சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  

திரு அருணகிரிநாதரின் - சேவல் விருத்தம்

+ Show Meaning - Hide Meaning
0 அருணகிரிநாதர் சேவல் விருத்தம்  
கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல்
கொண்டேழ் இசைமருளக்
குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி
குமரன் இதம் பெறுபொன்
செந்தா மரைகடம் நந்தா வனமுள
செந்தூர் எங்குமுளான்
திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு
சேவல் தனைப்பாட
வந்தே சமர்பொரு மிண்டாகிய
கய மாமுகனைக் கோறி
வன் கோடொன்றை ஒடித்துப் பாரதம்
மாமேருவில் எழுதிப்
பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடு
பணி சிவலிங்கமதைப்
பார்மிசை வைத்த விநாயகன் முக்கட்
பரமன் துணையாமே.
கொந்தார் குழல் பூங்கொத்துக்கள் சூடிய கூந்தலில்
வண்டு ஓடும் - வட்டமிடுகின்ற வண்டுகளின்
இயல் கொண்டே - ரீங்காரத்தையே சுருதியாகக்கொண்டு
ஏழ் இசை மருள - இசைக்கு அடிப்படையான ஏழு ஸ்வரங்களும் அதன் இனிமையில் மயங்கும்படியாக
குதலை மொழிந்து அருள் - மழலை போல் பேசுகின்ற
கவுரி - வெண்மை நிறம் கொண்ட பார்வதி
சுதந்தரி - இன்னொருவருக்குக் கட்டுப்படாதவள்
குமாரன் - பெற்ற மகன்
இதம் பெறு - மனம்மகிழ்கின்ற
பொன் செந்தாமரை கடம் - பொன்போன்ற அழகும் மேன்மையும் பொருந்திய சிவந்த தாமரை மலர்ந்துள்ள குளங்களையும்
நந்தாவனம் உள - மலர்ச்சோலைகளையும் உடைய
செந்தூர் - திருச்செந்தூர் (முதலிய)
எங்கும் உளான் - தலங்களில் உறைபவன்
திலக மயிலில் - பறவைகளிலே முதன்மையான மயிலை வாகனமாக உடைய
குமரன் - என்றும் இளையோனாகிற முருகனின்
வரிசை பெறு - கொடியில் இடம்பெற்ற பெருமையை உடைய
சேவல் தனைப்பாட - அந்தச்சேவலின் புகழைப் பாடுவதற்கு
வந்தே சமர் பொரு - எதிர்த்துப் போராட வந்த
மிண்டாகிய கய மா முக னைக் கோறி - கஜ முகாசுரனைக் வஞ்சகனான கஜ முக அசுரனைக்கொன்று
வன் கோடு ஒன்றை ஒடித்து - வலிமையான இரண்டு தந்தங்களில் ஒன்றை ஒடித்து (எழுத்தாணியாகக்கொண்டு)
பாரதம் - மகாபாரதம் ( வியாசர் சொல்ல)
மாமேருவில் எழுதி - மஹாமேருமலையே ஏடாக அதில் எழுதி
பைந்தார் கொடு - புதிய மலர்களால் தொடுத்தமாலைகள் இட்டு
ராவணன் - சிவபக்தனான ராவணாசுரன்
பணி சிவ லிங்கமதை - வணங்குகின்ற ( கைலாசத்திலிருந்து பெற்ற) ஆத்ம லிங்கத்தை
பார் மிசை - பூமியின் மீது
வைத்த - (திரும்ப எடுக்க முடியாத படி) வைத்து விட்ட
விநாயகன் - தனக்குமேல் ஒரு தலைவன் இல்லாத
முக்கண் - மூன்று கண் உடைய
பரமன் - கணேச பகவான்
துணையாமே - எனக்குத் துணை புரியட்டும்.
Back to Top
1 அருணகிரிநாதர் சேவல் விருத்தம்  
உலகில் அநு தினமும் வரும் அடியவர்கள் இடரகல
உரிய பரகதிதெ ரியவே
உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள் மிடி கெட அருளியே
கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடின முற வரில் அவைகளைக்
கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்து
சிறகைக்கொட்டி நின்றா டுமாம்
மலைகள் நெறுநெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்
மடியஅயில் கடவு முருகன்
மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதை
குறவரிசையின மகள் அவளுடன்
சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்
சிறுவன்அயன் வெருவ விரகிற்
சிரமிசையில் வெகுசினமொடு அடியுதவும் அறுமுகவன்
சேவல் திருத்துவசமே.
உலகில் அநுதினமும்
பதவுரை
உலகில் - இப்பூவுலகில்
அநுதினமும் - நித்தம் நித்தம்
வரும் - (அடியவர்களுக்கு) வரக்கூடிய
இடர் - துன்பம்
அகல - விலகிப்போகும்படி
உரிய பர கதி - இம்மானுடப்பிறவியிலே அடையக்கூடியதான மோட்ச நிலை
தெரியவே - பெறும்படி
உரக மணி என உழலும் - பாம்பின் தலை அசையும் போது அதன் தலையிலுள்ள இரத்தினம் இங்கும் அங்கும் அலைவது போல் அலையும்
இருவினையும் - பாபம் புண்ணியமாகிற இரண்டும்
முறைபடவும் - விட்டுப் போகவும்
இருள்கள் - அஞ்ஞானமும்
மிடி கெட - வறுமை (பொருள், குணம் இரண்டினுடைய குறை) இல்லாமல் போகும்படி
அருளியே - அருள் புரிந்து
கலகம் இடும் அலகைகள் குறளை - மன நிம்மதியைக்குலைக்கும் பலவித பேய்கள் குட்டிச்சாத்தான்
மிகு பணிகள் - விஷப்பாம்புகள்
வலிமையோடு - மிகுந்த பலத்தோடு
கடினம் உற வரின் - (பக்தர்களைத்) தாக்க வரும் போது
அவைகளைக் கண்ணைப்பிடுங்கி - அவற்றின் கண்களை அகழ்ந்து
உடல்தன்னைப்பிளந்து - உடலைத் துண்டாக்கி
சிறகைக் கொட்டி நின்று ஆடுமாம் - வெற்றிக்களிப்புடன் சிறை விரித்து ஆடும்.
மலைகள் நெறு நெறு நெறு என - க்ரவுஞ்சம், சக்ரவாளம் முதலிய மலைகள் நொறுங்கிப் போகும்படியும்
அலைகள் - ஏழு கடல்களும் வற்றிப்போகும்படியும்
அசுரர் மடிய - சூரன் முதலிய அசுரர்கள் இறந்துவிடவும்
அயில் கடவு முருகன் - வேலாயுதத்தை ஏவிவிட்ட முருகன்
மகுட வட கிரியனைய மலைமுலை வநிதை - சிகரத்தை உடைய மேருமலை போன்ற தனபாரங்களைக் கொண்ட பெண்
குறவர் இசை இன மகள் அவளுடன் - வேடுவர் என்ற பெயர் பெற்ற இனத்தைச் சேர்ந்த வள்ளியையும்
சிலை குலிசன் மகள் - கோபத்தோடு தாக்கும் வச்சிராயுதமுடைய இந்திரன் மகள் தேவயானியையும்
மருவு புயன் - அணத்த தோள்களை உடைய
இலகு சரவணச்சிறுவன் - புகழோடு விளங்கும் சரவணப் பொய்கையில் பிறந்தவன்
அயன் - பிரமன்
வெருவ - பயந்து போகும்படி
விரகில் - திறமையாக
சிரமிசையில் அடி உதவும் - தலையில் குட்டு வைத்த
அறுமுகவன் - ஆறுமுகனான முருகனுடைய
சேவல் திரு துவசமே - சேவல் இலங்குகின்ற உயர்ந்த கொடியே
2 அருணகிரிநாதர் சேவல் விருத்தம்  
எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரம
ராட்சதர்கள் மிண்டுகள் செயும்
ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலை
ஈனப் பசாசு களையும்
கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்
கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர்க்
கரத்தடர்த்துக் கொத்துமாம்
தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர் கிடுகிடென நடனம்
தண்டைகள் சிலம்புகள் கலின்கலி எனெனச் சிறிய
சரணஅழகொடு புரியும்வேள்
திரிபுரம தெரியநகை புரியும்இறை யவன்மறைகள்
தெரியும்அரன் உதவு குமரன்
திமிரதின கரமுருக சரவண பவன்குகன்
சேவல் திருத்துவசமே.
