குரம்பை மல(ம்) சலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணி சரி தசை இரல் குடல் நெதி
குலைந்த செயிர் மயிர் குருதியொடு இவை பல கசுமாலம்
குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர்
இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள்
குரங்கர் அறிவிலர் நெறி இலர் மிருகணை விறல் ஆன
சரம்பர் உறவனை நரகனை துரகனை
இரங்கு கலியனை பரிவு உறு சடலனை
சவுந்தரிக முக சரவண பதமொடு மயிலேறி
தழைந்த சிவ சுடர் தனை என் மனதினில்
அழுந்த உரை செய வரு முக நகை ஒளி
தழைந்த நயனமும் இரு மலர் சரணமும் மறவேனே
இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில்
உறைந்த குயில் அளி ஒலி பரவிட மயில்
இசைந்து நடமிடும் இணையிலி புலி நகர் வள நாடா
இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு
எரிந்து மகரம் ஒள் திசை கரி குமுறுக
இரைந்த அசுரரொடு இப பரி யமபுரம் விடும் வேளே
சிரம் பொன் அயனொடு முநிவர்கள் அமரர்கள்
அரம்பை மகளிர் ஒடு அரகர சிவ சிவ
செயம்பு என நடம் இடு பதம் அழகியர் குரு நாதா
செழும் பவள ஒளி நகை முக மதி நகு
சிறந்த குற மகள் இணை முலை புதை பட
செயம் கொடு அணை குக சிவ மலை மருவிய பெருமாளே.
சிறு குடிலாகிய இந்த வீடு - உள்ளே இருப்பது மலமும், மூத்திரமும், கெட்ட வழுவழுப்பான கொழுப்பும், எலும்பும், அடுக்காகச் சரிந்துள்ள தசைகளும், ஈரலும், குடலும், முறையின்றி சிக்குற்ற மயிர்களும், இரத்தம் முதலியவைகளுடன், இவற்றோடு கெட்ட அழுக்குகள் நிறைந்ததுமான, இந்த வீட்டில் (உடலில்) ஐவர் (ஐம்புலன்கள்) குடி புகுந்துள்ளனர். அவர்கள் மிகவும் கடுமையான கொடுங்குணத்தினர். அகந்தை கொண்டவர்கள். ஒரு வழியில் போகாதவர்கள். குற்றம் உடையவர்கள். குரங்கு போல் சேட்டை செய்பவர்கள். அறிவில்லாதவர்கள். நன்னெறியில் ஒழுகாதவர்கள். மிருகத் தன்மை உடைய வலிமை வாய்ந்தவர்கள். விஷம் போன்ற குணம் உடையவர்கள். (இத்தகையோர்களுடன்) நட்பு உடையவனை, நரகம் புகுகின்றவனை, குதிரை போல் மிக வேகமாகச் செல்லும் மனத்தை உடையவனை, அழுது ஏங்கும் வறியவனை, துன்பத்துக்கு உறைவிடமாகிய உடல்மேல் அன்பு கொண்டவனுமாகிய என்னை, அழகிய முகத்தவனே, சரவணப் பொய்கையில் தோன்றியவனே, நீ அழகோடு மயிலின் மீது ஏறி வந்து, செழிப்புடன் பூரித்த சிவ ஒளியை என்னுடைய மனதில் அழுந்தும்படி நன்றாக ஓதி உபதேசிக்கும் பொருட்டு வந்த திருமுகச் சிரிப்பு பூத்த ஒளியையும், குளிர்ந்த கண்களையும், உனது மலர் போன்ற இரண்டு திருவடிகளையும் நான் மறவேன். இலுப்ப மரங்களும் மகிழ மரங்களும் நிறைந்து இவைகளின் மேல் பல மேகங்கள் தங்கும் சோலைகளில் வசிக்கின்ற குயில்களும் வண்டுகளும் இனிமையான ஒலிகளைப் பரப்ப, மயில்கள் அந்த இசைக்கு ஒத்து நடமிடுகின்ற இணை இல்லாத சிதம்பரம் என்னும் வளப்பம் பொருந்திய நாட்டுக்கு உரியவனே. இருள் சூழ்ந்த கிரெளஞ்ச மலை இடிந்து பொடியாக, பல மலைகளும் பொடிபட, மகர மீன்கள் உறையும் கடல் தீப்பற்றிக்கொள்ள, ஒளி பெற்ற எட்டு திசைகளில் உள்ள யானைகளும் கலங்கிப் பிளிற, ஆர்ப்பரித்து வந்த அசுரர்களோடு (அவர்களுடைய) யானை, குதிரை முதலிய படைகளையும் யம லோகத்துக்கு அனுப்பிய தலைவனே, உயர்ந்த பொன் நிறம் கொண்ட பிரமனும், முனிவர்களும், தேவர்களும், அரம்பை மகளிரும் அரகர, சிவசிவ, சுயம்பு மூர்த்தியே என்று புகழ, நடனம் செய்கின்ற திருவடி அழகாக அமையப்பெற்ற சிவபெருமானுக்கு குருநாதனே, செழித்த பவளம் போன்ற, நிலவைப் பழித்துச் சிரிக்கும் மலர்ந்த முகமும், சிறப்புடன் அமைந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் இரு மார்பகங்களும் அழுந்தும் வண்ணம் வெற்றி கொண்டு அவளை அணைத்த குகனே, பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
