| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
திருஒற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை - இராமலிங்க அடிகள்
கட்டளைக் கலித்துறை
1- சீர்கொண்ட ஒற்றிப் 2- கடலமு தேசெங் 3- அணியே அணிபெறும் 4- மானேர் விழிமலை 5- பொருளே அடியர் 6- திருமாலும் நான்முகத் 7- உன்னேர் அருள்தெய்வம் 8- கண்ணேஅக் கண்ணின் 9- மலையான் தவஞ்செய்து 10- காமம் படர்நெஞ் 11- கோடா அருட்குணக் 12- நாலே எனுமறை 13- கங்கைகொண் டோன்ஒற்றி 14- சோலையிட் டார்வயல் 15- தனையாள் பவரின்றி 16- பின்னீன்ற பிள்ளையின் 17- பையாளும் அல்குல் 18- இலையாற்று நீமலர்க் 19- கலைமக ளோநின் 20- பொன்னோடு வாணிஎன் 21- காமட் டலர்திரு 22- வீற்றார்நின் றன்மணத் 23- பொருப்புறு நீலியென் 24- அனம்பொறுத் தான்புகழ் 25- ஒருரு வாய்ஒற்றி 26- சார்ந்தேநின் பால்ஒற்றி 27- நீயே எனது 28- முப்போதும் அன்பர்கள் 29- மீதலத் தோர்களுள் 30- சேய்க்குற்றம் தாய்பொறுத் 31- செங்கம லாசனன் 32- சேடா ரியன்மணம் 33- புரநோக்கி னால்பொடி 34- உன்னும் திருவொற்றி 35- வெள்ளம் குளிரும் 36- மாநந்த மார்வயல் 37- வான்தேட நான்கு 38- முத்தேவர் விண்ணன் 39- திருநாள் நினைத்தொழும் 40- வாணாள் அடைவர் 41- சீரறி வாய்த்திரு 42- போற்றிடு வோர்தம் 43- ஆசைஉள் ளார்அயன் 44- அண்டாரை வென்றுல 45- அடியார் தொழுநின் 46- ஓவா தயன்முத 47- இட்டார் மறைக்கும் 48- வெளியாய் வெளிக்குள் 49- விணங்காத லன்பர்தம் 50- பன்னும்பல் வேறண்டம் 51- சினங்கடந் தோர்உள்ளச் 52- வல்லாரும் வல்லவர் 53- எழுதா எழில்உயிர்ச் 54- தெருட்பா லுறும்ஐங்கைச் 55- அயிலேந்தும் பிள்ளைநற் 56- செய்யகம் ஓங்கும் 57- தரும்பேர் அருளொற்றி 58- சேலேர் விழியருள் 59- எம்பால் அருள்வைத் 60- ஏமமுய்ப் போர்எமக் 61- மன்னேர் மலையன் 62- கணமொன்றி லேனும்என் 63- கருவே தனையற 64- எண்ணிய எண்ணங்கள் 65- தீதுசெய் தாலும்நின் 66- மருந்தினின் றான்ஒற்றி 67- என்போல் குணத்தில் 68- துன்பே மிகும்இவ் 69- சற்றே யெனினும்என் 70- சந்தோட மாப்பிறர் 71- அடியேன் மிசைஎப் 72- கண்ணப்பன் ஏத்துநற் 73- கற்பே விகற்பம் 74- மிகவே துயர்க்கடல் 75- வேதங்க ளாய்ஒற்றி 76- மதியே மதிமுக 77- ஆறாத் துயரத் 78- எற்றே நிலைஒன்றும் 79- செவ்வேலை வென்றகண் 80- தாயே மிகவும் 81- நானே நினைக்கடி 82- கல்லா ரிடத்தில்என் 83- சுந்தர வாண்முகத் 84- பத்தர்தம் உள்ளத் 85- பூவாய் மலர்க்குழல் 86- தாதா உணவுடை 87- களந்திரும் பாஇக் 88- ஆரணம் பூத்த 89- திருவல்லி ஏத்தும் 90- உடையென்ன ஒண்புலித் 91- கற்பதும் கேட்பதும் 92- நின்னால் எனக்குள 93- நன்றே சிவநெறி 94- அத்தனை ஒற்றிக் 95- கூறாத வாழ்க்கைச் 96- ஓயா இடர்கொண் 97- பெரும்பேதை யேன்சிறு 98- காதர வால்உட் 99- பொன்னுடை யார்அன்றிப் 100- பொய்விட்டி டாதவன் 101- நேயானு கூல 102- வாழிநின் சேவடி
Back to Top
1
சீர்கொண்ட ஒற்றிப்
சீர்கொண்ட ஒற்றிப் பதியுடை யானிடம் சேர்ந்தமணி
வார்கொண்ட கொங்கை வடிவாம் பிகைதன் மலரடிக்குத்
தார்கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்தத் தமியனுக்கே
ஏர்கொண்ட நல்லருள் ஈயும் குணாலய ஏரம்பனே.