எரி அனைய - நெருப்பைப்போன்ற
வியன் - பரந்த (பரட்டையான)
நவிரம் உ(ள்)ள - தலைமுடி உடைய
கழுது - பேய்
பல பிரம ராட்சதர்கள் - ப்ராம்மணர்களாயிருந்து பல தவறுகள் செய்தவர் இந்தப் பெயருடைய பேயாய்த் திரிவர் அவர்களும்
மிண்டுகள் செ(ய்)யும் - பல குறும்புகள் செய்து பயமுறுத்தும்
ஏவல் பசாசு - (பக்தர்) மீது ஏவி விடப்பட்ட
நனி பேயில் பசாசு - தனித்தன்மையுள்ள பிற பிசாசு
கொலை ஈனப்பசாசு - கொலைகள் புரியும் துஷ்ட பிசாசுகளையும்
கரி பெரிய மலை - கரிய நிறமுடைய பெரிய மலை போலவும்
பணை எனவும் - மூங்கில் போலவும், (பருமையில் மலை, உயரத்தில் மூங்கில்)
முனையின் - முயன்று
உயர் ககனம் உற நிமிரும் - மேலுள்ள ஆகாசத்தைத்தொடும் படி வளர்ந்து நிற்கும்
வெங்கண் - கொடிய பார்வையுடைய
கடிகளையும் - பூதங்களையும்
மடமடென மருகி அலறிட - (சேவலின் சிறகுகள்) மட மட என்ற சப்தத்துடன் மேற்சொன்ன பேய் பிசாசுகள் பயந்து அலறிக்கொண்டு ஓடும்படி
உகிர்க்கரத்து - நகங்களையுடைய தன் கரத்தால் (காலால்)
அடர்ந்து - தாக்கி
கொத்துமாம் - அலகாலும் கொத்தும்
தரணி பல இடம் என - பல மலைப்ரதேசங்களில் வசித்து வந்த
வன மத கரிகள் - மதம் பிடித்த காட்டு யானைகளைப் போலவும்
தறிகள் - தூண்கள் போலவும்
பணி சமணர் - வாழ்க்கை நடத்திவந்த சமணர்களின் கூட்டம்
கிடு கிடு என - நடுங்கும் படியாக
தண்டைகள் சிலம்புகள் - பாத அணிகள்
சிறிய சரண அழகொடு - அந்தச்சின்னஞ்சிறிய பாதங்களை அழகு செய்ய
நடனம் புரி வேள் - திருநடனம் செய்கின்ற மன்மதனைப்போல் அழகுள்ள ஞானசம்பந்தனான முருகன்
திரிபுரம் எரிய நகை புரியும் - சிரித்து எரிகொளுத்தும் என்றது போல் தன் புன்சிரிப்பாலேயே மூன்று புரங்களையும் (மதில்களை) கொளுத்திப்போட்ட
இறையவன் உதவு குமரன் - சிவ பெருமான் பெற்ற மகன்
திமிர தினகர முருக - அஞ்ஞான இருளுக்குச் சூர்யனைப் போன்ற அழகன்
சரவண பவன் - நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன்
குகன் - அடியவர் இதய குகையில் வசிப்பவன் (ஏந்தி இருக்கும்)
சேவல் திரு துவசமே - சேவல் திகழும் திருக்கொடியே
மேற்சொன்ன பேய் பிசாசு முதலியவை ஆபிசாரம் எனப்படுகின்ற முறையில் எதிரிகளால் ஏவி விடப்படுபவை. இந்தக் காலத்தில் அவை இருப்பதாகத் தெரியவில்லை. பொதுவாக எதிரித்தொல்லை என்று கொள்ளலாம்.

3 அருணகிரிநாதர் சேவல் விருத்தம்  
கரிமுரட்டடி வலைக் கயிறெடுத் தெயிறு பற்
களை யிறுக்கியும் முறைத்துக்
கலகமிட்டி யமன் முற் கரமுறத் துடருமக்
காலத்தில் வேலு மயிலும்
குருபரக் குகனும் அப் பொழுதில் நட்புடன் வரக்
குரலொலித்து அடியர் இடரைக்
குலைத்தலறு மூக்கிற் சினப் பேய்களைக் கொத்தி
வட்டத்தில் முட்ட வருமாம்
அரியகொற்கையனுடற் கருகும்வெப் பகையையுற்
பனமுறைத் ததமிகவுமே
அமணரைக் கழுவில் வைத்தவருமெய்ப் பொடிதரித்
தவனி மெய்த்திட அருளதார்
சிரபுரத் தவதரித்த அவமுதத் தினமணிச்
சிவிகை பெற்றினிய தமிழைச்
சிவனயப் புறவிரித் துரை செய்விற் பனனிகற்
சேவல் திருத்துவசமே.
