மறையது பாடிப் பிச்சைக் கென்றகந் திரிந்து வாழ்வார் பிறையது சடைமு டிமேற் பெய்வளை யாள்த னோடும் கறையது கண்டங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் இறையவர் பாட லாட லிலங்குமேற் றளிய னாரே.
|
1
|
மாலன மாயன் றன்னை மகிழ்ந்தனர் விருத்த ராகும் பாலனார் பசுப தியார் பால்வெள்ளை நீறு பூசிக் காலனைக் காலாற் செற்றார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் ஏலநற் கடம்பன் றந்தை யிலங்குமேற் றளிய னாரே.
|
2
|
விண்ணிடை விண்ண வர்கள் விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப் பண்ணிடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார் கண்ணிடை மணியி னொப்பார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் எண்ணிடை யெழுத்து மானா ரிலங்குமேற் றளிய னாரே.
|
3
|
சோமனை யரவி னோடு சூழ்தரக் கங்கை சூடும் வாமனை வான வர்கள் வலங்கொடு வந்து போற்றக் காமனைக் காய்ந்த கண்ணார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் ஏமநின் றாடு மெந்தை யிலங்குமேற் றளிய னாரே.
|
4
|
ஊனவ ருயிரி னோடு முலகங்க ளூழி யாகித் தானவர் தனமு மாகித் தனஞ்சய னோடெ திர்ந்த கானவர் காள கண்டர் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் ஏனமக் கோடு பூண்டா ரிலங்குமேற் றளிய னாரே.
|
5
|
Go to top |
மாயனாய் மால னாகி மலரவ னாகி மண்ணாய்த் தேயமாய்த் திசையெட் டாகித் தீர்த்தமாய்த் திரிதர் கின்ற காயமாய்க் காயத் துள்ளார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் ஏயமென் றோளி பாக ரிலங்குமேற் றளிய னாரே.
|
6
|
மண்ணினை யுண்ட மாயன் றன்னையோர் பாகங் கொண்டார் பண்ணினைப் பாடி யாடும் பத்தர்கள் சித்தங் கொண்டார் கண்ணினை மூன்றுங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் எண்ணினை யெண்ண வைத்தா ரிலங்குமேற் றளிய னாரே.
|
7
|
செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார் மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக் கல்வியைக் கரையி லாத காஞ்சிமா நகர்தன் னுள்ளால் எல்லியை விளங்க நின்றா ரிலங்குமேற் றளிய னாரே.
|
8
|
வேறிணை யின்றி யென்றும் விளங்கொளி மருங்கி னாளைக் கூறியல் பாகம் வைத்தார் கோளரா மதியும் வைத்தார் ஆறினைச் சடையுள் வைத்தார் அணிபொழிற் கச்சி தன்னுள் ஏறினை யேறு மெந்தை யிலங்குமேற் றளிய னாரே.
|
9
|
தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு மன்னவன் விரலா லூன்ற மணிமுடி நெரிய வாயால் கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள் இன்னவற் கருளிச் செய்தா ரிலங்குமேற் றளிய னாரே.
|
10
|
Go to top |