பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச் சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் தீண்டற் கரிய திருவுருவை வெற்றி யூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்த ஒற்றி யூரெ முத்தமனை யுள்ளத் துள்ளேவைத்தேனே.
|
1
|
ஆனைக் காவி லணங்கினை யாரூர் நிலாய வம்மானைக் கானப் பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினை வானப் பேரார் வந்தேத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை மானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே.
|
2
|
மதியங் கண்ணி ஞாயிற்றை மயக்கந் தீர்க்கு மருந்தினை அதிகை மூதூ ரரசினை யையா றமர்ந்த வையனை விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற் குள்ள நிறைந்ததே.
|
3
|
புறம்ப யத்தெம் முத்தினைப் புகலூ ரிலங்கு பொன்னினை உறந்தை யோங்கு சிராப்பள்ளி யுலகம் விளக்கு ஞாயிற்றைக் கறங்கு மருவிக் கழுக்குன்றிற் காண்பார் காணுங் கண்ணானை அறஞ்சூ ழதிகை வீரட்டத் தரிமா னேற்றை யடைந்தேனே.
|
4
|
கோலக் காவிற் குருமணியைக் குடமூக் குறையும் விடமுணியை ஆலங் காட்டி லந்தேனை யமரர் சென்னி யாய்மலரைப் பாலிற் றிகழும் பைங்கனியைப் பராய்த் துறையெம் பசும்பொன்னைச் சூலத் தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே.
|
5
|
Go to top |
மருக லுறைமா ணிக்கத்தை வலஞ்சு ழி( ய் )யின் மாலையைக் கருகா வூரிற் கற்பகத்தைக் காண்டற் கரிய கதிரொளியைப் பெருவே ளூரெம் பிறப்பிலியைப் பேணு வார்கள் பிரிவரிய திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் சிந்தை யுள்ளே வைத்தேனே.
|
6
|
எழிலா ரிராச சிங்கத்தை யிராமேச் சுரத்தெ மெழிலேற்றைக் குழலார் கோதை வரைமார்பிற் குற்றா லத்தெங் கூத்தனை நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை அழலார் வண்ணத் தம்மானை யன்பி லணைத்து வைத்தேனே.
|
7
|
மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட் டுறையு மணாளனை ஆலைக் கரும்பி னின்சாற்றை யண்ணா மலையெம் மண்ணலைச் சோலைத் துருத்தி நகர்மேய சுடரிற் றிகழுந் துளக்கிலியை மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கி யிட்டேனே.
|
8
|
சோற்றுத் துறையெஞ் சோதியைத் துருத்தி மேய தூமணியை ஆற்றிற் பழனத் தம்மானை யால வாயெம் மருமணியை நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ணெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத் தோற்றக் கடலையட லேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே.
|
9
|
புத்தூ ருறையும் புனிதனைப் பூவ ணத்தெம் போரேற்றை வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக் குடியெம் வேதியனைப் பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் பொதியின் மேய புராணனை வைத்தே னென்றன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே.
|
10
|
Go to top |
முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளே றூர்ந்தானை அந்திச் செவ்வான் படியானை யரக்க னாற்ற லழித்தானைச் சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன் மாலை யடிச்சேர்த்தி எந்தை பெம்மா னென்னெம்மா னென்பார் பாவநாசமே.
|
11
|