கரி முரட்டு அடி வலை - கருமை நிறத்துடன், உறுதியான பாசவலையான
கயிறு எடுத்து - கயிற்றைக் கொண்டு
எயிறு பல்களை இறுக்கி - தெற்றுப்பற்களைக் கடித்துக்கொண்டு
முறைத்து கலகம் இட்டு - கோபப்பார்வையோடு, மனதைக்கலங்கச் செய்து கொண்டு
இயமன் முன் கரம் உறத் துடரும் - கூற்றுவனாகிய எமன் கையை(வேலை வீச) முன் வீசிக்கொண்டு (என் உயிரைப்பறிக்க) துரத்தும்
அக்காலத்தில் - அந்த இக்கட்டான சமயத்தில்
வேலும் மயிலும் - ஞான சக்தியான வேலாயுதமும், ஓம்கார ரூபமான மயில் வாகனத்தில்
குரு பரக்குகனும் - மனக்குகையில் வீற்றிருக்கும் யாவருக்கும் மேலான குருவாம் குமரன்
அப்போது நட்புடன் வர - அவ்வேளையில் அன்பு (கருணையு)டன் வரவும்
குரல் ஒலித்து - (கூடவே வரும் சேவலும்) ஓங்காரமாகிய தன் குரல் எழுப்பி
அடியர் இடரைக் குலைத்து - அந்த முருகன் அடியாருடைய பயத்தையும் துன்பத்தையும் சிதறிஓடச்செய
அரிய கொற்கையன் - அருமையுடைய கொற்கை என்னும் துறைமுகத்தையுடைய பாண்டிய தேசத்து மன்னன் ( கூன் பாண்டியன்)
உடல் கருக - தேகம் கருகிப்போகும் போல உண்டான
வெப்பகையை - சுரநோயை
உற்பனம் உரைத்து - அந்நோய் வந்ததன் காரணத்தை அவனுக்குக்கூறி (மதுரைக்கு அரசி மங்கையர்க்கரியார், மந்திரி குலச்சிறையார் அழைப்பின் பேரில் வந்து ஞான சம்பந்தனார் தங்கியிருந்த மடத்துக்கு ச்சமணர்கள் தீ வைக்கவும் சம்பந்தர்செய்யனே திரு ஆலவாய் மேவிய/ ஐயனே அஞ்சல் என்று அருள் செய் எனைப்/ பொய் ஆர் அமணர் கொளுவும் சுடர்/ பையவே சென்று பாண்டியன்கு ஆகவேஎன்று தொடங்கும் பதிகம் பாடித்தான் அத்தீயைப் பாண்டியனிடம் திருப்பி விட்டார் என்பதை)
அதம் மிகவும் ஏவும் அமணரை - இம்மாதிரிக் கொலைச் செயல்களைச் செய்து வந்த சமணர்களை
கழுவில் வைத்து - பாண்டியன் நோய் தீர்க்கிற போட்டி மற்றும் அனல் புனல் வாதங்களில் அவர்களை வென்று அவர் தாமே கழுவில் ஏறுமாறு செய்து
மெய்ப்பொடி தரித்தவர் - சிவமே மெய்ப்பொருள் என்று உணர்த்தும் திருநீறு பூசுபவர்கள்
அவனி மெய்த்திட - பூமியில் மிகுதியாகும்படி, (சைவ மதத்தைப் பெரும்பாலோர் தழுவச்செய்து)
அருள் அது ஆர் - அருள் மிகுந்த
சிவ புரத்து அவதரித்து - சிவபுரம் என்றும் அழைக்கப்படும் சீர்காழியில் பிறந்து
அமுதத்தின மணி - அமுதம்போல் குளிர்ந்து இதம் தருவதாகவும்
சிவிகை பெற்று - சூர்யனைப்போல் ஒளியுடையதாயும் உள்ள முத்துப்பல்லக்கு சிவபெருமானால் தரப்பெற்று
இனிய தமிழை - இனிமையான தமிழ்ப்பாசுரங்களால்
சிவன் நயப்புற விரித்து உரை செய் - சிவபெருமான் மிக விரும்பும்படி சைவத்தை விளக்கிக்கூறிய
விற்பனன் - அறிவு மிகுந்தவரான (ஞான பண்டித ஸ்வாமி) முருகனுடைய
இகல் சேவல் திருத்துவசமே - வீர மிகுந்த சேவல் விளங்குகின்ற திருக்கொடியாம்
4 அருணகிரிநாதர் சேவல் விருத்தம்  
அச்சப் படக்குரல் முழக்கிப் பகட்டியல்
அறிக்கொட்டமிட்டம ரிடும்
அற்பக் குறப்பலிகள் வெட்டுக்கள் பட்டுக்கடி
அறுக் குழைகளைக் கொத் தியே
பிச்சுச் சினத்து தறி எட்டுத்திசைப் பலிகள்
இட்டுக் கொதித்து விறலே
பெற்றுச் சுடர்ச் சிறகு தட்டிக் குதித்தியல்
பெறக் கொக்கரித்து வருமாம்
பொய்ச் சித்திரப்பலவும் உட்கத் திரைச்சலதி
பொற்றைக் கறுத்தயில்விடும்
புத்தி ப்ரியத்தன் வெகு வித்தைக் குணக்கடல்
புகழ்ச் செட்டி சுப்ரமணியன்
செச்சைப் புயத்தன் நவரத்ன க்ரிடத்தன் மொழி
தித்திக்கு முத் தமிழினைத்
தெரியவரு பொதிகைமலை முநிவர்க் குரைத்தவன்
சேவல் திருத்துவசமே.
அச்சப்பட குரல் முழக்கி - பயம் ஏற்படும்படியும், சப்தமிட்டுக்கொண்டும்,
பகட்டி - துரத்திக்கொண்டு,
அலறி கொட்டம் இட்டு - கூக்குரல் இட்டு, ஆர்ப்பாட்டம் செய்து,
அமர் இடும் - போர் செய்யும்
அற்பக்குறப்பலிகள் - (அடியார் மீது ஏவப்படும்) அற்பமான சிறு தேவதைகளுக்குப் படைத்த உணவு வரிசைகளில் (சில சிறு துர்தேவதைகளை மந்திரம், பலி முதலியவற்றால் வசப்படுத்திக்கொண்டு ஏவி விடும் மந்திரவாதிகள் உண்டு)
வெட்டுக்கள் பட்டு - பிளவுபட்டு
கடி அறு குழைகளை - அவைகள் கடித்துப்போட்டுருக்கும் இலை தழைகளை
கொத்தியே - தன் அலகால் கொத்தி
பிச்சு சினத்து உதறி - பிய்த்து, கோபத்தோடு உதறி
வீசி எட்டுத்திசைப்பலிகள் இட்டு - சுற்றிலும் சிதறவிட்டுத் தானே எட்டுத் திசைகளிலும் பலியை இட்டதுபோல, (சில பூத கணங்களுக்கு பலியை எல்லா திசைகளிலும் சுற்றி வீசுவது வழக்கம்),
கொதித்து விறலே பெற்று - ஆவேசத்துடன் இன்னும் வலிமை அடைந்து
இயல் பெற - வீரம் விளங்கும்படி
கொக்கரித்து வருமாம் - கூவிக்கொண்டு வருமாம்
அந்தச்சேவல் எங்குளது என்றால்
பொய்ச் சித்திரப்பலவும் - பொய்யும் கற்பனையும் நிறைந்த (வேதத்துக்குப் புறம்பான) சமயங்கள்,
உட்க - தோற்று வெட்கிப்போகும்படியும்
அந்தச் சின்ன துர்தேவதைகள் சேவலுக்கு முன் நிற்க முடியாததுபோல ஞான சம்பந்தமாக வந்த முருகன் முன் பிற புறச்சமயங்கள் சின்னாபின்னமாயின என்பது உள் கருத்து.
திரைச்சலதி பொற்றை - அலைவீசுகின்ற கடல் மீதும்
பொற்றை - (சிறிய மலை) க்ரௌஞ்ச கிரி மீதும்
கறுத்து அயில் விடும் - கோபித்து வேலாயுதத்தைச்செலுத்தியவன்
புத்திப்ரியத்தன் - மிகுந்த அறிவும் அன்பும்( கருணையும்) உடையவன் என்றும்
புகழ் செட்டி சுப்ரமண்யன் - புகழ் பெற்ற வளை வியாபாரி வேடத்தில் வள்ளிமலை சென்றதாலும், மதுரையில் தளபதி செட்டியாருக்கு ருத்ர சன்மா என்ற ஊமை மகனாய்ப்பிறந்து இறையனார் அகப்பொருளுக்கு நக்கீரர் உறையே சிறந்தது என்பதை தன் உடல் வெளிப்பாடுகளால் உணர்த்தியதாலும், பக்தியை வாங்கிக்கொண்டு முக்தி அளிப்பதான வாணிபம் செய்வதாலும் செட்டியாகிய சுப்ரமணியன்
செச்சைப்புயத்தன் - வெட்சிமாலை அணிந்த தோளன்
நவரத்ன க்ரிடத்தன் - நவமணிகள் இழைத்த மகுடம் தரித்தவன்
மொழி தித்திக்கும் - சொல்லச் சொல்ல இனிக்கும்
முத்தமிழினை - இயல் இசை நாடகம் என மூன்றான தமிழை,
தெரிய வரு - கற்க விரும்பி வந்த
பொதிய முனிவர்க்கு - அகத்திய முனிவருக்கு,
உரைத்தவன் - அத்தமிழை உபதேசித்தவனான முருகனின்,
சேவல் திருத்துவசமே - திருக்கொடியில் விளங்கும் சேவலாம்.
