சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.060   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருமாற்பேறு - திருக்குறுந்தொகை அருள்தரு கருணைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மால்வணங்குமீசர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=mvMHyNjAJWg   Add audio link Add Audio

ஏதும் ஒன்றும் அறிவு இலர் ஆயினும்,
ஓதி அஞ்சு எழுத்தும்(ம்) உணர்வார்கட்குப்
பேதம் இன்றி, அவர் அவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர், மாற்பேறரே.

1
திருமாற்பேற்றில் எழுந்தருளியிருக்கும் இறைவர் ஏதொன்றும் அறியாதவர்கள் ஆனாலும், திருவஞ்செழுத்தை ஓதி உணர்வார்கட்கு வேற்றுமையின்றி அவரவர் உள்ளத்தே தாமும் அம்பிகையுமாய் மகிழ்ந்து வீற்றிருப்பர்.

அச்சம் இல்லை; நெஞ்சே! அரன் நாமங்கள்
நிச்சலும் நினையாய், வினை போய் அற!
கச்ச மா விடம் உண்ட கண்டா! என,
வைச்ச மா நிதி ஆவர், மாற்பேறரே.

2
நெஞ்சே! அரன் திருநாமங்களை வினைகள் விட்டு நீங்குவதற்காக, நித்தமும் நினைவாயாக; உனக்கு அச்சமில்லை. திருமாற்பேற்று இறைவர், கைப்புள்ள ஆலகால விடத்தை உண்டதிரு நீலகண்டர் என்று அன்பொடுகூற, சேமித்து வைத்த மாநிதிபோலப் பயன்படுவர்.

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்!
கோத்திர(ம்) மும் குலமும் கொண்டு என் செய்வீர்?
பாத்திரம் சிவன் என்று பணிதிரேல்,
மாத்திரைக்குள் அருளும், மாற்பேறரே.

3
சாத்திரங்கள் பலவற்றைப் பேசும் தீயவர்களே! கோத்திரம், குலம் முதலியவற்றைக் கொண்டு என்ன செய்வீர்! பணிதற்குரிய பொருள் சிவபரம்பொருளே என்று கொண்டு பணிவீராயின், திருமாற்பேற்று இறைவர் ஒருமாத்திரைப் பொழுதுக்குள் அருளுவர்.

இருந்து சொல்லுவன்; கேண்மின்கள்: ஏழைகாள்!
அருந்தவம் தரும், அஞ்சு எழுத்து ஓதினால்;
பொருந்து நோய் பிணி போகத் துரப்பது ஓர்
மருந்தும் ஆகுவர், மன்னும் மாற்பேறரே.

4
அறிவில்லாதவர்களே! சிந்தித்திருந்து சொல்லுவேன்; கேட்பீர்களாக! அரிய தவத்தினாலாய பயனைத்தரும் திருவஞ்செழுத்தை ஓதினால் திருமாற்பேற்று இறைவர் உம்மைப் பொருந்தியுள்ள நோய்களாகிய பிணிகள் போகும்படி துரத்துவதாகும் ஒப்பற்ற மருந்தும் ஆவர்.

சாற்றிச் சொல்லுவன்; கேண்மின்: தரணியீர்!
ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால்,
கூற்றை நீக்கிக் குறைவு அறுத்து ஆள்வது ஓர்
மாற்று இலாச் செம்பொன் ஆவர், மாற்பேறரே.

5
உலகில் உள்ளவர்களே! எல்லோரும் அறியச் சொல்லுவேன் கேட்பீர்களாக; இடபத்தின் மேல் வருவாராகிய திருமாற்பேற்று இறைவர் திருவடிகளை ஏத்தினால், உம்மைக் கொள்ளவரும் கூற்றுவனை நீக்கி, குறைகளை அறுத்து, ஆள்கின்ற மாற்றில்லாத செம்பொன்னை ஒப்பர்.
Go to top

ஈட்டும் மா நிதி சால இழக்கினும்,
வீட்டும் காலன் விரைய அழைக்கினும்,
காட்டில் மாநடம் ஆடுவாய், கா! எனில்,
வாட்டம் தீர்க்கவும் வல்லர், மாற்பேறரே.

6
வருந்திச் சேர்த்த பெருஞ்செல்வத்தை மிகுதியாக இழந்தாலும், அழிக்கும் காலன் விரையவந்து அழைத்தாலும், சுடு காட்டில் பெரிய நடனம் ஆடுகின்ற பெருமானே! காப்பாற்றுவாயாக! என்றழைத்தால், திருமாற்பேற்றிறைவர் வாட்டம் தீர்க்கவும் வல்லவராவர்.

ஐயனே! அரனே! என்று அரற்றினால்,
உய்யல் ஆம்; உலகத்தவர் பேணுவர்;
செய்ய பாதம் இரண்டும் நினையவே,
வையம் ஆளவும் வைப்பர், மாற்பேறரே.

7
தலைவனே! சிவபெருமானே! என்று வாய்விட்டு அரற்றினால் உய்தி அடையலாம்; அதுவன்றியும் உலகத்திலுள்ளவர் பேணி மதிப்புச்செய்வர்; அப்பெருமானின் இரண்டு சிவந்த திருப் பாதங்களை நினைத்தால் திருமாற்பேற்று இறைவர் உலகத்தை ஆளவும் வைப்பர்.

உந்திச் சென்று மலையை எடுத்தவன்
சந்து தோளொடு தாள் இற ஊன்றினான்
மந்தி பாய் பொழில் சூழும்-மாற்பேறு என,
அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே.

8
செருக்கு தன்னை உந்தித்தள்ளுதலால் சென்று திருக் கயிலாயத்தை எடுத்தவனாகிய இராவணனது சந்தனம் பூசிய தோளும் தாள்களும் இறுமாறு திருவிரலால் ஊன்றிய பெருமானுக்குரியதும், பெண்குரங்குகள் பாயும் பொழில் சூழ்வதுமாகிய திருமாற்பேறு என்று கூறினால் முடிவில்லாத ஒப்பற்ற இன்பம் அணுகும்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமாற்பேறு
1.055   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு,
Tune - பழந்தக்கராகம்   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
1.114   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   குருந்து அவன், குருகு அவன்,
Tune - வியாழக்குறிஞ்சி   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
4.108   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாணிக்கு உயிர் பெறக் கூற்றை
Tune - திருவிருத்தம்   (திருமாற்பேறு அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
5.059   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொரும் ஆற்றின் படை வேண்டி,
Tune - திருக்குறுந்தொகை   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
5.060   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஏதும் ஒன்றும் அறிவு இலர்
Tune - திருக்குறுந்தொகை   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
6.080   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாரானை; பாரினது பயன் ஆனானை;
Tune - திருத்தாண்டகம்   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org