அதலம் விதலம் முதல் அந்தத் தலங்கள் என
அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என
அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என அங்கி பாநு
அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என
அறையும் மறை என அரும் தத்துவங்கள் என
அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம்
உதயம் எழ இருள் விடிந்து அக்கணம் தனில்
இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து உணர்வில்
உணரும் அநுபவம் மனம் பெற்றிடும்படியை வந்து நீ முன்
உதவ இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என
மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ்
உரிய அடிமை உனை அன்றிப் ப்ரபஞ்சம் அதை நம்புவேனோ
ததத ததததத தந்தத்த தந்ததத
திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி
சகக சககெணக தந்தத்த குங்கெணக
டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
தகக தகதகக தந்தத்த தந்தகக என்றுதாளம்
பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக
அகில நிசிசரர் நடுங்கக் கொடும் கழுகு
பரிய குடர் பழு எலும்பைப் பிடுங்க ரண துங்க காளி
பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு
கவரி இட இகலை வென்று சிகண்டி தனில்
பழநி மலையின் மிசை வந்து உற்ற இந்திரர்கள் தம்பிரானே.
அதலம் விதலம் முதலான அந்தக் கீழ் ஏழு உலகங்கள் எனவும், இப்பூமி எனவும், தேவர்களின் அண்டங்களான மேல் ஏழு உலகங்கள் எனவும், சகல கடல்கள் எனவும், எட்டுத் திசைகளிலுள்ள மலைகள் எனவும், அக்கினி, சூரியன், குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரன் (என்னும் முச்சுடர்கள்) எனவும், ஒன்றோடு ஒன்று சந்தித்து ஒற்றுமைப்பட்ட மந்திரங்கள் எனவும், சிறப்பாக ஓதுகின்ற வேதம் எனவும், அருமையாகச் சொல்லப்படும் (96) தத்துவப் பொருள்கள் எனவும், அணுவுக்குள் அணு எனவும், இங்ஙனம் எங்கும் நிறை பொருளாய் நின்றுள்ள ஒரு பேருண்மை, எனது உள்ளத்தில் தோன்றி விளங்கவும், அஞ்ஞானம் என்ற இருள் ஒழிந்து அந்தக் கணமே இதயத் தாமரை எனப்படும் மொட்டு அங்கே கட்டு நீங்கி, உணர்விலே உணரப்படும்படியான அநுபவ ஞானத்தை நான் பெற்றிடும் வகையை நீ முன்பு வந்து உதவி அருள, இடைவிடாத அன்பால் அருமையான இனிய சொற்களால் ஆன நூலாக, இசை வடிவப் பாக்களாகிய மதுர கவிகளில் மனம் ஆசை வைத்துத் திருப்புகழ் என்னும் சந்தப் பாவால் பாடும் உரிமைப் பாக்கியத்தைப் பெற்ற அடிமையாகிய நான் உன்னை அல்லால் இவ்வுலக வாழ்வினை நம்ப மாட்டேன். என்ற சந்தத்துக்கேற்ற தாளத்தில் பதலை திமிலை முதலிய பறைகள், தம்பட்டம் இவை ஒலிகளை எழுப்ப, எவ்விடத்திலும் உள்ள அசுரர்கள் நடுக்கம் கொள்ள, கொடிய கழுகுகள் (பிணங்களின்) பருத்த குடல்களையும் விலா எலும்புகளையும் பிடுங்க, போர்க்களத்து வெற்றிக் காளி களி நடனம் புரிய, நரிகள் ஊளையிட, பருந்துகளின் சிறகுகள் சாமரம் வீச, போரை வென்று மயிலின் மேல் பழனி மலை மீது வந்து அமர்ந்துள்ள, தேவர்களின் பெருமாளே.
அதலம் விதலம் முதல் அந்தத் தலங்கள் என ... அதலம் விதலம் முதலான அந்தக் கீழ் ஏழு உலகங்கள் எனவும், அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என ... இப்பூமி எனவும், தேவர்களின் அண்டங்களான மேல் ஏழு உலகங்கள் எனவும், அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என ... சகல கடல்கள் எனவும், எட்டுத் திசைகளிலுள்ள மலைகள் எனவும், அங்கி பாநு அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என ... அக்கினி, சூரியன், குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரன் (என்னும் முச்சுடர்கள்) எனவும், ஒன்றோடு ஒன்று சந்தித்து ஒற்றுமைப்பட்ட மந்திரங்கள் எனவும், அறையும் மறை என அரும் தத்துவங்கள் என ... சிறப்பாக ஓதுகின்ற வேதம் எனவும், அருமையாகச் சொல்லப்படும் (96) தத்துவப் பொருள்கள் எனவும், அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம் ... அணுவுக்குள் அணு எனவும், இங்ஙனம் எங்கும் நிறை பொருளாய் நின்றுள்ள ஒரு பேருண்மை, உதயம் எழ இருள் விடிந்து அக்கணம் தனில் ... எனது உள்ளத்தில் தோன்றி விளங்கவும், அஞ்ஞானம் என்ற இருள் ஒழிந்து அந்தக் கணமே இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து உணர்வில் உணரும் அநுபவம் மனம் பெற்றிடும்படியை வந்து நீ முன் உதவ ... இதயத் தாமரை எனப்படும் மொட்டு அங்கே கட்டு நீங்கி, உணர்விலே உணரப்படும்படியான அநுபவ ஞானத்தை நான் பெற்றிடும் வகையை நீ முன்பு வந்து உதவி அருள, இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என ... இடைவிடாத அன்பால் அருமையான இனிய சொற்களால் ஆன நூலாக, மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ் உரிய ... இசை வடிவப் பாக்களாகிய மதுர கவிகளில் மனம் ஆசை வைத்துத் திருப்புகழ் என்னும் சந்தப் பாவால் பாடும் உரிமைப் பாக்கியத்தைப் பெற்ற அடிமை உனை அன்றிப் ப்ரபஞ்சம் அதை நம்புவேனோ ... அடிமையாகிய நான் உன்னை அல்லால் இவ்வுலக வாழ்வினை நம்ப மாட்டேன். ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி தகக தகதகக தந்தத்த தந்தகக என்றுதாளம் ... என்ற சந்தத்துக்கேற்ற தாளத்தில் பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக ... பதலை திமிலை முதலிய பறைகள், தம்பட்டம் இவை ஒலிகளை எழுப்ப, அகில நிசிசரர் நடுங்கக் கொடும் கழுகு பரிய குடர் பழு எலும்பைப் பிடுங்க ... எவ்விடத்திலும் உள்ள அசுரர்கள் நடுக்கம் கொள்ள, கொடிய கழுகுகள் (பிணங்களின்) பருத்த குடல்களையும் விலா எலும்புகளையும் பிடுங்க, ரண துங்க காளி பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட ... போர்க்களத்து வெற்றிக் காளி களி நடனம் புரிய, நரிகள் ஊளையிட, பருந்துகளின் சிறகுகள் சாமரம் வீச, இகலை வென்று சிகண்டி தனில் பழநி மலையின் மிசை வந்து உற்ற இந்திரர்கள் தம்பிரானே. ... போரை வென்று மயிலின் மேல் பழனி மலை மீது வந்து அமர்ந்துள்ள, தேவர்களின் பெருமாளே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 106 thalam %E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BF thiru name %E0%AE%85%E0%AE%A4%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2