Back to Top
5 அருணகிரிநாதர் சேவல் விருத்தம்  
தானா யிடும்பு செயு மோகினி இடாகினி
தரித்த வேதாள பூதம்
சருவ சூனியமும் அங்கிரியினா லுதறித்
தடிந்து சந்தோடமுறவே
கோனாகி மகவானும் வானாள வானாடர்
குலவு சிறை மீளஅட்ட
குலகிரிகள் அசுரர்கிளை பொடியாக வெஞ்சிறைகள்
கொட்டி யெட்டிக் கூவுமாம்
மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
மாதேவன் நற்குருபரன்
வானீரம் அவனியழல் காலாய் நவக்கிரகம்
வாழ்நாள் அனைத்தும் அவனாம்
சேனாபதித் தலைவன் வேதா வினைச்சிறைசெய்
தேவாதி கட்கரசுகள்
ஏனான மைக்கடலின் மீனானவற்கு இனியன்
சேவல் திருத்துவசமே.
தானாய் - பிறர் ஏவுதல் இல்லாமலே
இடும்பு செ(ய்)யும் மோகினி - துன்பம் தரும் மோஹினிப்பிசாசு
இடாகினி - (இ)டாக்கினி என்கிற பெண்பேய்களுடன்
தரித்த வேதாளம், பூதம் - வேதாளம், பூதம் போன்றவற்றையும்
சருவ சூனியமும் - எல்லா சூனியம் போன்ற ஏவல்களையும்
அங்கிரியினால் உதறி - தன் பாதத்தில் பிடித்து உதறி
தடிந்து - தண்டித்து
சந்தோடம் உறவே - மகிழ்ச்சி அடையும் படி
கோனாகி மகவானும் நாடாள - (மீண்டும்) அரசனாகி இந்திரனும் தேவலோகத்தை அரசாளவும்
வான் நாடர் குலவு சிறை மீள - தேவர்கள் (சூரனால்) அடைக்கப்பட்ட சிறையிலிருந்து விடுபடவும்
அட்ட குல கிரிகள் - (அண்டத்தைச்சுற்றியுள்ள) எட்டு (திசை) மலைகளும்
அசுரர் கிளை - சூரனின் குலத்தைச்சேர்ந்த அரக்கர்களும்
பொடியாக - சிதறித்தூள் தூளாகும்படியும்
வெஞ்சிறைகள் கொட்டி எட்டிக் கூவுமாம் - தன் வலிமை மிகுந்த சிறகுகளை அடித்துக்கொண்டு பெருங்குரலிட்டுக்கூவுமாம்
மா நாகம் - பெரிய (வாசுகி எனிகிற) பாம்பும்
அக்கு - அக்ஷம் என்கிற உருத்தராட்சம் (எலும்பு என்றும் கூறுவர்)
அறுகு மான் உடையன் - அருகம்புல், மானையும் உடையவன்(அணிந்தவன்)
நிர்த்தமிடும் - திருநடம் புரியும்
மாதேவன் நல் குருபரன் - மகாதேவனின் நல்ல மேன்மையான குருவானவன்
வான் நீரம் அவனி அழல் கால் ஆய் - ஆகாயம், நீர், நிலம், தீ, காற்று என ஐம்பூதங்களும் ஆகி
நவ கிரகம் - ஒன்பது கோள்களும்
வாழ்நாள் அனைத்தும் அவனாம் - உயிர்கள் (காலம் என்றும் கொள்ளலாம்) அனைத்தும் தானே ஆனவன்
சேனாபதித் தலைவன் - தேவர்கள் சேனைக்குத்தலைவன், எல்லா சேனாபதிகளிலும் உயர்ந்தவன்
வேதாவினைச்சிறை செய் - பிரமனைச்சிறையில் அடைத்தவன்
தேவாதிகட்கு அரசு - தேவர் முதலியோருக்கு (யக்ஷ, சாரண, கந்தர்வ, கின்னர, கிம்புருடர்) சக்ரவர்த்தி
கள் தேன் ஆன மைக்கடலில் மீன் ஆனவன்கு இனியன் - இருண்ட கடலில் (பெரிய) மீனாக உருவெடுத்த நந்திதேவருக்கு கள்ளையும் தேனையும் போல் இனிமையானவரான முருகனின் (சிவபெருமான் செம்படவ வேடத்தில் வந்து, அக்குலத்தில் பிறந்திருந்த உமையன்னையை யாருக்கும் அகப்படாத பெரிய சுறா மீனாய் அவதரித்த நந்தியைப்பிடித்து போட்டியில் வென்று மணந்த வரலாறு குறிக்கப்பட்டது)
கள் தேனான மைக்கடலில் மீன் ஆனவன்கு இனியான் என்பது மீனாக மத்ஸ்ய அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கு இனிய மருமகன் என்று கொள்வதும் பொருத்தமே.
சேவல் திருத்துவசமே - சேவல் விளங்குகின்ற கொடியே
6 அருணகிரிநாதர் சேவல் விருத்தம்  
பங்கமாகிய விட புயங்கமா படமது
பறித்துச் சிவத் தருந்திப்
பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள்புரி
பச்சைக் கலாப மயிலைத்
துங்கமாயன் புற்றுவன் புற் றடர்ந்துவரு
துடரும் பிரேத பூதத்
தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
துண்டப் படக் கொத்துமாம்
மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி
வஞ்சிநான் முகிவராகி
மலையரையன் உதவமலை திருமுலையில் ஒழுகுபால்
மகிழ அமுதுண்ட பாலன்
செங்கணன் மதலையிடம் இங்குளான் என்னும்
நரசிங்கமாய் இரணியனுடல்
சிந்த உகி ரிற்கொடு பிளந்தமால் மருமகன்
சேவல் திருத்துவசமே.
பங்கமாகிய விட - கொடுமைகளைச்செய்யும் விஷத்தை உடைய
புயங்க மா படம் அது - (பல தலை) பாம்பின் பெரிய படத்தை
பறித்துச்சிவத்து அருந்தி - கொத்தி சினத்துடன் புசித்து
பகிரண்ட முழுதும் பறந்து - வெளி அண்டங்களில் எங்கும் பறந்து
நிர்த்தங்கள் புரி பச்சைக்கலாப மயிலை - (அம்மகிழ்ச்சியில்) நடனம் புரியும் பசிய நிறத் தோகையுடைய மயிலிடம்
அன்புற்று - மிகுந்த ப்ரியம் கொண்டு
வன்புற்று அடர்ந்து வரு - மிகுந்த வலிமையுடன் நெருங்கியும்
துடரும் பிரேத பூதத் தொகுதிகள் - பின் தொடர்ந்து வரும் பிசாசு, பேய்க்கூட்டங்களையும்,
பிசாசுகள் நிசாசரர் அடங்கலும் - மற்றுமுள்ள பிசாசுகள் அரக்கர் கூட்டங்கள் அனைத்தையும்
துண்டப்படக் கொத்துமாம் - துண்டு துண்டாகும்படித்தன் அலகால் தாக்கி விடும்.
