கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப் பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல் கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக் கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே.
|
1
|
நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பர்க்குக் கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்குக் கொடுக்கக் கொள்க வெனவுரைப் பார்களை இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே.
|
2
|
கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான் சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார் ஆர்க ளாகிலு மாக அவர்களை நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே.
|
3
|
சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன் சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி ஆற்ற வுங்களிப் பட்ட மனத்தராய்ப் போற்றி யென்றுரைப் பார்புடை போகலே.
|
4
|
இறையென் சொல்மற வேல்நமன் தூதுவீர் பிறையும் பாம்பு முடைப்பெரு மான்தமர் நறவம் நாறிய நல்நறுஞ் சாந்திலும் நிறைய நீறணி வாரெதிர் செல்லலே.
|
5
|
Go to top |
வாம தேவன் வளநகர் வைகலும் காம மொன்றில ராய்க்கை விளக்கொடு தாமம் தூபமும் தண்நறுஞ் சாந்தமும் ஏம மும்புனை வாரெதிர் செல்லலே.
|
6
|
படையும் பாசமும் பற்றிய கையினீர் அடையன் மின்நம தீச னடியரை விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம் புடைபு காதுநீர் போற்றியே போமினே.
|
7
|
விச்சை யாவதும் வேட்கைமை யாவதும் நிச்சல் நீறணி வாரை நினைப்பதே அச்ச மெய்தி யருகணை யாதுநீர் பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே.
|
8
|
இன்னங் கேண்மி னிளம்பிறை சூடிய மன்னன் பாதம் மனத்துட னேத்துவார் மன்னு மஞ்செழுத் தாகிய மந்திரம் தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே.
|
9
|
மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச் சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம் ஒற்றை யேறுடை யானடி யேயலால் பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே.
|
10
|
Go to top |
அரக்க னீரைந் தலையுமோர் தாளினால் நெருக்கி யூன்றியிட் டான்தமர் நிற்கிலும் சுருக்கெ னாதங்குப் பேர்மின்கண் மற்றுநீர் சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே
|
11
|