சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.070   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கொண்டீச்சரம் - திருக்குறுந்தொகை அருள்தரு சாந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு பசுபதீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=Fs6i7rvUFuw   Add audio link Add Audio

கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பால்
மண்டி ஏச்சுணும் மாதரைச் சேராதே,
சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அக்
கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே!

1
காளை போன்ற ஆடவரிடத்துப் பொருந்திக் கண்டவாறு பேசும் பேச்சாகிய ஏச்சுண்ணும் பெண்களைச் சேராது , சண்டீச்சுரர்க்கு அருள் செய்த கொண்டீச்சுரத்து இறைவன் திருவடியைக் கூறுவீராக .

சுற்றமும், துணை நல் மடவாளொடு,
பெற்ற மக்களும், பேணல் ஒழிந்தனர்;
குற்றம் இல் புகழ்க் கொண்டீச்சுரவனார்
பற்று அலால், ஒரு பற்று மற்று இல்லையே.

2
சுற்றத்தாரும் , வாழ்க்கைத்துணையாகிய நல்ல மனைவியோடு பெற்ற பிள்ளைகளும் பேணுதலை ஒழிந்தனராதலால் , குற்றமற்ற புகழை உடைய கொண்டீச்சுரத்து இறைவரையன்றி ஒரு பற்று மற்று இல்லை .

மாடு தான் அது இல் எனின், மானுடர்
பாடுதான் செல்வார் இல்லை; பல்மாலையால்
கூட நீர் சென்று, கொண்டீச்சுரவனைப்
பாடுமின்! பரலோகத்து இருத்துமே.

3
செல்வம் இல்லையென்றால் , மாநுடர் பெருமையோடு சூழச் செல்வாரில்லை . ஆதலால் , பல மாலைகளாற் கூட , நீர் சென்று கொண்டீச்சுரத்து இறைவனைப் பாடுவீராக ; அவ்விறைவன் பரலோகத்து இருக்கவைக்கும் .

தந்தை, தாயொடு, தாரம், எனும் தளை-
பந்தம் ஆங்கு அறுத்து, பயில்வு எய்திய
கொந்து அவிழ் பொழில் கொண்டீச்சுரவனைச்
சிந்தை செய்ம்மின்கள், சேவடி சேரவே!

4
தந்தையும் தாயும் தாரமுமாகிய கட்டாகிய தளையை அறுத்துப் பூங்கொத்துக்கள் பெருகி மலர்கின்ற பொழில்களை உடைய கொண்டீச்சுரத்து இறைவனைச் சேவடி சேர்வதன் பொருட்டுச் சிந்தை செய்வீர்களாக .

கேளுமின்(ன்): இளமை அது கேடு வந்து
ஈளையோடு இருமல்(ல்) அது எய்தல் முன்,
கோள் அரா அணி கொண்டீச்சுரவனை
நாளும் ஏத்தித் தொழுமின்! நன்கு ஆகுமே.

5
மனிதர்களே ! கேட்பீர்களாக ; இளமைக்குக் கேடு வந்து சளியோடு கூடிய இருமல் வந்தெய்துவதற்குமுன் கொள்ளுகின்ற பாம்பினை அணிகின்ற கொண்டீச்சுரத்து இறைவனை நாளும் ஏத்தித் தொழுவீராக ; உமக்கு நல்லனவே ஆகும்
Go to top

வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்பமும் துயரும்(ம்) எனும் சூழ்வினை,
கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை,
எம்பிரான்! என வல்லவர்க்கு இல்லையே.

6
பூங்கொம்பைப்போன்ற பெண்கள் பயில்கின்ற கொண்டீச்சுரத்து இறைவனை ` எம்பிரான் ` என்று ஏத்தவல்லவர்க்கு , வெம்புதற்குக் காரணமாகிய நோயும் , துன்பமும் , வறுமையும் முதலிய சூழ்தற்குரிய வினைகள் இல்லை .

அல்லலோடு அருநோயில் அழுந்தி, நீர்,
செல்லுமா நினையாதே, கனை குரல்
கொல்லை ஏறு உடைக் கொண்டீச்சுரவனை
வல்ல ஆறு தொழ, வினை மாயுமே.

7
துன்பத்தோடு அருநோய்களில் அழுந்திச் செல்லும் நெறி எது என்று நினையாமல் , நீர் , கனைத்த குரலை உடைய முல்லை நிலத்துக்குரிய இடபவாகனத்தை ஊர்ந்தவனாகிய கொண்டீச்சுரத்து இறைவனை வல்லவாறு தொழுவீரேயாயின் வினைகள் மாயும் .

நாறு சாந்து அணி நல்முலை, மென்மொழி,
மாறு இலா மலைமங்கை ஓர்பாகமாக்
கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்து
ஊறுவார் தமக்கு ஊனம் ஒன்று இல்லையே.

8
நறுமணம் வீசும் கலவைச்சாந்தணிந்த நல்ல தனங்களையும் மெல்லிய மொழிகளையும் உடைய மாறுபாடற்ற உமா தேவியை ஒருபாகமாகக்கொண்ட கூற்றை உடையவராகிய பெருமான் உறைகின்ற கொண்டீச்சுரத்தை நினைத்து நெஞ்சில் மேலும் மேலும் எண்ணுபவர்களுக்குக் குற்றம் ஒன்றும் இல்லை .

அயில் ஆர் அம்பு எரி, மேரு வில், ஆகவே
எயிலாரும் பொடி ஆய் விழ எய்தவன்,
குயில் ஆரும் பொழில் கொண்டீச்சுரவனைப்
பயில்வாரும் பெருமை பெறும் பாலரே.

9
மேருமலையை வில்லாகக் கொண்டு கூர்மையையுடைய ஓரம்பினால் முப்புரங்கள் தூளாகுமாறு விழ எரியால் எய்தவனாகிய , குயில்களை உடைய பொழில் சூழ்ந்த கொண்டீச்சுரத்து இறைவனைப் பயில்கின்ற அடியவர்கள் பெருமை பெறும் பகுதியை உடையவராவர் .

நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான் தனை
மலையினால் அடர்த்து(வ்) விறல் வாட்டினான்,
குலையின் ஆர் பொழில் கொண்டீச்சுரவனைத்
தலையினால் வணங்க, தவம் ஆகுமே.

10
நிலையினைப் பொருந்திய திருக்கயிலையை ஆணவத்தொடு நின்று எடுத்த இராவணனை மலையினால் வருத்தி அவன் ஆற்றலை வாட்டியவனாகிய , குலைகள் பொருந்திய சோலையையுடைய பொழில்கள் சூழ்ந்த கொண்டீச்சுரத்து இறைவனைத் தலையினால் வணங்கலே தவம் ஆகும் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கொண்டீச்சரம்
4.067   திருநாவுக்கரசர்   தேவாரம்   வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப்
Tune - திருநேரிசை   (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)
5.070   திருநாவுக்கரசர்   தேவாரம்   கண்ட பேச்சினில் காளையர் தங்கள்
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000