மங்கை யாமளை - பெண்களில் சிறந்தவள், கரும் பச்சை நிறத்தவள்,
குமரி - என்றும் இளமையாக இருப்பவள்,
கங்கை - கங்கை ரூபமாகவும் உள்ளவள், (கங்கை போல் புனிதமானவள், கங்கை, உமை இருவரும் இமாசலத்தின் புதல்விகள்),
மாலினி - கழுத்தில் மாலை அணிந்தவள்
கவுரி - வெண்ணிற ரூபமும் கொண்டவள்
வஞ்சி - கொடி போன்று மெலிந்தவள்
நான்முகி - நான்முக பிரமனின் மனைவியான வாணியாகவும் திகழ்பவள்
வராகி - பன்றி முகமுடைய அம்பிகையின் படைத்தலைவி
மலை அரையன் - மலைகளின் அரசன் என்று போற்றப்படும் இமயமலை
உதவு அமலை - பெற்றவளாகிய குற்றமற்றவளாகிய பார்வதியின்
திருமுலையில் ஒழுகு பால் - திருத்தனங்கள் சுரந்த ஞானமாகிய பாலை
மகிழ அமுது உண்ட பாலன் - அவள் மனம் மகிழும்படி அன்று ஞான சம்பந்தனாக வந்து அருந்திய குழந்தை
செங்கணன் - சிவந்த கண்களை உடைய திருமால் (ஏற்கெனவே சிவந்த அவன் கண்கள் கோபத்தில் இன்னும் சிவந்த விட),
மதலையிடம் - தூணில்
இங்குளான் என்னும் - இங்கே இருக்கிறான் என்று (ப்ரஹ்லாதன் தன் தந்தை இரண்ய கசிபுவிடம்) காட்டிய
நரசிங்கமாய் - சிங்கத்தலையும் மனித உடலுமாய்த் தோன்றி
இரணியன் உடல் சிந்த - இரண்யன் உடல் உயிரற்று விழும்படி
உகிரில் கொடு பிளந்த - தன் கை நகங்களால் கீறிப் பிளந்த
மால் மருகன் - திருமாலின் மருமகனாகிய முருகனின்
சேவல் திருத்துவசமே - சேவல் விளங்குகின்ற திருக்கொடியே.
7 அருணகிரிநாதர் சேவல் விருத்தம்  
வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
வெங்கட் குறும்புகள் தரும்
விடு பேய்கள் ஏகழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
வெம்பேய் களைத்துரத்திப்
பேறான .. சரவண பவா .. என்னுமந்திரம்
பேசி யுச்சாடனத்தாற்
பிடர் பிடித் துக் கொத்தி நகநுதியி னாலுறப்
பிய்ச்சுக் களித்தாடுமாம்
மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
மகோதரம் பெருவியாதி
வாத பித்தஞ் சிலேற் பனங்குட்ட முதலான
வல்ல பிணிகளைமாற்றியே
சீறாத ஓராறு திருமுக மலர்ந்தடியர்
சித்தத் திருக்கும் முருகன்
சிலைகள் உருவிடஅயிலை விடுகுமர குருபரன்
சேவல் திருத்துவசமே.
வீறான - வலிமை மிகுந்த
காரி கதி - பயிரவர் செல்லும் வழியில்
முன் ஓடி, பின் ஓடி - அவருக்கு முன்னும் பின்னுமாக ஓடி,
வெங்கண் - சிவந்த வெப்பமான கண்களை உடைய
குறும்புகள் தரும் - பல சேஷ்டைகள் செய்யும்
விடுபேய்களே - தனித் தனிப் பேய்களையும்
கழு - கழுகுகளையும்
வன் கொலை சாவு கொள்ளிவாய் வெம்பேய்களைத் துரத்தி - கொடுமையான கொலைக்கும் வேறு வித சாவுக்குக் காரணமாகும் கொள்ளி வாய்ப் பிசாசுகளையும் ஓடச் செய்து
பேறான சரவண பவா என்னுமந்திரம் - பெறுவதற்கு அரிதான பாக்கியமாகிய முருகனுடைய மேலான மந்திரமாகியசரவண பவாஎன்ற நாமத்தை
பேசி உச்சாடனத்தால் - உபதேசம் பெற்றுக் கூறி, பல (ஆயிரம், லட்சம் என்று) முறை உருவேற்றி,
பிடர் பிடித்துக்கொத்தி - அப்பேய்களை ஓட ஓட விரட்டிப் பிடரியைக் கொத்தியும்,
நக நுதியினால் - கூரிய தன்கால் நகத்தின் நுனி கொண்டு
உறப்பிய்ச்சு-(அவை திரும்பி வந்து விடாமல்) நன்றாகப் பிய்த்துத்துண்டாக்கி விட்டு -
களித்து ஆடுமாம் - அந்த (வெற்றி) மகிழ்ச்சியில் கூத்தாடும்
சென்ற 6வது விருத்த விளக்கத்தில் அடியேன் மயில் என்பது மந்திரம், அதைச்சொல்லச்சொல்ல ஆன்மாவில் ஒட்டியுள்ள இந்திரிய வாசனைகளும், பழ வினைத்தொடர்களும் அற்றுப்போகும் என்றது தான் இங்கு கூறப்படுகிறது.
மாறாத முயலகன் - தீராத வலிப்பு
வயிற்று வலி - பல வேதனை தரும் வயிற்று நோய்கள்
குன்மம் - சூலை
மகோதரம் - பெருவயிறு எனும் வயிறு உப்புதல்
பெருவியாதி - க்ஷயம் போன்ற தீர்வில்லாத நோய்கள்
வாத பித்த சிலேற்பனம் - வாதம் பித்தம் சிலேஷ்மம் இவை சமநிலையில் இல்லாததால் உண்டாகும் பல துன்பங்கள்
குட்டம் முதலான - குஷ்டம் போன்ற பல
வல்ல பிணிகளை மாற்றியே-ி - துன்பந்தரும் தீராத நோய்களைத்தீர்த்து குணப்படுத்தி
(வியாதிகள் முன்வினை காரணமாக வருகின்றன, நாம ஜபம் மற்றும் உபாசனைகளால் அதன் தீவிரம் குறையக்குறைய நோயும் தீரும். உடலின் நோயே உபாசனைக்கு இடையூறு. அதைப்பொருள் படுத்தாமல் நாமங்கள் சொல்லச் சொல்ல நோயின் கடுமை குறையும். உபாசனை கூடும்)
சீறாத - (அடியார்களிடத்து) கோபம் அறியாத
ஓர் ஆறு திரு முகம் மலர்ந்து - மலர்ந்து விளங்குகின்ற ஆறு திருமுகங்களோடு,
அடியர் சித்தத்து இருக்கும் முருகன் - பக்தர்களுடைய மனத்தில், சிந்தனையில் குடி கொண்டிருக்கும் முருகப்பெருமான்,
சிலைகள் உருவிட - க்ரௌஞ்ச கிரியையும், திசைகளைச்சுற்றியுள்ள சக்ரவாள கிரியையும் துளைத்து ஊடுருவிச் செல்லும்படி
அயிலை விடு - வேலாயுதத்தைச் செலுத்திய
குமர குருபரன் - குருவுக்கெல்லாம் மேலான குருவாம் குமரக்கடவுள் தரித்திருக்கும்
சேவல் திருத்துவசமே - அக்குக்குடக்கொடியே
8 அருணகிரிநாதர் சேவல் விருத்தம்  
வந்தார்ப் பரிக்குமம் மிண்டுவகை தண்டதரன்
வலிய தூதுவர்ப் பில்லி பேய்
வஞ்சினாற் பேதுற மகாபூதம் அஞ்சிட
வாயினும் காலினாலும்
பந்தாடியே மிதித்துக் கொட்டி வடவைசெம்
பவளமா கதிகாசமாப்
பசுஞ்சிறைத் தலமிசைத் தனியயிற் குமரனைப்
பார்த்து அன்புறக் கூவுமாம்
முந்தாகமப் பலகை சங்காத மத்தர்தொழ
முன்பேறு முத்தி முருகன்
முதுகானகத்து எயினர் பண்டோடு அயிற்கணை
முனிந்தே தொடுத்த சிறுவன்
சிந்தா குலத்தையடர் கந்தா எனப்பரவு
சித்தர்க்கு இரங்கு அறுமுகன்
செயவெற்றி வேள்புநிதன் நளினத்தன் முடிகுற்றி
சேவல் திருத்துவசமே.