2
கடலமு தேசெங்
கடலமு தேசெங் கரும்பே அருட்கற்ப கக்கனியே
உடல்உயி ரேஉயிர்க் குள்உணர் வேஉணர் வுள்ஒளியே
அடல்விடை யார்ஒற்றி யார்இடங் கொண்ட அருமருந்தே
மடலவிழ் ஞான மலரே வடிவுடை மாணிக்கமே.
3
அணியே அணிபெறும்
அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற்
குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன்தவமே
பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா
மணியேஎன் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே.
4
மானேர் விழிமலை
மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே
கானேர் அளகப் பசுங்குயி லேஅருட் கட்கரும்பே
தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே
வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
5
பொருளே அடியர்
பொருளே அடியர் புகலிட மேஒற்றிப் பூரணன்தண்
அருளேஎம் ஆருயிர்க் காந்துணை யேவிண் ணவர்புகழும்
தெருளேமெய்ஞ் ஞானத் தெளிவே மறைமுடிச் செம்பொருளே
மருளேத நீக்கும் ஒளியே வடிவுடை மாணிக்கமே.
6
திருமாலும் நான்முகத்
திருமாலும் நான்முகத் தேவுமுன் னாள்மிகத் தேடிமனத்
தருமா லுழக்க அனலுரு வாகி அமர்ந்தருளும்
பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம் மான்கொளும் பித்தன்மலை
மருமான் இடங்கொள்பெண் மானே வடிவுடை மாணிக்கமே.
7
உன்னேர் அருள்தெய்வம்
உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப்
பொன்னேஅப் பொன்னற் புதஒளி யேமலர்ப் பொன்வணங்கும்
அன்னே எம்ஆருயிர்க் கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ்
மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே.
8
கண்ணேஅக் கண்ணின்
கண்ணேஅக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய்
விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே
மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
9
மலையான் தவஞ்செய்து
மலையான் தவஞ்செய்து பெற்றமுத் தேஒற்றி வாழ்கனகச்
சிலையான் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே
அலையான் மலிகடல் பள்ளிகொண் டான்தொழும் ஆரமுதே
வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே.
10
காமம் படர்நெஞ்
காமம் படர்நெஞ் சுடையோர் கனவினும் காணப்படாச்
சேமம் படர்செல்வப் பொன்னே மதுரச் செழுங்கனியே
தாமம் படர்ஒற்றி யூர்வாழ் பவளத் தனிமலையின்
வாமம் படர்பைங் கொடியே வடிவுடை மாணிக்கமே.
11
கோடா அருட்குணக்
கோடா அருட்குணக் குன்றே சிவத்தில் குறிப்பிலரை
நாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர் நயக்கும் இன்பே
பீடார் திருவொற்றிப் பெம்மான் இடஞ்செய் பெருந்தவமே
வாடா மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே.
12
நாலே எனுமறை
நாலே எனுமறை அந்தங்கள் இன்னமும் நாடியெனைப்
போலே வருந்த வெளிஒளி யாய்ஒற்றிப் புண்ணியர்தம்
பாலே இருந்த நினைத்தங்கை யாகப் பகரப்பெற்ற
மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே.
Back to Top
13
கங்கைகொண் டோன்ஒற்றி
கங்கைகொண் டோன்ஒற்றி யூர்அண்ணல் வாமம் கலந்தருள்செய்
நங்கைஎல் லாஉல குந்தந்த நின்னைஅந் நாரணற்குத்
தங்கைஎன் கோஅன்றித் தாயர்என் கோசொல் தழைக்குமலை
மங்கையங் கோமள மானே வடிவுடை மாணிக்கமே.
14
சோலையிட் டார்வயல்
சோலையிட் டார்வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டரன்பின்
வேலையிட் டால்செயும் பித்தனை மெய்யிடை மேவுகரித்
தோலையிட் டாடும் தொழிலுடை யோனைத் துணிந்துமுன்னாள்
மாலையிட் டாய்இஃதென்னே வடிவுடை மாணிக்கமே.
