சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து திறம்பா வண்ணம் கைம்மாவி னுரிவைபோர்த் துமைவெருவக் கண்டானைக் கருப்ப றியலூர்க் கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங் கொகுடிக் கோயில் எம்மானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
|
1
|
நீற்றாரு மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக் கருப்ப றியலூர்க் கூற்றானை கூற்றுதைத்துக் கோல்வளையா ளவளோடுங் கொகுடிக் கோயில் ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
|
2
|
முட்டாமே நாள்தோறும் நீர்மூழ்கிப் பூப்பறித்து மூன்று போதும் கட்டார்ந்த இண்டைகொண் டடிசேர்த்தும் அந்தணர்தங் கருப்ப றியலூர்க் கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக் குழகனைக் கொகுடிக் கோயில் எட்டான மூர்த்தியை நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
|
3
|
விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி வினைபோக வேலி தோறும் கருந்தாள வாழைமேற் செங்கனிகள் தேன்சொரியுங் கருப்ப றியலூர்க் குருந்தாய முள்ளெயிற்றுக் கோல்வளையா ளவளோடுங் கொகுடிக் கோயில் இருந்தானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
|
4
|
பொடியேறு திருமேனிப் பெருமானைப் பொங்கரவக் கச்சை யானைக் கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை குதிகொள்ளுங் கருப்ப றியலூர்க் கொடியேறி வண்டினமுந் தண்டேனும் பண்செய்யுங் கொகுடிக் கோயில் அடியேறு கழலானை நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
|
5
|
Go to top |
பொய்யாத வாய்மையாற் பொடிபூசிப் போற்றிசைத்துப் பூசை செய்து கையினால் எரியோம்பி மறைவளர்க்கும் அந்தணர்தங் கருப்ப றியலூர்க் கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலுங் கொகுடிக் கோயில் ஐயனைஎன் மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
|
6
|
செடிகொள்நோய் உள்ளளவுந் தீவினையுந் தீர்ந்தொழியச் சிந்தை செய்ம்மின் கடிகொள்பூந் தடமண்டிக் கருமேதி கண்படுக்குங் கருப்ப றியலூர்க் கொடிகொள்பூ நுண்ணிடையாள் கோல்வளையா ளவளோடுங் கொகுடிக் கோயில் அடிகளையென் மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
|
7
|
பறையாத வல்வினைகள் பறைந்தொழியப் பன்னாளும் பாடி யாடிக் கறையார்ந்த கண்டத்தன் எண்டோளன் முக்கண்ணன் கருப்ப றியலூர்க் குறையாத மறைநாவர் குற்றேவ லொழியாத கொகுடிக் கோயில் உறைவானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
|
8
|
சங்கேந்து கையானுந் தாமரையின் மேலானுந் தன்மை காணாக் கங்கார்ந்த வார்சடைக ளுடையானை விடையானைக் கருப்ப றியலூர்க் கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள் பலஉதிர்க்குங் கொகுடிக் கோயில் எங்கோனை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
|
9
|
பண்டாழின் னிசைமுரலப் பன்னாளும் பாவித்துப் பாடி யாடிக் கண்டார்தங் கண்குளிருங் களிக்கமுகம் பூஞ்சோலைக் கருப்ப றியலூர்க் குண்டாடுஞ் சமணருஞ் சாக்கியரும் புறங்கூறுங் கொகுடிக் கோயில் எண்டோளெம் பெருமானை நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
|
10
|
Go to top |
கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் மிடர்தீர்க்குங் கருப்ப றியலூர்க் குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும் பூஞ்சோலைக் கொகுடிக் கோயில் இலைமலிந்த மழுவானை மனத்தினா லன்புசெய் தின்ப மெய்தி மலைமலிந்த தோளூரன் வனப்பகையப் பன்னுரைத்த வண்ட மிழ்களே.
|
11
|