வந்து ஆர்ப்பரிக்கும் - எதிரில் வந்து நின்று பெரும் ஆரவாரம் செய்யும்
அம்மிண்டு வகை - அந்த மதத்துடன் (திமிருடன்) நெருங்கித் தொடர்வதான
தண்டதரன் - கையில் தண்டம் ஏந்துகின்ற இயமனின்
வலிய தூதுவர் - பலம் மிகுந்த (எம) தூதர்களையும்
பில்லி பேய் - மற்றும் பிறரால் ஏவி விடப்பட்ட பிசாசு முதலியவைகளையும் (செய்வினைகளை)
வஞ்சினால் - மிகுந்த கோபமுடன்
பேதுற - அவற்றின் புத்தி தடுமாறும்படி செய்து
மகாபூதம் அஞ்சிட - பெரிய பூதங்களும் (ஐம்பெரும் பூதங்கள் என்றும் கொள்ளலாம் அத்தனை பலத்தோடு என்பதாக) பயப்படும்படி
வாயினாலும் காலினாலும் - தன்னுடைய அலகைக்கொண்டும், நகங்களையுடைய கால்களாலும்
பந்தாடியே மிதித்து - கால் பந்து போல உதைத்தும் மிதித்தும்
கொட்டி - அடித்தும்
வடவை செம்பவளமா - வடவாக்கினி எனும் நெருப்போ, பவளமோ எனும்படி ரத்தத்தால் சிவக்கடித்து
அதிகாசமாய் - அட்டகாசம் செய்து (பெரிதாகச் சிரித்து)
பசும் சிறைத்தல மிசை - (நீலம் கலந்த) பச்சைத் தோகையுடைய மயிலின் முதுகில் ஆரோகணித்துள்ள
தனி அயில் குமரனை - தன்னிகரில்லாத, கூரிய வேலாயுதம் தாங்கிய குமரக் கடவுளை
பார்த்து அன்பு உறக் கூவுமாம் - பார்த்து உன் அடியவருக்கு வந்த இடைஞ்சலைப் போக்கி விட்டேன் என்று சொல்வதுபோல அன்போடு கூவும்(சேவல்)
முந்து - பழமையான அல்லது முதன்மையான
ஆகமப்பலகை - தமிழ் காவியங்களின் தரம் அறியும் பொருட்டு சிவ பெருமானால் வழங்கப்பட்ட சங்கப்பலகையின் மேல்
சங்க ஆகமத்தர் தொழ - முதல் தமிழ்ச்சங்க உறுப்பினராகத்தோன்றிய (ஓ, ம் என்ற இரண்டு எழுத்தைத் தவிர மீதியுள்ள 49 எழுத்துக்களும் மனித வடிவெடுத்த) 49 கற்றறிந்த தமிழ் புலவர்களும் தன்னை வணங்கும்படியாக
முன்பு ஏறு முத்தி முருகன் - அன்று ஏறி அமர்ந்த (முருகன் சுந்தரபாண்டியரான சொக்கநாதருக்கும், தடாதகையான மீனாட்சியம்மைக்கும் புதல்வராக உக்கிர பாண்டியனாக அத்தமிழ் சங்கத்துக்குத் தலைவராக விளங்கினார்) முக்திக்கு வழிகாட்டும் முருகப்பெருமான்
முது கானத்து எயினர் - காட்டில் வசிக்கும் பழங்குடியினரான வேடர்கள்
பண்டு ஓட - (வள்ளியைத்தூக்கிச்செல்கையில், முருகனை எதிர்த்து வந்த அவள் தன் உறவினர்கள்) பின்வாங்கி ஓடும்படி
அயில் கணை முனிந்தே தொடுத்த சிறுவன் - கூரிய வேலை அம்பு போல எறிந்த இளைஞனான முருகனை
சிந்தை ஆகுலத்தை அடர் கந்தா - மனக்கவலைகளை நீக்கும் கந்தக்கடவுளே
எனப்பரவு சித்தர்க்கு - என்று துதிக்கின்ற மனத்தையுடைய பக்தருக்கு
இரங்கு அறுமுகன் - கருணை புரியும் ஆறுமுகன்
செய வெற்றி வேள் - என்றும் எதிலும் வெற்றியே காணும் தலைசிறந்த ஆண்மகன்
புனிதன் - பரிசுத்தமானவன்
நளினத்தன் முடி குற்றி - தாமரையில் பிறந்து அம்மலரிலேயே வீற்றிருக்கும் பிரமனைக்குட்டித் தண்டித்த பிரானான முருகன்
சேவல் திருத்துவசமே - கையில் இலங்கும் சேவல் பொறித்த கொடியே
வள்ளி என்பது ஜீவ ஆத்மா என்பது அறிந்ததே. வேடர் குலம் என்பது பொதுவாக பாவச்செயல்களையே செய்யும் மானுட இயல்பையும், வள்ளியின் ஐந்து சகோதரர்கள் ஐந்து (கள்ளப்) புலன்களையும், உறவினர் என்பது மற்ற 'வாசனை' எனப்படும் பழவினைப்பதிவுகளான விருப்பு வெறுப்புக்களாகும். முருகன் காந்தர்வ விவாகம் செய்வது அவன் அருளுக்குப்பாத்திரம் ஆவது, அதன் பின் அவனே அந்த ஆத்மாவின் பழவினைகளின் பதிவுகளை அழித்து விடுவதே வேடர்களை வேலெறிந்து ஓடவிட்டதாகச்சொல்லப்படுகிறது.