15
தனையாள் பவரின்றி
தனையாள் பவரின்றி நிற்கும் பரமன் தனிஅருளாய்
வினையாள் உயிர்மல நீக்கிமெய் வீட்டின் விடுத்திடுநீ
எனையாள் அருளொற்றி யூர்வா ழவன்றன் னிடத்துமொரு
மனையாள் எனநின்ற தென்னே வடிவுடை மாணிக்கமே.
16
பின்னீன்ற பிள்ளையின்
பின்னீன்ற பிள்ளையின் மேலார்வம் தாய்க்கெனப் பேசுவர்நீ
முன்னீன்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவா மொய்யசுரர்
கொன்னீன்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவக் கொடுத்ததென்னே
மன்னீன்ற ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
17
பையாளும் அல்குல்
பையாளும் அல்குல் சுரர்மட வார்கள் பலருளும்இச்
செய்யாளும் வெண்ணிற மெய்யாளும் எத்தவம் செய்தனரோ
கையாளும் நின்னடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய்
மையாளும் கண்ணொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
18
இலையாற்று நீமலர்க்
இலையாற்று நீமலர்க் காலால் பணிக்குங்குற் றேவலெலாம்
தலையால் செயும்பெண்கள் பல்லோரில் பூமகள் தன்னைத்தள்ளாய்
நிலையால் பெரியநின் தொண்டர்தம் பக்க நிலாமையினான்
மலையாற் கருளொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
19
கலைமக ளோநின்
கலைமக ளோநின் பணியைஅன் போடும் கடைப்பிடித்தாள்
அலைமக ளோஅன் பொடுபிடித் தாள்எற் கறைதிகண்டாய்
தலைமக ளேஅருட் டாயேசெவ் வாய்க்கருந் தாழ்குழற்பொன்
மலைமக ளேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
20
பொன்னோடு வாணிஎன்
பொன்னோடு வாணிஎன் போரிரு வோரும் பொருணற்கல்வி
தன்னோ டருளுந் திறநின்குற் றேவலைத் தாங்கிநின்ற
பின்னோ அலததன் முன்னோ தெளிந்திடப் பேசுகநீ
மன்னோ டெழிலொற்றி யூர்வாழ் வடிவுடை மாணிக்கமே.
Back to Top
21
காமட் டலர்திரு
காமட் டலர்திரு வொற்றிநின் னாயகன் கந்தைசுற்றி
யேமட் டரையொடு நிற்பது கண்டும் இரங்கலர்போல்
நீமட்டு மேபட் டுடுக்கின் றனைஉன்றன் நேயம்என்னோ
மாமட் டலர்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
22
வீற்றார்நின் றன்மணத்
வீற்றார்நின் றன்மணத் தம்மியின் மேல்சிறு மெல்லனிச்சம்
ஆற்றாநின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத் தாரெனின்மால்
ஏற்றார் திருவொற்றி யூரார் களக்கறுப் பேற்றவரே
மாற்றா இயல்கொண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
23
பொருப்புறு நீலியென்
பொருப்புறு நீலியென் பார்நின்னை மெய்அது போலும்ஒற்றி
விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும்
நெருப்புறு கையும் கனல்மேனி யும்கண்டு நெஞ்சம்அஞ்சாய்
மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே.
24
அனம்பொறுத் தான்புகழ்
அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழித்
தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி தன்னில்வைத்தே
தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச் சேர்ந்தநின்போல்
மனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே.
Back to Top
25
ஒருரு வாய்ஒற்றி
ஒருரு வாய்ஒற்றி யூர்அமர்ந் தார்நின் னுடையவர்பெண்
சீருரு வாகுநின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில்
நீருரு வாக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே
வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே.
26
சார்ந்தேநின் பால்ஒற்றி
சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும் நாயகர் தாமகிழ்வு
கூர்ந்தே குலாவும்அக் கொள்கையைக் காணில் கொதிப்பளென்று
தேர்ந்தேஅக் கங்கையைச் செஞ்சடை மேல்சிறை செய்தனர்ஒண்
வார்ந்தே குழைகொள் விழியாய் வடிவுடை மாணிக்கமே.
27
நீயே எனது
நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப்
பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனைப் பெற்றளிக்கும்
தாயே கருணைத் தடங்கட லேஒற்றிச் சார்குமுத
வாயேர் சவுந்தர35 மானே வடிவுடை மாணிக்கமே.
