சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
920   பூவாளூர் திருப்புகழ் ( - வாரியார் # 930 )  

காலன் வேல் கணை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தான தாத்தன தானா தானன
     தான தாத்தன தானா தானன
          தான தாத்தன தானா தானன ...... தனதான

காலன் வேற்கணை யீர்வா ளாலமு
     நேர்க ணாற்கொலை சூழ்மா பாவிகள்
          காம சாத்திர வாய்ப்பா டேணிக ...... ளெவரேனுங்
காத லார்க்கும்வி னாவாய் கூறிகள்
     போக பாத்திர மாமூ தேவிகள்
          காசு கேட்டிடு மாயா ரூபிக ...... ளதிமோக
மாலை மூட்டிகள் வானூ டேநிமிர்
     ஆனை போற்பொர நேரே போர்முலை
          மார்பு காட்டிகள் நானா பேதக ...... மெனமாயா
மாப ராக்கிக ளோடே சீரிய
     போது போக்குத லாமோ நீயினி
          வாவெ னாப்பரி வாலே யாள்வது ...... மொருநாளே
பால றாத்திரு வாயா லோதிய
     ஏடு நீர்க்கெதிர் போயே வாதுசெய்
          பாடல் தோற்றிரு நாலா மாயிர ...... சமண்மூடர்
பாரின் மேற்கழு மீதே யேறிட
     நீறி டாத்தமிழ் நாடீ டேறிட
          பாது காத்தரு ளாலே கூனிமி ...... ரிறையோனும்
ஞால மேத்திய தோர்மா தேவியும்
     ஆல வாய்ப்பதி வாழ்வா மாறெணு
          ஞான பாக்கிய பாலா வேலவ ...... மயில்வீரா
ஞான தீக்ஷித சேயே காவிரி
     யாறு தேக்கிய கால்வாய் மாமழ
          நாடு போற்றிய பூவா ளுருறை ...... பெருமாளே.
Easy Version:
காலன் வேல் கணை ஈர் வாள் ஆலமு(ம்) நேர் க(ண்)ணால்
கொலை சூழ் மா பாவிகள்
காம சாத்திர வாய் பாடா ஏணிகள் எவரேனும் காதல்
ஆர்க்கும் வினா வாய் கூறிகள்
போக பாத்திர மா மூதேவிகள் காசு கேட்டிடு(ம்) மாயா
ரூபிகள்
அதி மோக மாலை மூட்டிகள் வானூடே நிமிர் ஆனை போல்
பொர நேரே போர் முலை மார்பு காட்டிகள்
நானா பேதகம் என மாயா மா பராக்கிகளோடே சீரிய போது
போக்குதல் ஆமோ
நீ இனி வா எனா பரிவாலே ஆள்வதும் ஒரு நாளே
பால் அறாத் திரு வாயால் ஓதிய ஏடு நீர்க்கு எதிர் போயே
வாது செய் பாடல் தோற்ற இரு நாலாம் ஆயிரம் சமண் மூடர்
பாரின் மேல் கழு மீதே ஏறிட
நீறு இடாத் தமிழ் நாடு ஈடேறிட பாதுகாத்து
அருளாலே கூன் நிமிர் இறையோனும் ஞாலம் ஏத்தியதோர்
மா தேவியும் ஆலவாய்ப் பதி வாழ்வாமாறு எ(ண்)ணும்
ஞான பாக்கிய பாலா வேல மயில் வீரா ஞான தீக்ஷித
சேயே
காவிரி ஆறு தேக்கிய கால்வாய் மா மழ நாடு போற்றிய
பூவாளூர் உறை பெருமாளே.
Add (additional) Audio/Video Link

