எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த மை ஆர் கண்டன், மாது உமை வைகும் திருமேனிச் செய்யான், வெண்நீறு அணிவான், திகழ் பொன் பதிபோலும் பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே.
|
1
|
மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்ற நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர்போலும் மாதவி மேய வண்டு இசை பாட, மயில் ஆட, போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே.
|
2
|
வற்றா நதியும் மதியும் பொதியும் சடைமேலே புற்று ஆடு அரவின் படம் ஆடவும், இப் புவனிக்கு ஓர் பற்று ஆய், இடுமின், பலி! என்று அடைவார் பதிபோலும் பொன்தாமரையின் பொய்கை நிலாவும் புறவமே.
|
3
|
துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து, மின் ஆர் சடைமேல் அரவும் மதியும் விளையாட, பல்-நாள், இடுமின், பலி! என்று அடைவார் பதிபோலும் பொன் ஆர் புரிநூல் அந்தணர் வாழும் புறவமே.
|
4
|
தேவா! அரனே! சரண்! என்று இமையோர் திசைதோறும், காவாய்! என்று வந்து அடைய, கார்விடம் உண்டு, பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதிபோலும் பூ ஆர் கோலச் சோலை சுலாவும் புறவமே.
|
5
|
Go to top |
கற்று அறிவு எய்தி, காமன் முன் ஆகும் உகவு எல்லாம் அற்று, அரனே! நின் அடி சரண்! என்னும் அடியோர்க்குப் பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி என்பர் பொந்திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே.
|
6
|
எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன, கொண்டு எழு கோல முகில் போல், பெரிய கரிதன்னைப் பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர் புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவமே.
|
7
|
பரக்கும் தொல் சீர்த் தேவர்கள் சேனைப்பௌவத்தைத் துரக்கும் செந்தீப் போல் அமர் செய்யும் தொழில் மேவும் அரக்கன் திண்தோள் அழிவித்தான், அக் காலத்தில்; புரக்கும் வேந்தன்; சேர்தரு மூதூ புறவமே.
|
8
|
மீத் திகழ் அண்டம் தந்தயனோடு மிகு மாலும், மூர்த்தியை நாடிக் காண ஒணாது, முயல் விட்டு, ஆங்கு ஏத்த, வெளிப்பாடு எய்தியவன் தன் இடம் என்பர் பூத் திகழ் சோலைத் தென்றல் உலாவும் புறவமே.
|
9
|
வையகம், நீர், தீ, வாயுவும், விண்ணும், முதல் ஆனான்; மெய் அல தேரர், உண்டு, இலை என்றே நின்றே தம் கையினில் உண்போர், காண ஒணாதான்; நகர் என்பர் பொய் அகம் இல்லாப் பூசுரர் வாழும் புறவமே.
|
10
|
Go to top |
பொன் இயல் மாடப் புரிசை நிலாவும் புறவத்து மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற தன் இயல்பு இல்லாச் சண்பையர்கோன்-சீர்ச் சம்பந்தன்- இன் இசைஈர்-ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே.
|
11
|