சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.091   திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -தனித் திருக்குறுந்தொகை - திருக்குறுந்தொகை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=XxaVOKR-ShI   Add audio link Add Audio

ஏ இலானை, என் இச்சை அகம்படிக்-
கோயிலானை, குணப் பெருங்குன்றினை,
வாயிலானை, மனோன்மணியைப் பெற்ற
தாய் இலானை, தழுவும், என் ஆவியே.

1
தமக்குமேல் தலைவன் இல்லாதவன். உள்ளக் கோயிலான். குணக்குன்று. வாழ்த்துவோர் வாய் இல்லமாக உடையவன். சத்தியை ஈன்றவன். தனக்கொரு தாய் இல்லாதவன். அவனை என்னுயிர் தழுவும்.

முன்னை ஞான முதல்-தனி வித்தினை;
பின்னை ஞானப் பிறங்கு சடையனை;
என்னை ஞானத்து, இருள் அறுத்து, ஆண்டவன்
தன்னை; ஞானத்தளை இட்டு வைப்பனே.

2
பழைய ஞான முதல் தனி வித்தும், பின்னை ஞானம் பிறங்கு சடையனும் , என்னை இருள் நீக்கி ஞானத்தால் ஆண்டவனும் ஆகிய இறைவன் தன்னை ஞானமென்னும் தளையினால் பிணித்து உள்ளத்தே வைப்பேன்.

ஞானத்தால்-தொழுவார், சிலஞானிகள்;
ஞானத்தால்-தொழுவேன், உனை நான், அலேன்;
ஞானத்தால்-தொழுவார்கள் தொழ, கண்டு,
ஞானத்தால் உனை, நானும் தொழுவனே.

3
சில ஞானிகள் நின்னை ஞானத்தால் தொழுவார்கள்; ஞானத்தால் உன்னை நான் தொழும் திறம் உடையேனல்லேன்; ஞானத்தால் தொழுகின்றவர்கள் தொழுதலைக் கண்டு, ஞானவடிவாகிய பொருளே! உன்னை நானும் தொழுவன்.

புழுவுக்கும் குணம் நான்கு; எனக்கும்(ம்) அதே;
புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை;
புழுவினும் கடையேன் புனிதன் தமர்-
குழுவுக்கு எவ்விடத்தேன், சென்று கூடவே?

4
புழுவுக்கும் குணம் நான்கு; எனக்கும் அவ்வாறே. ஆயினும் எனக்குள்ள பொல்லாங்கு புழுவுக்கில்லையாதலின் புழு வினுங்கடையேனாகிய அடியேன் புனிதனாகிய பெருமானைச் சார்ந்த அடியார் குழுவினுக்குச் சென்றுகூட எவ்விடத்தை உடையேன் ஆவேன்?.

மலையே வந்து விழினும், மனிதர்காள்!
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரே?
தலைவன் ஆகிய ஈசன் தமர்களை,
கொலை செய் யானைதான், கொன்றிடுகிற்குமே?

5
மனிதர்களே! மலையே வந்து விழுந்தாலும் தத்தம் நிலையில் நின்று கலங்காதீர்கள். ஈசன் அடியார்களை ஐம்பொறிகளாகிய யானைகள் கொன்றுவிடுமோ? கொல்லாவாம்.
Go to top

கற்றுக் கொள்வன வாய் உள, நா உள;
இட்டுக் கொள்வன பூ உள; நீர் உள;
கற்றைச் செஞ்சடையான் உளன்; நாம் உளோம்;
எற்றுக்கோ, நமனால் முனிவுண்பதே?

6
திருவைந்தெழுத்தைக் கற்றுக்கொள்ளுவதற்கு வாயும் நாவும் உள்ளன; இட்டுக்கொள்ளப் பூவும், நீரும் உள்ளன; தொகுதியாகிய சிவந்த சடையான் உள்ளான்; நாம் உள்ளோம். இவை யெல்லாம் இருக்க எமனால் முனிவுண்பது எற்றுக்கு?

மனிதர்காள்! இங்கே வம்! ஒன்று சொல்லுகேன்;
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே?
புனிதன், பொன்கழல் ஈசன், எனும் கனி
இனிது சாலவும், ஏசற்றவர்கட்கே.

7
மனிதர்களே! இங்கே வாருங்கள்; ஒன்று சொல்லுவேன்; பழம் தந்தால் பழத்தை உண்ணவும் வல்லமை உடையீரோ? புனிதனும் கழல்கள் அணிந்த இறைவனும் ஆகிய கனி; ஏசற்றவர்களுக்கு மிகவும் இனியது; காண்பீராக.

என்னை ஏதும் அறிந்திலன், எம்பிரான்;
தன்னை, நானும் முன், ஏதும் அறிந்திலேன்;
என்னைத் தன் அடியான் என்று அறிதலும்,
தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே.

8
முன் என்னையே ஏதும் அறிந்திலேன்; எம் பெருமானையும் அறிந்திலேன். என்னைத் தன் அடியான் என்று பெருமான் அறிதலும் தன்னைக்காணும் தலைவன் என்று நானும் அறிந்துகொண்டேன்.

தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பது ஓர்
உள்ளத் தேறல்; அமுத ஒளி; வெளி;
கள்ளத்தேன், கடியேன், கவலைக்கடல்-
வெள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்ததே?

9
மிக்குத் தெளிந்து தித்திப்பதாகிய ஒப்பற்ற உள்ளத்தேன்; அமுதப்பேரொளியும் வெளியும் ஆகிய அவ் அநுபவம் கள்ளம் உடையேனும், கவலைக்கடலைக் கடியாது அவ்வெள்ளத்தே விழுந்துகிடப்பேனுமாகிய எனக்கு விளைந்தது எவ்வாறு?

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது -தனித் திருக்குறுந்தொகை
5.089   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;
Tune - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )
5.090   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாசு இல் வீணையும், மாலை
Tune - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )
5.091   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஏ இலானை, என் இச்சை
Tune - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org