தெண்டிரை தேங்கியோ தஞ் சென்றடி வீழுங் காலைத் தொண்டிரைத் தண்டர் கோனைத் தொழுதடி வணங்கி யெங்கும் வண்டுகண் மதுக்கண் மாந்தும் வலம்புரத் தடிக டம்மைக் கொண்டுநற் கீதம் பாடக் குழகர்தா மிருந்த வாறே.
|
1
|
மடுக்களில் வாளை பாய வண்டின மிரிந்த பொய்கைப் பிடிக்களி றென்னத் தம்மிற் பிணைபயின் றணைவ ரால்கள் தொடுத்தநன் மாலை யேந்தித் தொண்டர்கள் பரவி யேத்த வடித்தடங் கண்ணி பாகர் வலம்புரத் திருந்த வாறே.
|
2
|
தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சேர்த்தி ஆனிடை யஞ்சுங் கொண்டே யன்பினா லமர வாட்டி வானிடை மதியஞ் சூடும் வலம்புரத் தடிக டம்மை நானடைந் தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற் றேனே.
|
3
|
முளையெயிற் றிளநல் லேனம் பூண்டுமொய் சடைக டாழ வளையெயிற் றிளைய நாகம் வலித்தரை யிசைய வீக்கிப் புளைகயப் போர்வை போர்த்துப் புனலொடு மதியஞ் சூடி வளைபயி லிளைய ரேத்தும் வலம்புரத் தடிக டாமே.
|
4
|
சுருளுறு வரையின் மேலாற் றுலங்கிளம் பளிங்கு சிந்த இருளுறு கதிர்நு ழைந்த விளங்கதிர்ப் பசலைத் திங்கள் அருளுறு மடிய ரெல்லா மங்கையின் மலர்க ளேந்த மருளுறு கீதங் கேட்டார் வலம்புரத் தடிக ளாரே.
|
5
|
Go to top |
நினைக்கின்றே னெஞ்சு தன்னா னீண்டபுன் சடையி னானே அனைத்துடன் கொண்டு வந்தங் கன்பினா லமைய வாட்டிப் புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை மெய்ம்மையைப் புணர மாட்டேன் எனக்குநான் செய்வ தென்னே யினிவலம் புரவ னீரே.
|
6
|
செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம்பழ மினிய நாடித் தங்கயந் துறந்து போந்து தடம்பொய்கை யடைந்து நின்று கொங்கையர் குடையுங் காலைக் கொழுங்கனி யழுங்கி னாராம் மங்கல மனையின் மிக்கார் வலம்புரத் தடிக ளாரே.
|
7
|
அருகெலாங் குவளை செந்நெல் அகலிலை யாம்ப னெய்தல் தெருவெலாந் தெங்கு மாவும் பழம்விழும் படப்பை யெல்லாம் குருகினங் கூடி யாங்கே கும்மலித் திறகு லர்த்தி மருவலா மிடங்கள் காட்டும் வலம்புரத் தடிக ளாரே.
|
8
|
கருவரை யனைய மேனிக் கடல்வண்ண னவனுங் காணான் திருவரை யனைய பூமேற் றிசைமுக னவனுங் காணான் ஒருவரை யுச்சி யேறி யோங்கினா ரோங்கி வந்து அருமையி லெளிமை யானா ரவர்வலம் புரவ னாரே.
|
9
|
வாளெயி றிலங்க நக்கு வளர்கயி லாயந் தன்னை ஆள்வலி கருதிச் சென்ற வரக்கனை வரைக்கீ ழன்று தோளொடு பத்து வாயுந் தொலைந்துட னழுந்த வூன்றி ஆண்மையும் வலியுந் தீர்ப்பா ரவர்வலம் புரவ னாரே.
|
10
|
Go to top |