28
முப்போதும் அன்பர்கள்
முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ்
ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை
எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய்
மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
29
மீதலத் தோர்களுள்
மீதலத் தோர்களுள் யார்வணங் காதவர் மேவுநடுப்
பூதலத் தோர்களுள் யார்புக ழாதவர் போற்றிநிதம்
பாதலத் தோர்களுள் யார்பணி யாதவர் பற்றிநின்றாள்
மாதலத் தோங்கொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
30
சேய்க்குற்றம் தாய்பொறுத்
சேய்க்குற்றம் தாய்பொறுத் தேடா வருகெனச் செப்புவள்இந்
நாய்க்குற்றம் நீபொறுத் தாளுதல் வேண்டும் நவின்மதியின்
தேய்க்குற்ற மாற்றும் திருவொற்றி நாதர்தந் தேவிஅன்பர்
வாய்க்குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே.
31
செங்கம லாசனன்
செங்கம லாசனன் தேவிபொன் நாணும் திருமுதலோர்
சங்கம தாமிடற் றோங்குபொன் நாணும் தலைகுனித்துத்
துங்கமு றாதுளம் நாணத் திருவொற்றித் தோன்றல்புனை
மங்கல நாணுடை யாளே வடிவுடை மாணிக்கமே.
32
சேடா ரியன்மணம்
சேடா ரியன்மணம் வீசச் செயன்மணம் சேர்ந்துபொங்க
ஏடார் பொழிலொற்றி யூரண்ணல் நெஞ்சம் இருந்துவக்க
வீடா இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த
வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
33
புரநோக்கி னால்பொடி
புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களக்
கரநோக்கி36 நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினர்ஆ
தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகந்தான்
வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
34
உன்னும் திருவொற்றி
உன்னும் திருவொற்றி யூருடை யார்நெஞ் சுவப்பஎழில்
துன்னும் உயிர்ப்பயிர் எல்லாந் தழைக்கச் சுகக்கருணை
என்னும் திருவமு தோயாமல் ஊற்றி எமதுளத்தின்
மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
35
வெள்ளம் குளிரும்
வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன்
உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத்
தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ் வாய்க்குமுத
வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே.
36
மாநந்த மார்வயல்
மாநந்த மார்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன்
றாநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே
காநந்த வோங்கும் எழிலொற்றி யார்உட் களித்தியலும்
வாநந் தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
37
வான்தேட நான்கு
வான்தேட நான்கு மறைதேட மாலுடன் வாரிசமே
லான்தேட மற்றை அருந்தவர் தேடஎன் அன்பின்மையால்
யான்தேட என்னுளம் சேர்ஒற்றி யூர்எம் இருநிதியே
மான்தேடும் வாட்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
38
முத்தேவர் விண்ணன்
முத்தேவர் விண்ணன் முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை
எத்தே வருநின் அடிநினை வார்நினைக் கின்றிலர்தாம்
செத்தே பிறக்கும் சிறியர்அன் றோஒற்றித் தேவர்நற்றா
மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
39
திருநாள் நினைத்தொழும்
திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொழாமல் செலுத்தியநாள்
கருநாள் எனமறை எல்லாம் புகலும் கருத்தறிந்தே
ஒருநா ளினுநின் றனைமற வார்அன்பர் ஒற்றியில்வாழ்
மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
40
வாணாள் அடைவர்
வாணாள் அடைவர் வறுமை யுறார்நன் மனைமக்கள்பொன்
பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும்
காணார்நின் நாமம் கருதுகின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால்
மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
41
சீரறி வாய்த்திரு
சீரறி வாய்த்திரு வொற்றிப் பரம சிவத்தைநினைப்
போரறி வாய்அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துநின்றாய்
யாரறி வார்நின்னை நாயேன்அறிவ தழகுடைத்தே
வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே.
42
போற்றிடு வோர்தம்
போற்றிடு வோர்தம் பிழைஆ யிரமும் பொறுத்தருள்செய்
வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே
ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார்இடத்தில் இலங்கும்உயர்
மாற்றொளி ரும்பசும் பொன்னே வடிவுடை மாணிக்கமே.
43
ஆசைஉள் ளார்அயன்
ஆசைஉள் ளார்அயன் மால்ஆதி தேவர்கள் யாரும்நின் தாள்
பூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார்
தேசையுள் ளார்ஒற்றி யூருடை யார்இடஞ் சேர்மயிலே
மாசையுள் 38 ளார்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
44
அண்டாரை வென்றுல
அண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ் ஞானம் அடைந்துவிண்ணில்
பண்டாரை சூழ்மதி போலிருப் போர்கள்நின் பத்தர்பதம்
கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்ணுதல்சேர்
வண்டாரை வேலன்ன மானே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
45
அடியார் தொழுநின்
அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற
முடியால் அடிக்குப் பெருமைபெற் றார்அம் முகுந்தன்சந்தக்
கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றிக் கடவுட்செம்பால்
வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே.
