சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.046   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) - கொல்லிக்கௌவாணம் அருள்தரு நீலாயதாட்சியம்மை உடனுறை அருள்மிகு காயாரோகணேசுவரர் திருவடிகள் போற்றி
சுந்தரர் திருவாரூரினின்றும் புறப்பட்டுத் திருநாகைக் காரோணத்துக்குச் சென்று இறைவனை இறைஞ்சி விலையுயர்ந்த அணிகலன்களும் பிறவும் வேண்டுமென்ற குறிப்புடன் திருப்பதிகம் பாடினார் (கந்தம் முதல் ஆடை ஆபரணம் பண்டாரத்தே , காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும்; முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் ; கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்; ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண் பட்டும், பூவும், கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும்) . இறைவன் அவருக்குப் பொன்னும் நவமணிகளும் நறு மணப் பொருள்களும் பட்டாடைகளும் விரைந்து செல்லும் குதிரை களும் பரிசாக வழங்கியருளினார். அப்பொருள்களைப் பெற்று மகிழ்ந்த சுந்தரர் நாகையினின்றும் புறப்பட்டுத் திருவாரூரை அடைந்தார்.
நகைகள், முத்து மாலை, வைர நகைகள், பட்டாடைகள், வாசனைத் திரவியங்கள்,விருந்து உணவு கிடைக்க; அனைத்து ‌ சுக போகங்களும் கிடைக்க
https://www.youtube.com/watch?v=P-LoRs-kJuE   Add audio link Add Audio
பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாள் இரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
யவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.


1


வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி
விருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர்
பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப்
பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்
சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந்
திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே
காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங்
கடல் நாகைக் காரோண மேவியிருந் தீரே.


2


பூண்பதோர் இளவாமை பொருவிடைஒன் றேறிப்
பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப்
பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர்
பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்
வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்
வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்
காண்பினிய மணிமாட நிறைந்தநெடு வீதிக்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.


3


விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக
வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்
துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்
சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே
வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்
மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்
கட்டிஎமக் கீவதுதான் எப்போது சொல்லீர்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.


4


மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து
வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்
தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ்
சுந்தரனே கந்தமுதல் ஆடைஆ பரணம்
பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும்
பண்டுதான் பிரமாண மொன்றுண்டே நும்மைக்
கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.


5


Go to top
இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம்
இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது
பலவகம்புக் குழிதர்வீர் பட்டோடு சாந்தம்
பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ
உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட
உண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே
கலவமயி லியலவர்கள் நடமாடுஞ் செல்வக்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.


6


தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்
தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து
தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத்
திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்
நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த
நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
காசருளிச் செய்தீர்இன் றெனக்கருள வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.


7


மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீ ரிருந்தீர்
வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு
ஆற்றவேல் திருவுடையீர் நல்கூர்ந்தீ ரல்லீர்
அணியாரூர் புகப்பெய்த வருநிதிய மதனில்
தோற்றமிகு முக்கூற்றில் ஒருகூறு வேண்டுந்
தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன்
காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.


8


மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி
மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்
எண்ணிலிஉண் பெருவயிறன் கணபதிஒன் றறியான்
எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்யீர்
திண்ணெனஎன் னுடல்விருத்தி தாரீரே யாகில்
திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்
கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.


9


மறியேறு கரதலத்தீர் மாதிமையே லுடையீர்
மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர்
கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள்
கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல்
பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்
பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும்
கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.


10


Go to top
பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்
பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்
உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்
ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவும்
கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரென்
றண்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன
அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே.


11



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்)
1.084   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல்
Tune - குறிஞ்சி   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
2.116   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்)
Tune - செவ்வழி   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
4.071   திருநாவுக்கரசர்   தேவாரம்   மனைவி தாய் தந்தை மக்கள்
Tune - திருநேரிசை   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
4.103   திருநாவுக்கரசர்   தேவாரம்   வடிவு உடை மாமலைமங்கை பங்கா!
Tune - திருவிருத்தம்   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.083   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;
Tune - திருக்குறுந்தொகை   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
6.022   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை,
Tune - திருத்தாண்டகம்   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
7.046   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பத்து ஊர் புக்கு, இரந்து,
Tune - கொல்லிக்கௌவாணம்   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
7.101   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொன் ஆம் இதழி விரை
Tune -   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) )

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 7.046