கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பால் மண்டி ஏச்சுணும் மாதரைச் சேராதே, சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அக் கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே!
|
1
|
காளை போன்ற ஆடவரிடத்துப் பொருந்திக் கண்டவாறு பேசும் பேச்சாகிய ஏச்சுண்ணும் பெண்களைச் சேராது , சண்டீச்சுரர்க்கு அருள் செய்த கொண்டீச்சுரத்து இறைவன் திருவடியைக் கூறுவீராக . | |
சுற்றமும், துணை நல் மடவாளொடு, பெற்ற மக்களும், பேணல் ஒழிந்தனர்; குற்றம் இல் புகழ்க் கொண்டீச்சுரவனார் பற்று அலால், ஒரு பற்று மற்று இல்லையே.
|
2
|
சுற்றத்தாரும் , வாழ்க்கைத்துணையாகிய நல்ல மனைவியோடு பெற்ற பிள்ளைகளும் பேணுதலை ஒழிந்தனராதலால் , குற்றமற்ற புகழை உடைய கொண்டீச்சுரத்து இறைவரையன்றி ஒரு பற்று மற்று இல்லை . | |
மாடு தான் அது இல் எனின், மானுடர் பாடுதான் செல்வார் இல்லை; பல்மாலையால் கூட நீர் சென்று, கொண்டீச்சுரவனைப் பாடுமின்! பரலோகத்து இருத்துமே.
|
3
|
செல்வம் இல்லையென்றால் , மாநுடர் பெருமையோடு சூழச் செல்வாரில்லை . ஆதலால் , பல மாலைகளாற் கூட , நீர் சென்று கொண்டீச்சுரத்து இறைவனைப் பாடுவீராக ; அவ்விறைவன் பரலோகத்து இருக்கவைக்கும் . | |
தந்தை, தாயொடு, தாரம், எனும் தளை- பந்தம் ஆங்கு அறுத்து, பயில்வு எய்திய கொந்து அவிழ் பொழில் கொண்டீச்சுரவனைச் சிந்தை செய்ம்மின்கள், சேவடி சேரவே!
|
4
|
தந்தையும் தாயும் தாரமுமாகிய கட்டாகிய தளையை அறுத்துப் பூங்கொத்துக்கள் பெருகி மலர்கின்ற பொழில்களை உடைய கொண்டீச்சுரத்து இறைவனைச் சேவடி சேர்வதன் பொருட்டுச் சிந்தை செய்வீர்களாக . | |
கேளுமின்(ன்): இளமை அது கேடு வந்து ஈளையோடு இருமல்(ல்) அது எய்தல் முன், கோள் அரா அணி கொண்டீச்சுரவனை நாளும் ஏத்தித் தொழுமின்! நன்கு ஆகுமே.
|
5
|
மனிதர்களே ! கேட்பீர்களாக ; இளமைக்குக் கேடு வந்து சளியோடு கூடிய இருமல் வந்தெய்துவதற்குமுன் கொள்ளுகின்ற பாம்பினை அணிகின்ற கொண்டீச்சுரத்து இறைவனை நாளும் ஏத்தித் தொழுவீராக ; உமக்கு நல்லனவே ஆகும் | |
| Go to top |
வெம்பு நோயும் இடரும் வெறுமையும் துன்பமும் துயரும்(ம்) எனும் சூழ்வினை, கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை, எம்பிரான்! என வல்லவர்க்கு இல்லையே.
|
6
|
பூங்கொம்பைப்போன்ற பெண்கள் பயில்கின்ற கொண்டீச்சுரத்து இறைவனை ` எம்பிரான் ` என்று ஏத்தவல்லவர்க்கு , வெம்புதற்குக் காரணமாகிய நோயும் , துன்பமும் , வறுமையும் முதலிய சூழ்தற்குரிய வினைகள் இல்லை . | |
அல்லலோடு அருநோயில் அழுந்தி, நீர், செல்லுமா நினையாதே, கனை குரல் கொல்லை ஏறு உடைக் கொண்டீச்சுரவனை வல்ல ஆறு தொழ, வினை மாயுமே.
|
7
|
துன்பத்தோடு அருநோய்களில் அழுந்திச் செல்லும் நெறி எது என்று நினையாமல் , நீர் , கனைத்த குரலை உடைய முல்லை நிலத்துக்குரிய இடபவாகனத்தை ஊர்ந்தவனாகிய கொண்டீச்சுரத்து இறைவனை வல்லவாறு தொழுவீரேயாயின் வினைகள் மாயும் . | |
நாறு சாந்து அணி நல்முலை, மென்மொழி, மாறு இலா மலைமங்கை ஓர்பாகமாக் கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்து ஊறுவார் தமக்கு ஊனம் ஒன்று இல்லையே.
|
8
|
நறுமணம் வீசும் கலவைச்சாந்தணிந்த நல்ல தனங்களையும் மெல்லிய மொழிகளையும் உடைய மாறுபாடற்ற உமா தேவியை ஒருபாகமாகக்கொண்ட கூற்றை உடையவராகிய பெருமான் உறைகின்ற கொண்டீச்சுரத்தை நினைத்து நெஞ்சில் மேலும் மேலும் எண்ணுபவர்களுக்குக் குற்றம் ஒன்றும் இல்லை . | |
அயில் ஆர் அம்பு எரி, மேரு வில், ஆகவே எயிலாரும் பொடி ஆய் விழ எய்தவன், குயில் ஆரும் பொழில் கொண்டீச்சுரவனைப் பயில்வாரும் பெருமை பெறும் பாலரே.
|
9
|
மேருமலையை வில்லாகக் கொண்டு கூர்மையையுடைய ஓரம்பினால் முப்புரங்கள் தூளாகுமாறு விழ எரியால் எய்தவனாகிய , குயில்களை உடைய பொழில் சூழ்ந்த கொண்டீச்சுரத்து இறைவனைப் பயில்கின்ற அடியவர்கள் பெருமை பெறும் பகுதியை உடையவராவர் . | |
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான் தனை மலையினால் அடர்த்து(வ்) விறல் வாட்டினான், குலையின் ஆர் பொழில் கொண்டீச்சுரவனைத் தலையினால் வணங்க, தவம் ஆகுமே.
|
10
|
நிலையினைப் பொருந்திய திருக்கயிலையை ஆணவத்தொடு நின்று எடுத்த இராவணனை மலையினால் வருத்தி அவன் ஆற்றலை வாட்டியவனாகிய , குலைகள் பொருந்திய சோலையையுடைய பொழில்கள் சூழ்ந்த கொண்டீச்சுரத்து இறைவனைத் தலையினால் வணங்கலே தவம் ஆகும் . | |
| Go to top |