46
ஓவா தயன்முத
ஓவா தயன்முத லோர்முடி கோடி உறழ்ந்துபடில்
ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றுங்கொலோ
காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி
வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
47
இட்டார் மறைக்கும்
இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றும்
எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ
கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச கத்தமர்ந்த
மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே.
48
வெளியாய் வெளிக்குள்
வெளியாய் வெளிக்குள் வெறுவெளி யாய்ச்சிவ மேநிறைந்த
ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரைநினை ஒப்பவரார்
எளியார்க் கெளியர் திருவொற்றி யார்மெய் இனிதுபரி
மளியாநின் றோங்கு மருவே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
49
விணங்காத லன்பர்தம்
விணங்காத லன்பர்தம் அன்பிற்கும் நின்புல விக்கும்அன்றி
வணங்கா மதிமுடி எங்கள் பிரான்ஒற்றி வாணனும்நின்
குணங்கா தலித்துமெய்க் கூறுதந் தான்எனக் கூறுவர்உன்
மணங்கா தலித்த தறியார் வடிவுடை மாணிக்கமே.
50
பன்னும்பல் வேறண்டம்
பன்னும்பல் வேறண்டம் எல்லாம்அவ் அண்டப் பரப்பினின்று
துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும்உன்னை
இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பதென்னே
மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
51
சினங்கடந் தோர்உள்ளச்
சினங்கடந் தோர்உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை
மனங்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே
தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே
வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
52
வல்லாரும் வல்லவர்
வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர்முதல்
எல்லாரும் நின்செயல் அல்லா தணுவும் இயக்கிலரேல்
இல்லாமை யால்உழல் புல்லேன்செய் குற்றங்கள் ஏதுகண்டாய்
மல்லார் வயல்ஒற்றி நல்லாய் வடிவுடை மாணிக்கமே.
Back to Top
53
எழுதா எழில்உயிர்ச்
எழுதா எழில்உயிர்ச் சித்திர மேஇன் இசைப்பயனே
தொழுதாடும் அன்பர்தம் உட்களிப் பேசிற் சுகக்கடலே
செழுவார் மலர்ப்பொழில் ஒற்றிஎம் மான்தன் திருத்துணையே
வழுவா மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே.
54
தெருட்பா லுறும்ஐங்கைச்
தெருட்பா லுறும்ஐங்கைச் செல்வர்க்கும் நல்லிளஞ் சேய்க்குமகிழ்ந்
தருட்பால் அளிக்கும் தனத்தன மேஎம் அகங்கலந்த
இருட்பால் அகற்றும் இருஞ்சுட ரேஒற்றி எந்தைஉள்ளம்
மருட்பால் பயிலு மயிலே வடிவுடை மாணிக்கமே.
55
அயிலேந்தும் பிள்ளைநற்
அயிலேந்தும் பிள்ளைநற் றாயே திருவொற்றி ஐயர்மலர்க்
கயிலேந்39 தரும்பெறல் முத்தே இசையில் கனிந்தகுரல்
குயிலே குயின்மென் குழற்பிடி யேமலைக் கோன்பயந்த
மயிலே மதிமுக மானே வடிவுடை மாணிக்கமே.
56
செய்யகம் ஓங்கும்
செய்யகம் ஓங்கும் திருவொற்றி யூரில் சிவபெருமான்
மெய்யகம் ஓங்குநல் அன்பேநின் பால்அன்பு மேவுகின்றோர்
கையகம் ஓங்கும் கனியே தனிமெய்க் கதிநெறியே
வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
57
தரும்பேர் அருளொற்றி
தரும்பேர் அருளொற்றி யூருடை யான்இடஞ் சார்ந்தபசுங்
கரும்பே இனியகற் கண்டே மதுரக் கனிநறவே
இரும்பேய் மனத்தினர் பால்இசை யாத இளங்கிளியே
வரும்பேர் ஒளிச்செஞ் சுடரே வடிவுடை மாணிக்கமே.
58
சேலேர் விழியருள்
சேலேர் விழியருள் தேனே அடியருள் தித்திக்கும்செம்
பாலே மதுரச்செம் பாகேசொல் வேதப் பனுவல்முடி
மேலே விளங்கும் விளக்கே அருளொற்றி வித்தகனார்
மாலே கொளும்எழில் மானே வடிவுடை மாணிக்கமே.
