன்; கோவணமும் கீளும் குலாவக் கண்டேன்; வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. | [6] |
குழை ஆர் திருத்தோடு காதில் கண்டேன்; கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்; இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன்; ஏழ் இசை யாழ், வீணை, முரலக் கண்டேன்; தழை ஆர் சடை கண்டேன்; தன்மை கண்டேன்; தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்; மழை ஆர் திருமிடறும் மற்றும் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. | [7] |
பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்; போற்று இசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்; பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன்; பார் ஆகிப் புனல் ஆகி நிற்கை கண்டேன்; விருந்து ஆய்ப் பரந்த தொகுதி கண்டேன்; மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்; மருந்து ஆய்ப் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. | [8] |
மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன்; வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன்; கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன்; கங்கணமும், அங்கைக் கனலும், கண்டேன்; ஐயம் பல ஊர் திரியக் கண்டேன்; அன்றவன் தன் வேள்வி அழித்து உகந்து, வையம் பரவ இருத்தல் கண்டேன்-வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. | [9] |
கலங்க இருவர்க்கு அழல் ஆய் நீண்ட காரணமும் கண்டேன்; கரு ஆய் நின்று, பலங்கள் தரித்து, உகந்த பண்பும் கண்டேன்; பாடல் ஒலி எலாம் கூடக் கண்டேன்; இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து, அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன்; வலங்கைத் தலத்துள் அனலும் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. | [10] |