மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத் திருமால் பிரமன் இந்திரற்குந் தேவர் நாகர் தானவர்க்கும் பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
|
1
|
விண்ணோர் தலைவர் வெண்புரிநூல் மார்பர் வேத கீதத்தர் கண்ணார் நுதலர் நகுதலையர் கால காலர் கடவூரர் எண்ணார் புரமூன் றெரிசெய்த இறைவர் உமையோ ரொருபாகம் பெண்ணா ணாவர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
|
2
|
காயும் புலியி னதளுடையர் கண்டர் எண்டோட் கடவூரர் தாயுந் தந்தை பல்லுயிர்க்குந் தாமே யாய தலைவனார் பாயும் விடையொன் றதுவேறிப் பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
|
3
|
நறைசேர் மலர்ஐங் கணையானை நயனத் தீயாற் பொடிசெய்த இறையா ராவர் எல்லார்க்கும் இல்லை யென்னா தருள்செய்வார் பறையார் முழவம் பாட்டோடு பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப் பிறையார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
|
4
|
கொத்தார் கொன்றை மதிசூடிக் கோணா கங்கள் பூணாக மத்த யானை யுரிபோர்த்து மருப்பு மாமைத் தாலியார் பத்தி செய்து பாரிடங்கள் பாடி யாடப் பலிகொள்ளும் பித்தர் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
|
5
|
Go to top |
துணிவார் கீளுங் கோவணமுந் துதைந்து சுடலைப் பொடியணிந்து பணிமே லிட்ட பாசுபதர் பஞ்ச வடிமார் பினர்கடவூர்த் திணிவார் குழையார் புரமூன்றுந் தீவாய்ப் படுத்த சேவகனார் பிணிவார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
|
6
|
காரார் கடலின் நஞ்சுண்ட கண்டர் கடவூ ருறைவாணர் தேரார் அரக்கன் போய்வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார் ஊர்தா னாவ துலகேழும் உடையார்க் கொற்றி யூர்ஆரூர் பேரா யிரவர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
|
7
|
வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய்க் கோடார் கேழற் பின்சென்று குறுகி விசயன் தவமழித்து நாடா வண்ணஞ் செருச்செய்து ஆவ நாழி நிலையருள்செய் பீடார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
|
8
|
வேழ முரிப்பர் மழுவாளர் வேள்வி யழிப்பர் சிரமறுப்பர் ஆழி யளிப்பர் அரிதனக்கு ஆனஞ் சுகப்பர் அறமுரைப்பர் ஏழை தலைவர் கடவூரில் இறைவர் சிறுமான் மறிக்கையர் பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
|
9
|
மாட மல்கு கடவூரின் மறையோர் ஏத்து மயானத்துப் பீடை தீர அடியாருக் கருளும் பெருமா னடிகள்சீர் நாடி நாவ லாரூரன் நம்பி சொன்ன நற்றமிழ்கள் பாடு மடியார் கேட்பார்மேற் பாவ மான பறையுமே.
|
10
|
Go to top |