Back to Top
9 அருணகிரிநாதர் சேவல் விருத்தம்  
உருவாய் எவர்க்குநினை வரிதாய் அனைத்துலகும்
உளதாய் உயிர்க் குயிரதாய்
உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
ஒளியாய் அருட் பொருளதாய்
வரு மீசனைக் களப முகன் ஆதரித்திசையை
வலமாய் மதிக்க வருமுன்
வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான்முன்
வைகு மயிலைப் புகழுமாம்
குரு மாமணித்திரள் கொழிக்கும் புனற்கடம்
குன்று தோறாடல் பழனம்
குழவு பழமுதிர்சோலை ஆவினன்குடி பரங்
குன்றிடம் திருவேரகம்
திரை ஆழிமுத்தைத் தரங்கக்கை சிந்தித்
தெறித் திடுஞ் செந்தினகர்வாழ்
திடமுடைய அடியர்தொழு பழையவன் குலவுற்ற
சேவல் திருத்துவசமே.
உருவாய் - அடியார்தம் பக்தியில் மகிழ்ந்து அவர்க்கு அருள் புரியும்பொருட்டும் திருவிளையாடல் புரிந்து பக்தர் பெருமையை உலகறியச்செய்யும் பொருட்டும் திரு உருவம் தரிப்பவரும்
எவர்க்கும் நினைவரிதாய் - தான் தன் சுய வடிவில் எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் கடந்து அறிவும் ஆனந்தமுமான நித்திய வஸ்துவாக உள்ள நிலையில் யாருக்கும் எட்டாமலும்
அனைத்து உலகும் உளதாய் - எல்லா உலகங்களிலும் ஜட சேதனங்கள் எல்லாவற்றிலும் வியாபித்தும்
உயிருக்கு உயிர் அதாய் - எல்லா ப்ராணிகளிலும் அதன் இயங்கும் திறனாகவும்
உணர்வாய் - சேதனா (அறியும் தன்மை) சக்தியாகவும் விளங்கி
விரிப்பரிய உரை தேர் - வேதங்களாலும் கூட சொற்களைத் தேடித்தேடியும் விளக்கிச் சொல்ல இயலாத
பரப்ரம்ம ஒளியாய் - மேலான உண்மைப் பொருளான அறிவு ஜோதியாக
அருள் பொருள் அதாய் - கருணை வடிவாக அல்லது கருணை என்ற சொல்லின் பொருளாக (இலக்கணமாக, விளக்கமாக)
வரும் ஈசனை - திகழும் சிவ பெருமானை
களப முகன் - யானை முகம் கொண்ட கணபதி
ஆதரித்து - (இவரே முழு முதல் என்று) மனதில் தரித்து
திசையை வலமாய் மதிக்க வருமுன் - அன்று ஒரு நாள் நாற்புறமும் சுற்றி வலமாக வந்து யாவரும் போற்றிப்பாராட்ட முடிக்கும் அத்தருணத்தில்
வளர் முருகனைக்கொண்டு - என்றும் ஆற்றலிலும் புகழிலும் வளர்ந்து கொண்டிருக்கும் முருகப்பெருமானைத் தன் முதுகில் ஏற்று
தரணி வலம் வந்தான் - இந்த உலகத்தையே சுற்றி வலமாக வந்து சேர்ந்த அந்த முருகனின்
முன் வைகும் - சந்நிதி முன் என்றும் வாழும்
மயிலைப் புகழுமாம் - மயில் வாஹனத்தைப் போற்றித் துதிக்குமாம்(சேவல்)
குரு மா மணித்திரள் - ஒளிசிந்தும் விலைமதிப்பற்ற (வடிவில் பெரிய என்றும் கொள்ளலாம்) ரத்தினங்களின் குவியல்களை
கொழிக்கும் - தன்னுடன் அடித்துக்கொண்டு வரும்
புனல் - அருவி, காட்டாறுகளையும்
கடம் - காடுகளையும் கொண்ட
குன்று தோறாடல் - திருத்தணி மலை (பல குன்றுகள் என்றும் சொல்வர். மற்ற முருகன் தலங்களும் வரிசைப்படுத்தி மேலே சொல்லியுள்ளதால் திருத்தணி என்று கொள்வது பொருத்தம் என்று படுகிறது)
பழனம் - பழனாபுரி எனும் திருப்பழநி
குலவு பழமுதிர்ச்சோலை - (பிரகாசமான) புகழ் பெற்ற சோலைமலை
பரங்குன்றிலும் - திருப்பரங்குன்றத்திலும்
திருவேரகம் - சுவாமி மலையிலும்
திரை ஆழி - அலைகளை வீசும் கடல்
முத்தை - முத்துக்களை
தரங்கக்கை சிந்தித் தெறித்திடும் - தன் அலைகளாகிற கையால் வீசிக்கரையில் இடும்
செந்தில் நகர் வாழ் - திருச்செந்தாரிலும் குடி கொண்டிருக்கும்
திடமுடைய அடியர் தொழு - பக்தியில் உறுதியான அடியவர் (இன்பத்திலும் துன்பம் வந்த போதும் மனம் சற்றும் அசையாமல்) வழிபடுகின்ற
பழையவன் - ஆதிப்பழம் பொருளான திருமுருகன்
குலவுற்ற - அணைத்துப் பிடித்திருக்கும்
சேவல் திருத்துவசமே - சேவல் விளங்கும் பெருமை பொருந்திய கொடியாம்

10 அருணகிரிநாதர் சேவல் விருத்தம்  
மகரசல நிதிசுவற உரகபதி முடிபதற
மலைகள் கிடுகிடு கிடெனவே
மகுடகுட வடசிகரி முகடு படபட படென
மதகரிகள் உயிர்சிதறவே
ககன முதல் அண்டங்கள் கண்ட துண்டப் படக்
கர்ச்சித் திரைத்தலறியே
காரையாழின் நகரர் மாரைப் பிளந்து
சிறகைக் கொட்டி நின்றாடுமாம்
சுகவிமலை அமலைபரை இமையவரை தருகுமரி
துடியிடைய னகை யசலையாள்
சுதன் முருகன் மதுரமொழி உழைவநிதை
இபவ நிதை துணைவன் எனது இதய நிலையோன்
திகுட திகு டதிதிகுட தகுடதித குடதிகுட
செக்கண செகக்கணஎனத்
திருநடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
சேவல் திருத்துவசமே.
