சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
747   திருவேட்களம் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 276 - வாரியார் # 757 )  

சதுரத்தரை நோக்கிய

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனனத்தன தாத்தன தானன
     தனனத்தன தாத்தன தானன
          தனனத்தன தாத்தன தானன ......தனதான

சதுரத்தரை நோக்கிய பூவொடு
     கதிரொத்திட ஆக்கிய கோளகை
          தழையச்சிவ பாக்கிய நாடக ...... அநுபூதி
சரணக்கழல் காட்டியெ னாணவ
     மலமற்றிட வாட்டிய ஆறிரு
          சயிலக்குல மீட்டிய தோளொடு ...... முகமாறுங்
கதிர்சுற்றுக நோக்கிய பாதமு
     மயிலிற்புற நோக்கிய னாமென
          கருணைக்கடல் காட்டிய கோலமும் ...... அடியேனைக்
கனகத்தினு நோக்கினி தாயடி
     யவர்முத்தமி ழாற்புக வேபர
          கதிபெற்றிட நோக்கிய பார்வையு ...... மறவேனே
சிதறத்தரை நாற்றிசை பூதர
     நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
          சிதறக்கட லார்ப்புற வேயயில் ...... விடுவோனே
சிவபத்தினி கூற்றினை மோதிய
     பதசத்தினி மூத்தவி நாயகி
          செகமிப்படி தோற்றிய பார்வதி ...... யருள்பாலா
விதுரற்கும ராக்கொடி யானையும்
     விகடத்துற வாக்கிய மாதவன்
          விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் ...... மருகோனே
வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய
     கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய
          விறல்மெய்த்திரு வேட்கள மேவிய ...... பெருமாளே.
Easy Version:
சதுரத்தரை நோக்கிய பூவொடு
கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை தழைய
சிவ பாக்கிய நாடக அநுபூதி
சரணக் கழல் காட்டியே
என் ஆணவ மலம் அற்றிட வாட்டிய
ஆறிரு சயிலக் குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும்
கதிர் சுற்று உக நோக்கிய பாதமும்
மயிலின் புறம் நோக்கியனாம் என
கருணைக் கடல் காட்டிய கோலமும்
அடியேனை கனகத்தினும் நோக்கி இனிதாய்
அடியவர் முத்தமிழால் புகவே
பர கதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே
சிதறத் தரை நால்திசை பூதர(ம்) நெரிய
பறை மூர்க்கர்கள் மா முடி சிதற
கடல் ஆர்ப்பு உறவே அயில் விடுவோனே
சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி
மூத்த விநாயகி செகம் இப்படி தோற்றிய பார்வதி
அருள்பாலா
விதுரற்கும் அராக் கொடி யானையும்
விகடத் துறவு ஆக்கிய மாதவன்
விசையற்கு உயர் தேர்ப் பரி ஊர்பவன் மருகோனே
வெளி எண் திசை சூரப் பொருது ஆடிய
கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய
விறல் மெய்த் திருவேட்களம் மேவிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

