வேத நாயகன்; வேதியர் நாயகன்;
மாதின் நாயகன்; மாதவர் நாயகன்;
ஆதிநாயகன்; ஆதிரைநாயகன்;
பூதநாயகன் புண்ணியமூர்த்தியே.
|
1
|
செத்துச் செத்துப் பிறப்பதே தேவு என்று
பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ,
அத்தன் என்று அரியோடு பிரமனும்
துத்தியம் செய நின்ற நல்சோதியே?
|
2
|
நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறுகோடி நாராயணர் அங்ஙனே;
ஏறு கங்கை மணல், எண் இல் இந்திரர்;
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே.
|
3
|
வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீர் ஆகிலும், ஏழைகாள்!
யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம்
மாதேவன்(ன்) அலால் தேவர் மற்று இல்லையே.
|
4
|
கூவல் ஆமை குரைகடல் ஆமையை,
கூவலோடு ஒக்குமோ, கடல்? என்றல் போல்,
பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால்,
தேவதேவன் சிவன் பெருந்தன்மையே.
|
5
|
| Go to top |
பேய்வனத்து அமர்வானை, பிரார்த்தித்தார்க்கு
ஈவனை, இமையோர் முடி தன் அடிச்
சாய்வனை,-சலவார்கள்-தமக்கு உடல்
சீவனை, சிவனை, சிந்தியார்களே.
|
6
|
எரி பெருக்குவர்; அவ் எரி ஈசனது
உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர்;
அரி அயற்கு அரியானை அயர்த்துப் போய்
நரிவிருத்தம் அது ஆகுவர், நாடரே.
|
7
|
அருக்கன் பாதம் வணங்குவர், அந்தியில்;
அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ?
இருக்கு நால்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார், கல்மனவரே.
|
8
|
தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர்-
ஆய உள்ளத்து அமுது அருந்தப் பெறார்-
பேயர், பேய்முலை உண்டு உயிர் போக்கிய
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.
|
9
|
அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து, ஆர் அருள்
பெருக்கச் செய்த பிரான் பெருந்தன்மையை
அருத்தி செய்து அறியப் பெறுகின்றிலர்-
கருத்து இலாக் கயக்கவணத்தோர்களே.
|
10
|
| Go to top |