மகர சலநிதி சுவற - பெரிய மீன்கள் வசிக்கும் கடல் வற்றிப்போகும்படி
உரகபதி முடி பதற - உலகங்களைத்தன் ஆயிரம் தலைகளில் தாங்குகிற ஆதிசேஷனின் தலைகள் பாரம் தாங்காது கலங்க
மலைகள் கிடுகிடு என - மேரு முதலான பெரும் மலைகளும், அண்டத்தைச்சுற்றியுள்ள சக்ரவாளம் என்கிற மலைத்தொடரும் கிடுகிடு என்று ஆடும்படியும்
மகுட குட - குடம் போன்ற மேல்பகுதி உடைய
வடசிகிரி - வடக்கே உள்ள மேருமலையின்
முகடு பட பட என - உச்சியும் அதிரும்படியும்
மதகரிகள் உயிர் சிதற - அம்மலைகளில் வசிக்கும் யானைகள் பயந்தும் உருண்டும் உயிரை விட்டுவிடும்படியும்
ககனம் முதல் - தேவ லோகம் முதலான
அண்டங்கள் கண்ட துண்டப்பட - எல்லா உலகங்களும் துண்டு துண்டாகச் சிதறிப் போகும்படியும்
கர்ச்சித்து இரைத்து அலறியே - பெரிதாக ஆரவாரம் செய்து (இந்த மூன்று சொற்களும் பேர் ஒலியைக்குறிப்பன. மூன்றையும் ஒரே சமயம் உபயோகித்து அந்த சப்தத்தின் பரிமாணம், அளவு எத்தனை என்று உணர்த்துகிறார் அருணகிரி நாதர்)
காரையாழி நகரர் - சமுத்திரக்கரையில் அமைந்த காரையாழி என்னும் நகரில் வாழ்ந்த அரக்கர்களின்
மாரைப்பிளந்து சிறகைக்கொட்டி நின்று ஆடுமாம் - மார்பைப்பிளந்து மகிழச்சியில் தன் சிறகைக்கொட்டி நடனம் புரியமாம் (சேவல்)
சுக விமலை - ஆனந்த வடிவமான அழுக்கே அணுகாதவள்
அமலை - பழுதற்றவள்
பரை - யாவர்க்கும் மேலானவள்
இமய வரை தரு குமரி - இமவானாகிய மலை பெற்ற பெண்
துடி இடை - உடுக்கை போன்ற சிறுத்த இடை கொண்டவள்
அனகை - பாபத்திற்கு அப்பாற்பட்டவள்
அசலையாள் - அசைவற்றவள்
சுதன் - பெற்ற மகனாகிய முருகன்
மதுரமொழி உழை வநிதை - இனிமையாகப்பேசும் மானின் மகளான வள்ளி
இபவநிதை - ஐராவத யானையின் பெண்ணான தெய்வானை
துணைவன் - இவர்களின் கணவன்
எனது இதய நிலையோன் - என்னுடைய இதயத்தைத்தன் நிலையான இருப்பிடமாகக்கொண்டவன் அதாவது என்னால் மறவாமல் எப்போதும் சிந்திக்கப்படுபவன்
திகுடதிகுடதிதிகுட தகுடதிககுடதிகுட செக்கண செகக்கண என - இந்த மாதிரி ஜதியோடு
நடனம் இடு மயிலில் - நிருத்தம் செய்யும் மயிலின் மீது அமர்ந்து
சரு - நடமாடும் (சர என்கிற வடமொழிச்சொல்லைத்தமிழ்ப்படுத்தி உபயோகித்துள்ளார்)
குமர குருபரன் - மேலான குருவாகிய குமரக்கடவுள் தன்
சேவல் திருத்துவசமே - சேவலைத்தாங்கிய திருக்கொடியே
11 அருணகிரிநாதர் சேவல் விருத்தம்  
பூவிலியன் வாசவன் முராரி முநிவோர் அமரர்
பூசனை செய்வோர் மகிழவே
பூதரமும் எழுகடலும் ஆட அமுதூற
அநு போக பதினாலு உலகமும்
தாவு புகழ் மீறிட நிசாசரர்கள் மாளவரு
தான தவநூல் தழையவே
தாள் வலியதான பல பேய்கள் அஞ்சச் சிறகு
கொட்டிக் குரல் பயிலுமாம்
காவுகனி வாழை புளி மாவொடுயர் தாழை கமு
காடவிகள் பரவு நடனக்
காரண மெய்ஞ்ஞான பரி சீரண வராசனக்
கனகமயில் வாகனன் அடல்
சேவகன் இராசத இலக்கண உமைக்கொரு
சிகாமணி சரோருக முகச்
சீதள குமார கிருபாகர மனோகரன்
சேவல் திருத்துவசமே.
பூவில் அயன் - தாமரைப்பூவைத் தனது வசிப்பிடமாகக் கொண்ட பிரம்மன்
வாசவன் - தேவேந்திரன்
முராரி - முர அசுரனை முடித்த திருமால்
முனிவோர் அமரர் - தவசீலர்களான முனிவர்கள், தேவ கணங்கள் (பல வகை தேவர்கள் மரணம் இல்லாதவர்கள்),
பூசனை செய்வோர் - மற்றும் தன்னை வந்தனை செய்யும் மாந்தர் போன்றோர்
மகிழவே - சந்தோஷம் அடையும்படியாகவும்,
பூதரமும் எழுகடலும் ஆட - மலைகளும் பூமியைச் சுற்றியுள்ள ஏழு கடல்களும் ஆனந்த நடனம் ஆடும்படியாகவும்
அமுதூற அநுபோக - அமுதம் போன்ற ஆனந்தத்தை அனுபவிக்கும்
பதினாலு உலகமும் தாவு புகழ் மீறிட - பூமிக்கு மேல் கீழ் ஏழு என்றுள்ள பதினான்கு உலகங்களிலும் தன் புகழ் விரைவாகப்பரவி மிகும்படி
நிசாசரர்கள் மாள - அஞ்ஞானமாகிற இருளில் நடமாடுகிற அரக்கர்கள் மடிந்து போகும்படியும்
வரு தான தவ நூல்கள் தழையவே - தானம் தவம் இவற்றைப் போதிக்கிற, ஊக்குவிக்கிற வேதம் சாஸ்திரம் போன்ற நூல்கள் நன்கு தழைக்கும்படியும்,
தாள் வலியதான பல பேய்கள் அஞ்ச - கீழான சில திறனை உடைய பேய்கள் பயப்படும்படியாக (இங்கு வேதத்துக்குப் புறம்பாகப்பரவி வந்த புறச்சமயங்களைக் குறிப்பாகக் கூறுகிறார்)
சிறகு கொட்டிக் குரல் பயிலுமாம் - தன் சிறகுகளை பட படவென அடித்துக்கொண்டு பெருங்குரல் எழுப்புமாம் (சேவல்)
காவு கனி - பழச் சோலைகளான
வாழை புளி மாவொடு - வாழை புளி மாமரங்களோடு
உயர் தாழை கமுக அவிகள் - உயரமாக வளரும் தென்னை பாக்கு மரங்களும் சேர்ந்த காடுகளில்
பரவு நடன - பலவித நிர்த்தங்கள் புரியும்
காரண மெய்ஞ்ஞான - உண்மைப் பொருளை அறியக்காரணமாக விளங்கும் வேதமாகிய வாகனமாம் (பரி என்பது குதிரை என்றாலும் இங்கு வாகனத்துக்கு ஆகிவந்தது.)
சீரவண - சிறப்பு மிகுந்த
அர அசன - பாம்பைத் தனது உணவாகக் கொண்ட
கனக மயில் வாகனன் - பொன்போல் பெருமை மிக்க மயிலைத்தனது ஊர்தியாக உடைய
அடல் சேவகன் - போரில் வல்லவன்
இராசத இலக்கண - கம்பீரத்துக்கே இலக்கணமாகத்திகழ்பவன்
உமைக்கு ஒரு சிகாமணி - பார்வதி அன்னைக்குத்தலையில் அணியும் அணிகலன் போன்றவன் (அவளுக்குப்பெருமை சேர்ப்பவன்)
சரோருக முக - தாமரைப்பூப்போன்ற முகமுடையவன்
சீதள குமாரன் - மனதிற்குக் குளிர்ச்சி (இதம்) தருபவனான குமரக்கடவுள்
கிருபாகர - கருணை மிகுந்தவன்
மனோகரன் - மனதைக்கொள்ளை கொள்பவன் (தன் அழகாலும் பெருங்குணங்களாலும்)
சேவல் திருத்துவசமே - (ஆன திரு முருகனின் கரம் இலகு) குக்குடக்கொடியே.

This page was last modified on Fri, 06 Dec 2024 00:30:19 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

saeval virutham lang tamil showmeaning Yes