ஞான உபதேசம் தருகிற தலைவனே, போற்றி, போற்றி, நீதிக்கு இருப்பிடம் ஆன இறைவனே, போற்றி, போற்றி, இந்தப் பூமண்டலத்தை ஆள்கின்றவனே, போற்றி, போற்றி, அணிகலன்கள் அனைத்தையும் அணிகின்ற பெருமானே, போற்றி, போற்றி, வேடர்கள் தம்குலத்தில் அவதரித்த பைங்கொடி வள்ளியிடம் மையல் கொண்டவனே, போற்றி, போற்றி, தாமரை மலர்வாசனாம் பிரமன் துதிக்கும் ஸ்வாமியே, போற்றி, போற்றி, அருமையான வேத மந்திரங்களின் வடிவானவனே, போற்றி, போற்றி, மெய்ஞ்ஞானப் புலவனான தலைவனே, போற்றி, போற்றி, வீரக் கழலை அணிந்த திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி, அழகு நிறைந்த திருமேனியை உடைய வேளே, போற்றி, போற்றி, தேவருலகில் வாழும் பசுமையான வளையல் அணிந்த தேவயானையின் மணவாளனே, போற்றி, போற்றி, வெற்றி நிறைந்த விசாக மூர்த்தியே, போற்றி, போற்றி, உனது திருவருளைத் தந்து உதவுவாயாக. தீவினை நிறைந்த சூரன் முதலிய அசுரர்கள் இறக்குமாறு கூர்மையான வேலாயுதத்தால் போர் புரிந்து, பெருமை பொருந்திய தேவர்கள் மீண்டும் வான் நாடு சேரும்படியாக அருள் புரிந்தவனே, பிறைச்சந்திரனைத் தரித்த ஜடாமுடியினரும், திரிசூலத்தைத் தாங்கும் சங்கரனாரும், இசைத் தலைவரும், வலிமையும் திண்மையும் உடைய புயங்கள் வாய்ந்த ஜோதி ஸ்வரூபமும், திருக்கயிலையில் வாழ்பவருமான முதன்மையான சிவப்பரம்பொருளும் ஆகிய சிவபிரானின் இடப்பாகத்தில் இருக்கும் உமாதேவியும், அழகிய அம்பிகையும், உலக மாதாவும், மனோன்மணியும், அன்னையும், சிவகாமசுந்தரியும், உயிர்களுக்குத் தாயான நாராயணியும், அதிரூபவதியுமான பார்வதிதேவி அன்பு கொண்டு பெருமையுடன்சீராட்ட, அழகு பலவாக அமைந்த திருக்கோயில்கள் மிகுந்த திருவாவினன்குடியில் வாழ்வாக வீற்றிருக்கும், தேவர்கள் போற்றும் பெருமாளே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 179 thalam %E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BF thiru name %E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81