59
எம்பால் அருள்வைத்
எம்பால் அருள்வைத் தெழிலொற்றி யூர்கொண் டிருக்கும் இறைச்
செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே
வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே
வம்பால் அணிமுலை மானே வடிவுடை மாணிக்கமே.
60
ஏமமுய்ப் போர்எமக்
ஏமமுய்ப் போர்எமக் கென்றே இளைக்கில் எடுக்கவைத்த
சேமவைப் பேஅன்பர் தேடுமெய்ஞ் ஞானத் திரவியமே
தாமமைக் கார்மலர்க் கூந்தல் பிடிமென் தனிநடையாய்
வாமநற் சீர்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
61
மன்னேர் மலையன்
மன்னேர் மலையன் மனையும்நற் காஞ்சன மாலையும்நீ
அன்னே எனத்திரு வாயால் அழைக்கப்பெற் றார்அவர்தாம்
முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி
வன்னேர் இளமுலை மின்னே வடிவுடை மாணிக்கமே.
62
கணமொன்றி லேனும்என்
கணமொன்றி லேனும்என் உள்ளக் கவலைக் கடல்கடந்தே
குணமொன்றி லேன்எது செய்கேன்நின் உள்ளக் குறிப்பறியேன்
பணமொன்று பாம்பணி ஒற்றிஎம் மானிடப் பாலில்தெய்வ
மணமொன்று பச்சைக் கொடியே வடிவுடை மாணிக்கமே.
63
கருவே தனையற
கருவே தனையற என்னெஞ் சகத்தில் களிப்பொடொற்றிக்
குருவே எனும்நின் கணவனும் நீயும் குலவும்அந்தத்
திருவே அருள்செந் திருவே முதற்பணி செய்யத் தந்த
மருவே மருவு மலரே வடிவுடை மாணிக்கமே.
64
எண்ணிய எண்ணங்கள்
எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குன்அருள்
பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும்
புண்ணிய மல்லிகைப் போதே எழில்ஒற்றிப் பூரணர்பால்
மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
65
தீதுசெய் தாலும்நின்
தீதுசெய் தாலும்நின் அன்பர்கள் தம்முன் செருக்கிநின்று
வாதுசெய் தாலும்நின் தாள்மறந் தாலும் மதியிலியேன்
ஏதுசெய் தாலும் பொறுத்தருள் வாய்ஒற்றி யின்னிடைப்பூ
மாதுசெய் தாழ்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
66
மருந்தினின் றான்ஒற்றி
மருந்தினின் றான்ஒற்றி யூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும்
திருந்திநின் றார்புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே
விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு
வருந்திநின் றேன்இது நன்றோ வடிவுடை மாணிக்கமே.
67
என்போல் குணத்தில்
என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும்
நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇந் நீர்மையினால்
பொன்போலும் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய்
மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
68
துன்பே மிகும்இவ்
துன்பே மிகும்இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள்
இன்பே மிகுவதெந் நாளோ எழிலொற்றி எந்தைஉயிர்க்
கன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக் கன்பிலர்பால்
வன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
69
சற்றே யெனினும்என்
சற்றே யெனினும்என் நெஞ்சத் துயரம் தவிரவும்நின்
பொற்றே மலர்ப்பதம் போற்றவும் உள்ளம் புரிதிகண்டாய்
சொற்றேர் அறிஞர் புகழ்ஒற்றி மேவும் துணைவர்தஞ்செம்
மற்றேர் புயத்தணை மானே வடிவுடை மாணிக்கமே.
70
சந்தோட மாப்பிறர்
சந்தோட மாப்பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால்
அந்தோ ஒருதமி யேன்மட்டும் வாடல் அருட்கழகோ
நந்தோட நீக்கிய நங்காய் எனத்திரு நான்முகன்மால்
வந்தோதும் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
71
அடியேன் மிசைஎப்
அடியேன் மிசைஎப் பிழையிருந் தாலும் அவைபொறுத்துச்
செடியேதம் நீக்கிநற் சீரருள் வாய்திகழ் தெய்வமறைக்
கொடியே மரகதக் கொம்பே எழில்ஒற்றிக் கோமளமே
வடியேர் அயில்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
72
கண்ணப்பன் ஏத்துநற்
கண்ணப்பன் ஏத்துநற் காளத்தி யார்மங் கலங்கொள்ஒற்றி
நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நன்னறவே
எண்ணப் படாஎழில் ஓவிய மேஎமை ஏன்றுகொண்ட
வண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
73
கற்பே விகற்பம்
கற்பே விகற்பம் கடியும்ஒன் றேஎங்கள் கண்நிறைந்த
பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணிய மேஅருட் போதஇன்பே
சொற்பேர் அறிவுட் சுகப்பொரு ளேமெய்ச் சுயஞ்சுடரே
மற்பேர் பெறும்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
74
மிகவே துயர்க்கடல்
மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனை நீகை விடுதலருள்
தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும்
சுகவேலை மூழ்கத் திருவொற்றி யூரிடந் துன்னிப்பெற்ற
மகவே எனப்புரக் கின்றோய் வடிவுடை மாணிக்கமே.
