மறையணி நாவி னானை மறப்பிலார் மனத்து ளானைக் கறையணி கண்டன் றன்னைக் கனலெரி யாடி னானைப் பிறையணி சடையி னானைப் பெருவேளூர் பேணி னானை நறையணி மலர்கள் தூவி நாடொறும் வணங்கு வேனே.
|
1
|
நாதனா யுலக மெல்லா நம்பிரா னெனவு நின்ற பாதனாம் பரம யோகி பலபல திறத்தி னாலும் பேதனாய்த் தோன்றி னானைப் பெருவேளூர் பேணி னானை ஓதநா வுடைய னாகி யுரைக்குமா றுரைக்குற் றேனே.
|
2
|
குறவிதோண் மணந்த செல்வக் குமரவே டாதை யென்றும் நறவிள நறுமென் கூந்த னங்கையோர் பாகத் தானைப் பிறவியை மாற்று வானைப் பெருவேளூர் பேணி னானை உறவினால் வல்ல னாகி யுணருமா றுணர்த்து வேனே.
|
3
|
மைஞ்ஞவில் கண்டன் றன்னை வலங்கையின் மழுவொன் றேந்திக் கைஞ்ஞவின் மானி னோடுங் கனலெரி யாடி னானைப் பிஞ்ஞகன் றன்னை யந்தண் பெருவேளூர் பேணி னானைப் பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப் பொறியிலா வறிவி லேனே.
|
4
|
ஓடைசேர் நெற்றி யானை யுரிவையை மூடி னானை வீடதே காட்டு வானை வேதநான் காயி னானைப் பேடைசேர் புறவ நீங்காப் பெருவேளூர் பேணி னானைக் கூடநான் வல்ல மாற்றங் குறுகுமா றறிகி லேனே.
|
5
|
Go to top |
கச்சைசேர் நாகத் தானைக் கடல்விடங் கண்டத் தானைக் கச்சியே கம்பன் றன்னைக் கனலெரி யாடு வானைப் பிச்சைசேர்ந் துழல்வி னானைப் பெருவேளூர் பேணி னானை இச்சைசேர்ந் தமர நானு மிறைஞ்சுமா றிறைஞ்சு வேனே.
|
6
|
சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்கு வார்கள் முத்தனை மூர்த்தி யாய முதல்வனை முழுது மாய பித்தனைப் பிறரு மேத்தப் பெருவேளூர் பேணி னானை மெத்தநே யவனை நாளும் விரும்புமா றறிகி லேனே.
|
7
|
முண்டமே தாங்கி னானை முற்றிய ஞானத் தானை வண்டுலாங் கொன்றை மாலை வளர்மதிக் கண்ணி யானைப் பிண்டமே யாயி னானைப் பெருவேளூர் பேணி னானை அண்டமா மாதி யானை யறியுமா றறிகி லேனே.
|
8
|
விரிவிலா வறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்து எரிவினாற் சொன்னா ரேனு மெம்பிராற் கேற்ற தாகும் பரிவினாற் பெரியோ ரேத்தும் பெருவேளூர் பற்றி னானை மருவிநான் வாழ்த்தி யுய்யும் வகையது நினைக்கின் றேனே.
|
9
|
பொருகட லிலங்கை மன்ன னுடல்கெடப் பொருத்தி நல்ல கருகிய கண்டத் தானைக் கதிரிளங் கொழுந்து சூடும் பெருகிய சடையி னானைப் பெருவேளூர் பேணி னானை உருகிய வடிய ரேத்து முள்ளத்தா லுள்கு வேனே.
|
10
|
Go to top |