![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=I3ZgtC3Dewg Add audio link
2.111
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருவாய்மூர் - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு பாலினுநன்மொழியம்மை உடனுறை அருள்மிகு வாய்மூரீசுவரர் திருவடிகள் போற்றி
அப்பர் அரிய வேதங்களால் திருக்காப்பிடப்பெற்றகதவுகள் தாம் பாடிய திருப்பதிகத்தால் அரிதில் திறக்கப்பெற்றதையும் ஞானசம்பந்தரின் பாடலுக்கு எளிதில் அடைத்துக் கொண்டதையும் எண்ணியவராய்த் துயில் கொண்டார். அவர் தம் மனக்கருத்தை அறிந்த இறைவன் அவர் எதிரே சைவ வேடத்துடன் காட்சி நல்கி நாம் வாய்மூரில் இருக்கின்றோம். நம்மைத் தொடர்ந்து வருக என அழைத்து முன்னே செல்ல அவரைப் பின் தொடர்ந்து சென்றார் அப்பர் நெடுந்தூரம் சென்ற நிலையில் பெருமான் மறைந்தார். அப்பர் வாய்மூரை அடைந்து வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். இந்நிலை யில் அப்பரை அவர்தம் திருமடத்தில் காணாத ஞானசம்பந்தர் அவர் சென்ற வழி கேட்டறிந்து அவரைத் தேடித் திருவாய்மூர் வந்தடைந் தார். ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த அப்பர் அவரைக் கண்டு மகிழ்ந்து தாம் அருளிய திருப்பதிகத்தில் திறக்கப்பாடிய என்னினும் சிறப்புடைய செந்தமிழ்பாடித் திருக்கதவம்அடைப்பித்த ஞானசம்பந்தர் வந்துள்ளார் திருக்காட்சி நல்குக,என வேண்டினார். வாய்மூர் உறையும் இறைவர் ஞானசம்பந்தருக்கு மட்டும் தமது ஆடல்காட்சியைக் காட்ட பிள்ளையார் தளிரிள வளரென எனத் திருப்பதிகம் பாடிப் போற்றி அக்காட்சியை அப்பருக்கும் காட்டியருளி னார். பின்னர் அப்பரும் அவ்வருட் காட்சியைக் கண்டு பதிகம் பாடிப் போற்றினார். இருவரும் வாய்மூரில் சில நாள் தங்கி மகிழ்ந்து மீண்டும் திருமறைக்காடு சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைவாராயினர்.
நீண்ட நாள் தடைப்பட்டிற்கும் விஷயங்கள் விலக
தளிரிள வளரென வுமைபாடத் தாளம் மிடவோர் கழல்வீசிக்
கிளரிள மணியர வரையார்த் தாடும் வேடக் கிறிமையார்
விளரிள முலையவர்க் கருணல்கி வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
வளரிள மதியமொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
1
வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி விரிதரு கோவண வுடைமேலோர்
பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப் பலபல கடைதொறும் பலிதேர்வார்
சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச் செஞ்சுடர் வண்ணர்தம் அடிபரவ
வந்தனை பலசெய இவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
2
பண்ணிற் பொலிந்த வீணையர் பதினெண் கணமு முணராநஞ்
சுண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகில் உடனாவார்
சுண்ணப் பொடிநீ றணிமார்பர் சுடர்பொற் சடைமேற் றிகழ்கின்ற
வண்ணப் பிறையோ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
3
எரிகிளர் மதியமொ டெழினுதன்மேல் எறிபொறி யரவினொ டாறுமூழ்க
விரிகிளர் சடையினர் விடையேறி வெருவவந் திடர்செய்த விகிர்தனார்
புரிகிளர் பொடியணி திருவகலம் பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும்
வரியர வரைக்கசைத் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
4
அஞ்சன மணிவணம் எழில்நிறமா வகமிட றணிகொள வுடல்திமில
நஞ்சினை யமரர்கள் அமுதமென நண்ணிய நறுநுதல் உமைநடுங்க
வெஞ்சின மால்களி யானையின்தோல் வெருவுறப் போர்த்ததநிறமு மஃதே
வஞ்சனை வடிவினொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
5
Go to top
அல்லிய மலர்புல்கு விரிகுழலார் கழலிணை யடிநிழ லவைபரவ
எல்லியம் போதுகொண் டெரியேந்தி யெழிலொடு தொழிலவை யிசையவல்லார்
சொல்லிய அருமறை யிசைபாடிச் சூடிள மதியினர் தோடுபெய்து
வல்லியந் தோலுடுத் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
6
கடிபடு கொன்றைநன் மலர்திகழுங் கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்
முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார் முறைமுறை பலிபெய முறுவல்செய்வார்
பொடியணி வடிவொடு திருவகலம் பொன்னென மிளிர்வதொர் அரவினொடும்
வடிநுனை மழுவினொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
7
கட்டிணை புதுமலர்க் கமழ்கொன்றைக் கண்ணியர் வீணையர் தாமுமஃதே
எட்டுணை சாந்தமொ டுமைதுணையா இறைவனா ருறைவதொர் இடம்வினவில்
பட்டிணை யகலல்குல் விரிகுழலார் பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வட்டணை யாடலொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
8
ஏனம ருப்பினொ டெழிலாமை யிசையப் பூண்டோ ரேறேறிக்
கானம திடமா வுறைகின்ற கள்வர் கனவிற் றுயர்செய்து
தேனுண மலர்கள் உந்திவிம்மித் திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற
வானநன் மதியினொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
9
சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர் சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார் பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார் குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வாடல்வெண் டலைபிடித் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
10
Go to top
திங்களொ டருவரைப் பொழிற்சோலைத் தேனலங் கானலந் திருவாய்மூர்
அங்கமொ டருமறை யொலிபாடல் அழல்நிற வண்ணர்தம் மடிபரவி
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல ஞானசம் பந்தன் தமிழ்மாலை
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார் தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவாய்மூர்
2.111
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தளிர் இள வளர் என
Tune - நட்டராகம்
(திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
5.050
திருநாவுக்கரசர்
தேவாரம்
எங்கே என்ன, இருந்த இடம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
6.077
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாட அடியார், பரவக் கண்டேன்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000