காலன் வேல் கணை ஈர் வாள் ஆலமு(ம்) நேர் க(ண்)ணால்
கொலை சூழ் மா பாவிகள்
... யமன், வேல், அம்பு, அறுக்கும் வாள்,
விஷம் இவைகளுக்கு ஒப்பான கண்களைக் கொண்டு கொலைத்
தொழிலையே செய்யச் சூழ்ச்சி செய்கின்ற மகா பாவிகள்,
காம சாத்திர வாய் பாடா ஏணிகள் எவரேனும் காதல்
ஆர்க்கும் வினா வாய் கூறிகள்
... காம சாஸ்திரத்தை வாய்ப்பாடாகக்
கொண்டவர்கள், ஏணியை வைத்து ஏறவிட்டு வரவழைக்கும் தன்மை
கொண்டவர்கள், யாராக இருந்தாலும் பாராட்டாமல் காம இச்சை நிறைந்த
சொற்களை வாயாரப் பேசுபவர்கள்,
போக பாத்திர மா மூதேவிகள் காசு கேட்டிடு(ம்) மாயா
ரூபிகள்
... காம இன்பத்துக்கு இருப்பிடமான மகா மூதேவிகள், பொருள்
தா என்று கேட்கின்ற மாயச் சொரூபிகள்,
அதி மோக மாலை மூட்டிகள் வானூடே நிமிர் ஆனை போல்
பொர நேரே போர் முலை மார்பு காட்டிகள்
... அதிக ஆசை
மயக்கத்தை மூட்டுபவர்கள், ஆகாயத்தை நிமிர்ந்து நோக்கும் யானையைப்
போலச் சண்டை செய்ய நேராகப் போருக்கு எழும் மார்பகங்களைக்
காட்டுபவர்கள்,
நானா பேதகம் என மாயா மா பராக்கிகளோடே சீரிய போது
போக்குதல் ஆமோ
... இப்படி வேறுபாடுகளை உடைய மாயைகளைச்
செய்ய வல்ல பெரிய பராக்குக்காரிகளாகிய வேசையருடன் என்
நற்பொழுதைப் போக்குதல் தகுமோ?
நீ இனி வா எனா பரிவாலே ஆள்வதும் ஒரு நாளே ... நீ இனி
என்னை வா என்று அன்புடன் அழைத்து ஆள்வதான ஒரு நாள் என்று
கிடைக்கும்?
பால் அறாத் திரு வாயால் ஓதிய ஏடு நீர்க்கு எதிர் போயே ...
(பார்வதி தேவியின்) முலைப்பால் மணம் நீங்காத திருவாயால் நீ
(திருஞானசம்பந்தராக வந்து) பாடிய பாடல் உள்ள ஏடு (வைகையாற்றின்)
நீரை எதிர்த்துப் போகவும்,
வாது செய் பாடல் தோற்ற இரு நாலாம் ஆயிரம் சமண் மூடர்
பாரின் மேல் கழு மீதே ஏறிட
... வாது செய்த பாடலுக்குத் தோற்ற
எண்ணாயிரம் சமண மூடர்கள் இப்பூமியில் கழு மேல் ஏறவும்,
நீறு இடாத் தமிழ் நாடு ஈடேறிட பாதுகாத்து ... திருநீற்றை
இடாதிருந்த தமிழ் நாடு ஈடேற (திரு நீறு அனைவருக்கும் தந்து)
பாதுகாத்து,
அருளாலே கூன் நிமிர் இறையோனும் ஞாலம் ஏத்தியதோர்
மா தேவியும் ஆலவாய்ப் பதி வாழ்வாமாறு எ(ண்)ணும்
... உனது
திருவருளால் கூன் நிமிர்ந்த பாண்டியன் நெடுமாறனும், உலகெலாம்
போற்ற நின்ற ஒப்பற்ற மாதேவியான (பாண்டியன் மனைவி)
மங்கையர்க்கரசியும், திருஆலவாய் என்ற மதுரையில் உள்ளவர்களும்
நல் வாழ்வு அடையும்படி திருவுள்ளத்தில் நினைந்தருளிய
ஞான பாக்கிய பாலா வேல மயில் வீரா ஞான தீக்ஷித
சேயே
... ஞான பாக்கிய பாலனே, வேலனே, மயில் வீரனே, ஞான
அறிவுரைகளைச் செய்த குழந்தையே,
காவிரி ஆறு தேக்கிய கால்வாய் மா மழ நாடு போற்றிய
பூவாளூர் உறை பெருமாளே.
... காவிரி ஆறு நிறைந்து வரும்
கால்வாய்கள் உள்ள சிறந்த மழ நாட்டுப் பகுதியில் சிறப்புடன் உள்ள
பூவாளூரில் வீற்றிருக்கும் பெருமாளே.

Similar songs:

920 - காலன் வேல் கணை (பூவாளூர்)

தான தாத்தன தானா தானன
     தான தாத்தன தானா தானன
          தான தாத்தன தானா தானன ...... தனதான

Songs from this thalam பூவாளூர்

920 - காலன் வேல் கணை

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song