சதுரத்தரை நோக்கிய பூவொடு ... நான்கு இதழ் கொண்டதாய்,
தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள (மூலாதாரக்)
கமலம் தொடங்கி,
கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை தழைய ... முச்சுடர்களால்
(அதாவது, சூரிய, சந்திர, அக்கினிச் சுடர்களால்) ஆன மண்டலங்கள்
(ஆறாதார நிலைகள்) குளிர்ந்து தழைய,
சிவ பாக்கிய நாடக அநுபூதி ... சிவப் பேற்றைத் தருவதான நடனப்
பெரும்பேறு ஆகிய
சரணக் கழல் காட்டியே ... திருவடிக் கழலை (அடியேனுக்குக்) காட்டி,
என் ஆணவ மலம் அற்றிட வாட்டிய ... என்னுடைய யான் எனது
என்னும் அகங்கார மமகார மலங்கள் ஒழியுமாறு கெடுத்து ஒழித்த
ஆறிரு சயிலக் குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும் ...
(உனது) பன்னிரண்டு சிறந்த மலைகள் போன்ற தோள்களையும், ஆறு
முகங்களையும்,
கதிர் சுற்று உக நோக்கிய பாதமும் ... ஒளி சுற்றிலும் பரவி
(ஆன்மாக்களைப்) பாதுகாக்கின்ற திருவடியும்,
மயிலின் புறம் நோக்கியனாம் என ... மயிலின் மேலிருந்து
பாதுகாக்கின்றவனாக
கருணைக் கடல் காட்டிய கோலமும் ... கருணைக் கடலைக் காட்டி
அருளிய திருக்கோலத்தையும்,
அடியேனை கனகத்தினும் நோக்கி இனிதாய் ... அடியேனை
பொன்னைக் காட்டிலும் இனிய பார்வையுடன் பார்த்து,
அடியவர் முத்தமிழால் புகவே ... உன் அடியவர்கள் போல யானும்
முத்தமிழ் கொண்டு பாடிப் புகழவும்,
பர கதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே ... (நான்)
மேலான நற் கதியைப் பெற நின் அருள்மிக்க தனிப்பார்வையையும்
மறவேன்.
சிதறத் தரை நால்திசை பூதர(ம்) நெரிய ... பூமி அதிர, நான்கு
திசைகளில் உள்ள மலைகள் நெரிந்து பொடிபட,
பறை மூர்க்கர்கள் மா முடி சிதற ... பறை அடித்து வந்த மூர்க்க
அசுரர்களின் பெரிய முடிகள் சிதறுண்டு விழ,
கடல் ஆர்ப்பு உறவே அயில் விடுவோனே ... கடல் ஒலி செய்து
வாய்விட்டு அலற வேலைச் செலுத்தியவனே,
சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி ... சிவனது
பத்தினியும், யமனை உதைத்த பாதத்தைக் கொண்ட சக்தி வாய்ந்தவளும்,
மூத்த விநாயகி செகம் இப்படி தோற்றிய பார்வதி
அருள்பாலா
... யாவர்க்கும் மூத்தவளும், (அடியார்களின்) இடர்களை
நீக்குபவளும், அண்டங்களை இவ்வாறு ஒரு நொடியில்
படைத்தவளுமாகிய பார்வதி தேவி ஈன்ற பாலனே,
விதுரற்கும் அராக் கொடி யானையும் ... விதுரனுக்கும், பாம்புக்
கொடி கொண்ட துரியோதனனுக்கும்,
விகடத் துறவு ஆக்கிய மாதவன் ... (மனம்) வேறுபடும்படியான
பிரிவினையை உண்டு பண்ணிய கண்ணபிரான்,
விசையற்கு உயர் தேர்ப் பரி ஊர்பவன் மருகோனே ...
அருச்சுனனின் பெரிய தேர்க் குதிரைகளை (பார்த்த சாரதியாக இருந்து)
செலுத்தியவன் ஆகிய திருமாலின் மருகனே,
வெளி எண் திசை சூரப் பொருது ஆடிய ... வெளியிலே எட்டுத்
திக்குகளிலும் வெகு வீரமாய் நின்று போர் செய்த சூரனை
கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய ... (இறுதியில் வென்று,
அவனது ஒரு பகுதியைச் சேவல்) கொடியாகக் கையிலேந்தி புகழ் விளங்க
உலவிய (பெருமாளே),
விறல் மெய்த் திருவேட்களம் மேவிய பெருமாளே. ... வெற்றியும்
சத்தியமும் விளங்கும் திருவேட்களம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும்
பெருமாளே.

Similar songs:

747 - சதுரத்தரை நோக்கிய (திருவேட்களம்)

தனனத்தன தாத்தன தானன
     தனனத்தன தாத்தன தானன
          தனனத்தன தாத்தன தானன ......தனதான

Songs from this thalam திருவேட்களம்

747 - சதுரத்தரை நோக்கிய

748 - மாத்திரை யாகிலு

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song