75
வேதங்க ளாய்ஒற்றி
வேதங்க ளாய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருளாய்ப்
பூதங்க ளாய்ப்பொறி யாய்ப்புல னாகிப் புகல்கரண
பேதங்க ளாய்உயிர் ஆகிய நின்னைஇப் பேதைஎன்வாய்
வாதங்க ளால்அறி வேனோ வடிவுடை மாணிக்கமே.
76
மதியே மதிமுக
மதியே மதிமுக மானே அடியர் மனத்துவைத்த
நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள்நிலையே
கதியே கதிவழி காட்டுங்கண் ணேஒற்றிக் காவலர்பால்
வதியேர் இளமட மானே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
77
ஆறாத் துயரத்
ஆறாத் துயரத் தழுந்துகின் றேனைஇங் கஞ்சல்என்றே
கூறாக் குறைஎன் குறையே இனிநின் குறிப்பறியேன்
தேறாச் சிறியர்க் கரிதாம் திருவொற்றித் தேவர்மகிழ்
மாறாக் கருணை மழையே வடிவுடை மாணிக்கமே.
78
எற்றே நிலைஒன்றும்
எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச்
சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செயத் தக்கதென்னே
சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க்கொழுந்தே
மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
79
செவ்வேலை வென்றகண்
செவ்வேலை வென்றகண் மின்னேநின் சித்தம் திரும்பிஎனக்
கெவ்வேலை செய்என் றிடினும்அவ் வேலை இயற்றுவல்காண்
தெவ்வேலை வற்றச்செய் அவ்வேலை யீன்றொற்றித் தேவர்நெஞ்சை
வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
80
தாயே மிகவும்
தாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச்
சேயேன் படுந்துயர் நீக்கஎன் னேஉளம் செய்திலையே
நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு
வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
81
நானே நினைக்கடி
நானே நினைக்கடி யேன்என் பிழைகளை நாடியநீ
தானே எனைவிடில் அந்தோ இனிஎவர் தாங்குகின்றோர்
தேனேநல் வேதத் தெளிவே கதிக்குச் செலுநெறியே
வானேர் பொழில்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
82
கல்லா ரிடத்தில்என்
கல்லா ரிடத்தில்என் இல்லாமை சொல்லிக் கலங்கிஇடர்
நல்லாண்மை உண்டருள் வல்லாண்மை உண்டெனின் நல்குவையோ
வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி வாணரொடு
மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
83
சுந்தர வாண்முகத்
சுந்தர வாண்முகத் தோகாய் மறைகள் சொலும்பைங்கிள்ளாய்
கந்தர வார்குழற் பூவாய் கருணைக் கடைக்கண்நங்காய்
அந்தர நேரிடைப் பாவாய் அருள்ஒற்றி அண்ணல்மகிழ்
மந்தர நேர்கொங்கை மங்காய் வடிவுடை மாணிக்கமே.
84
பத்தர்தம் உள்ளத்
பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே
சுத்தமெய்ஞ் ஞான ஒளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே
நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன்
மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
85
பூவாய் மலர்க்குழல்
பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ்ப்
பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந் தேனிற் பகர்மொழியாய்
காவாய் எனஅயன் காவாய் பவனும் கருதுமலர்
மாவாய் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
86
தாதா உணவுடை
தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய்
மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ
காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட
வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே.
87
களந்திரும் பாஇக்
களந்திரும் பாஇக் கடையேனை ஆளக் கருணைகொண்டுன்
உளந்திரும் பாமைக்கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன்
குளந்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற
வளந்திரும் பாஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
88
ஆரணம் பூத்த
ஆரணம் பூத்த அருட்கோ மளக்கொடி அந்தரிபூந்
தோரணம் பூத்த எழில்ஒற்றி யூர்மகிழ் சுந்தரிசற்
காரணம் பூத்த சிவைபார்ப் பதிநங் கவுரிஎன்னும்
வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை மாணிக்கமே.