குரம்பை மல(ம்) சலம் வழுவளு நிணமொடு ... சிறு குடிலாகிய இந்த வீடு - உள்ளே இருப்பது மலமும், மூத்திரமும், கெட்ட வழுவழுப்பான கொழுப்பும், எலும்பு அணி சரி தசை இரல் குடல் ... எலும்பும், அடுக்காகச் சரிந்துள்ள தசைகளும், ஈரலும், குடலும், நெதி குலைந்த செயிர் மயிர் குருதியொடு ... முறையின்றி சிக்குற்ற மயிர்களும், இரத்தம் முதலியவைகளுடன், இவை பல கசுமாலம் ... இவற்றோடு கெட்ட அழுக்குகள் நிறைந்ததுமான, குடின் புகுதும் அவர் ... இந்த வீட்டில் (உடலில்) ஐவர் (ஐம்புலன்கள்) குடி புகுந்துள்ளனர். அவர் கடு கொடுமையர் ... அவர்கள் மிகவும் கடுமையான கொடுங்குணத்தினர். இடும்பர் ஒரு வழி இணை இலர் ... அகந்தை கொண்டவர்கள். ஒரு வழியில் போகாதவர்கள். கசடர்கள் குரங்கர் அறிவிலர் நெறி இலர் ... குற்றம் உடையவர்கள். குரங்கு போல் சேட்டை செய்பவர்கள். அறிவில்லாதவர்கள். நன்னெறியில் ஒழுகாதவர்கள். மிருகணை விறல் ஆனசரம்பர் ... மிருகத் தன்மை உடைய வலிமை வாய்ந்தவர்கள். விஷம் போன்ற குணம் உடையவர்கள். உறவனை நரகனை துரகனை ... (இத்தகையோர்களுடன்) நட்பு உடையவனை, நரகம் புகுகின்றவனை, குதிரை போல் மிக வேகமாகச் செல்லும் மனத்தை உடையவனை, இரங்கு கலியனை பரிவு உறு சடலனை ... அழுது ஏங்கும் வறியவனை, துன்பத்துக்கு உறைவிடமாகிய உடல்மேல் அன்பு கொண்டவனுமாகிய என்னை, சவுந்தரிக முக சரவண பதமொடு மயிலேறி ... அழகிய முகத்தவனே, சரவணப் பொய்கையில் தோன்றியவனே, நீ அழகோடு மயிலின் மீது ஏறி வந்து, தழைந்த சிவ சுடர் தனை என் மனதினில் ... செழிப்புடன் பூரித்த சிவ ஒளியை என்னுடைய மனதில் அழுந்த உரை செய வரு முக நகை ஒளி ... அழுந்தும்படி நன்றாக ஓதி உபதேசிக்கும் பொருட்டு வந்த திருமுகச் சிரிப்பு பூத்த ஒளியையும், தழைந்த நயனமும் இரு மலர் சரணமும் மறவேனே ... குளிர்ந்த கண்களையும், உனது மலர் போன்ற இரண்டு திருவடிகளையும் நான் மறவேன். இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில் ... இலுப்ப மரங்களும் மகிழ மரங்களும் நிறைந்து இவைகளின் மேல் பல மேகங்கள் தங்கும் சோலைகளில் உறைந்த குயில் அளி ஒலி பரவிட ... வசிக்கின்ற குயில்களும் வண்டுகளும் இனிமையான ஒலிகளைப் பரப்ப, மயில் இசைந்து நடமிடும் இணையிலி புலி நகர் வள நாடா ... மயில்கள் அந்த இசைக்கு ஒத்து நடமிடுகின்ற இணை இல்லாத சிதம்பரம் என்னும் வளப்பம் பொருந்திய நாட்டுக்கு உரியவனே. இருண்ட குவடு இடி பொடிபட ... இருள் சூழ்ந்த கிரெளஞ்ச மலை இடிந்து பொடியாக, வெகு முகடு எரிந்து மகரம் ... பல மலைகளும் பொடிபட, மகர மீன்கள் உறையும் கடல் தீப்பற்றிக்கொள்ள, ஒள் திசை கரி குமுறுக ... ஒளி பெற்ற எட்டு திசைகளில் உள்ள யானைகளும் கலங்கிப் பிளிற, இரைந்த அசுரரொடு இப பரி யமபுரம் விடும் வேளே ... ஆர்ப்பரித்து வந்த அசுரர்களோடு (அவர்களுடைய) யானை, குதிரை முதலிய படைகளையும் யம லோகத்துக்கு அனுப்பிய தலைவனே, சிரம் பொன் அயனொடு முநிவர்கள் அமரர்கள் ... உயர்ந்த பொன் நிறம் கொண்ட பிரமனும், முனிவர்களும், தேவர்களும், அரம்பை மகளிர் ஒடு அரகர சிவ சிவ செயம்பு என ... அரம்பை மகளிரும் அரகர, சிவசிவ, சுயம்பு மூர்த்தியே என்று புகழ, நடம் இடு பதம் அழகியர் குரு நாதா ... நடனம் செய்கின்ற திருவடி அழகாக அமையப்பெற்ற சிவபெருமானுக்கு குருநாதனே, செழும் பவள ஒளி நகை முக மதி நகு ... செழித்த பவளம் போன்ற, நிலவைப் பழித்துச் சிரிக்கும் மலர்ந்த முகமும், சிறந்த குற மகள் இணை முலை புதை பட ... சிறப்புடன் அமைந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் இரு மார்பகங்களும் அழுந்தும் வண்ணம் செயம் கொடு அணை குக ... வெற்றி கொண்டு அவளை அணைத்த குகனே, சிவ மலை மருவிய பெருமாளே. ... பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.