நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை ஆலடைந்த நீழன்மேவி யருமறை சொன்னதென்னே சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.
|
1
|
நீறடைந்த மேனியின்க ணேரிழை யாளொருபால் கூறடைந்த கொள்கையன்றிக் கோல வளர்சடைமேல் ஆறடைந்த திங்கள்சூடி யரவம ணிந்ததென்னே சேறடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.
|
2
|
ஊனடைந்த வெண்டலையி னோடுப லிதிரிந்து கானடைந்த பேய்களோடு பூதங்க லந்துடனே மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னே தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே.
|
3
|
வீணடைந்த மும்மதிலும் வின்மலை யாவரவின் நாணடைந்த வெஞ்சரத்தா னல்லெரி யூட்டலென்னே பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார் சேணடைந்த மாடமல்கு சேய்ஞலூர் மேயவனே.
|
4
|
பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய் வேயடைந்த தோளியஞ்ச வேழமுரி த்ததென்னே வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித் தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே.
|
5
|
Go to top |
காடடைந்த வேனமொன்றின் காரண மாகிவந்து வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய் சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே.
|
6
|
பீரடைந்த பாலதாட்டப் பேணாத வன்றாதை வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத் தாரடைந்த மாலைசூட்டித் தலைமைவ குத்ததென்னே சீரடைந்த கோயின்மல்கு சேய்ஞலூர் மேயவனே.
|
7
|
மாவடைந்த தேரரக்கன் வலி தொலை வித்தவன்றன் நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யும் சேவடைந்த வூர்தியானே சேய்ஞலூர் மேயவனே.
|
8
|
காரடைந்த வண்ணனோடு கனகம னையானும் பாரடைந்தும் விண்பறந்தும் பாதமு டிகாணார் சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே.
|
9
|
மாசடைந்த மேனியாரு மனந்திரி யாதகஞ்சி நேசடைந்த வூணினாரு நேசமிலாததென்னே வீசடைந்த தோகையாட விரைகம ழும்பொழில்வாய்த் தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே.
|
10
|
Go to top |
சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித் தோயடைந்த வண்வயல்சூழ் தோணிபு ரத்தலைவன் சாயடைந்த ஞானமல்கு சம்பந்த னின்னுரைகள் வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே.
|
11
|