Back to Top
89
திருவல்லி ஏத்தும்
திருவல்லி ஏத்தும் அபிடேக வல்லிஎஞ் சென்னியிடை
வருவல்லி கற்பக வல்லிஒண் பச்சை மணிவல்லிஎம்
கருவல்லி நீக்கும் கருணாம் பகவல்லி கண்கொள்ஒற்றி
மருவல்லி என்று மறைதேர் வடிவுடை மாணிக்கமே.
90
உடையென்ன ஒண்புலித்
உடையென்ன ஒண்புலித் தோல்உடை யார்கண் டுவக்குமிள
நடையன்ன மேமலர்ப் பொன்முத லாம்பெண்கள் நாயகமே
படையன்ன நீள்விழி மின்னேர் இடைப்பொற் பசுங்கிளியே
மடைமன்னு நீர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
91
கற்பதும் கேட்பதும்
கற்பதும் கேட்பதும் எல்லாம்நின் அற்புதக் கஞ்சமலர்ப்
பொற்பதம் காணும் பொருட்டென எண்ணுவர் புண்ணியரே
சொற்பத மாய்அவைக் கப்புற மாய்நின்ற தூய்ச்சுடரே
மற்பதம் சேரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
92
நின்னால் எனக்குள
நின்னால் எனக்குள எல்லா நலனும் நினைஅடைந்த
என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே
முன்னால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே
ம்ன்னான் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
93
நன்றே சிவநெறி
நன்றே சிவநெறி நாடுமெய்த் தொண்டர்க்கு நன்மைசெய்து
நின்றேநின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈ
தென்றே முடிகுவ தின்றே முடியில் இனிதுகண்டாய்
மன்றேர் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
94
அத்தனை ஒற்றிக்
அத்தனை ஒற்றிக் கிறைவனை அம்பலத் தாடுகின்ற
முத்தனைச் சேர்ந்தஒண் முத்தே மதிய முகவமுதே
இத்தனை என்றள வேலாத குற்றம் இழைத்திடும்இம்
மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை மாணிக்கமே.
95
கூறாத வாழ்க்கைச்
கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும்என்
தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திருச்செவியில்
ஏறாத வண்ணம்என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின்
மாறா தமர்ந்த மயிலே வடிவுடை மாணிக்கமே.
96
ஓயா இடர்கொண்
ஓயா இடர்கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல்போல்
ஈயா விடினும்ஓர் எள்ளள வேனும் இரங்குகண்டாய்
சாயா அருள்தரும் தாயே எழில்ஒற்றித் தற்பரையே
மாயா நலம்அருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
97
பெரும்பேதை யேன்சிறு
பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையில்
துரும்பே எனஅலை கின்றேன் புணைநின் துணைப்பதமே
கரும்பே கருணைக் கடலே அருண்முக் கனிநறவே
வரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
98
காதர வால்உட்
காதர வால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள்
ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே
சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில்
மாதர சேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
99
பொன்னுடை யார்அன்றிப்
பொன்னுடை யார்அன்றிப் போற்றுநற் கல்விப் பொருளுடையார்
என்னுடை யார்என ஏசுகின் றார்இஃ தென்னைஅன்னே
மின்னுடை யாய்மின்னில் துன்னிடை யாய்ஒற்றி மேவுமுக்கண்
மன்னுடை யாய்என் னுடையாய் வடிவுடை மாணிக்கமே.
100
பொய்விட்டி டாதவன்
பொய்விட்டி டாதவன் நெஞ்சகத் தேனைப் புலம்பும்வண்ணம்
கைவிட்டி டாதின்னும் காப்பாய் அதுநின் கடன்கரும்பே
மெய்விட்டி டாருள் விளைஇன்ப மேஒற்றி வித்தகமே
மைவிட்டி டாவிழி மானே வடிவுடை மாணிக்கமே.
Back to Top
101
நேயானு கூல
நேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன்
தாயாகில் யான்உன் தனையனும் ஆகில்என் தன்உளத்தில்
ஓயா துறுந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ்
வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே.
102
வாழிநின் சேவடி
வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள்
வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர்
வாழிஎன் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும்நீ
வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
திருஒற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை - இராமலிங்க அடிகள்
கட்டளைக் கலித்துறை