சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
7.015   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பூண் நாண் ஆவது ஓர்
பண் - தக்கராகம்   (திருநாட்டியத்தான்குடி கரிநாதேசுவரர் மலர்மங்கையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=NdPYONZNHaI

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.015   பூண் நாண் ஆவது ஓர்  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருநாட்டியத்தான்குடி ; (திருத்தலம் அருள்தரு மலர்மங்கையம்மை உடனுறை அருள்மிகு கரிநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
சுந்தரர் திருவாரூரில் இனிதுறையும் நாட்களில் சோழ மன்னனுடைய சேனைத்தலைவரும் திருக்கோயில் திருவமுதுக்கு வேண்டும் செந்நெல்லைச் சேகரித்தளிக்கும் திருத்தொண்டரும் வேளாளருமாகிய கோட்புலி நாயனார் தம் ஊராகிய திருநாட்டியத் தான்குடிக்கு எழுந்தருளுமாறு சுந்தரரை வேண்டிக்கொண்டார். அவ் வேண்டுகோட்கிசைந்த சுந்தரர் திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளினார். கோட்புலியாரும் வரவேற்றுத்தம் திருமாளிகைக்கு அழைத்துச்சென்று திருவமுது செய்வித்தார். தம்மக்களாகிய சிங்கடி, வனப்பகை யென்னும் பெண்கள் இருவரையும அழைத்து வணங்கச்செய்து, தம்பிரான் தோழராகிய தாங்கள் என் பெண்கள் இருவரையும் அடிமையாக ஏற்றருள வேண்டும் என வேண்டிக்கொண்டார். அவர்தம் அன்பின் திறமறிந்த சுந்தரர் இவர்கள் என் குழந்தைகள் என்று சொல்லி அன்போடு மடிமீதிருத்தி உச்சி மோந்து அவர்கள் வேண்டுவன அளித்து மகிழ்ந்தார். இங்ஙனம் கோட்புலியாரின் மகளிரைத் தம் மகள்களாக ஏற்றருளிய சுந்தரர், திருநாட்டியத்தான்குடிக் கோயிலையடைந்து பூணாண் ஆவதோர் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி வணங்கினார்.
பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன்; புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன்;
பேணீர் ஆகிலும் பெருமையை உணர்வேன்; பிறவேன் ஆகிலும் மறவேன்;
காணீர் ஆகிலும் காண்பன், என் மனத்தால்; கருதீர் ஆகிலும், கருதி,
நானேல், உம் அடி பாடுதல் ஒழியேன்-நாட்டியத்தான் குடி நம்பீ! .

[1]
கச்சு ஏர் பாம்பு ஒன்று கட்டி நின்று, இடுகாட்டு எல்லியில் ஆடலைக் கவர்வன்;
துச்சேன் என் மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய், திப்பிய மூர்த்தீ!
வைச்சே இடர்களைக் களைந்திட வல்ல மணியே! மாணிக்க வண்ணா!
நச்சேன், ஒருவரை, நான் உம்மை அல்லால்; நாட்டியத்தான் குடி நம்பீ!.

[2]
அஞ்சாதே உமக்கு ஆட்செய வல்லேன்; யாதினுக்கு ஆசைப்படுகேன்?
பஞ்சு ஏர் மெல் அடி மாமலை மங்கை பங்கா! எம் பரமேட்டீ!
மஞ்சு ஏர் வெண்மதி செஞ்சடை வைத்த மணியே! மாணிக்கவண்ணா!
நஞ்சு ஏர் கண்டா! வெண்தலை ஏந்தீ! நாட்டியத்தான் குடி நம்பீ! .

[3]
கல்லேன் அல்லேன், நின் புகழ்; அடிமை கல்லாதே பல கற்றேன்;
நில்லேன் அல்லேன், நின் வழி; நின்றார்-தம்முடை நீதியை நினைய
வல்லேன் அல்லேன்; பொன் அடி பரவ-மாட்டேன்; மறுமையை நினைய,
நல்லேன் அல்லேன், நான் உமக்கு அல்லால்; நாட்டியத்தான் குடி நம்பீ!.

[4]
மட்டு ஆர் பூங்குழல் மலைமகள் கணவனைக் கருதார் தமைக் கருதேன்;
ஒட்டீர் ஆகிலும் ஒட்டுவன், அடியேன்; உம் அடி அடைந்தவர்க்கு அடிமைப்
பட்டேன் ஆகிலும் பாடுதல் ஒழியேன்; பாடியும் நாடியும் அறிய
நட்டேன் ஆதலால் நான் மறக்கில்லேன்-நாட்டியத்தான் குடி நம்பீ! .

[5]
படப் பால்-தன்மையின், நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன்;
குடப் பாச்சில்(ல்) உறை கோ! குளிர் வானே! கோனே! கூற்று உதைத்தானே!
மடப் பால்-தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறை ஓதீ! மங்கை பங்கா!
நடப்பீர் ஆகிலும் நடப்பன், உம் அடிக்கே; நாட்டியத்தான் குடி நம்பீ! .

[6]
ஐவாய் அரவினை மதி உடன் வைத்த அழகா! அமரர்கள் தலைவா!
எய்வான் வைத்தது ஓர் இலக்கினை அணை தர நினைந்தேன், உள்ளம் உள்ளளவும்;
உய்வான் எண்ணி வந்து உம் அடி அடைந்தேன்; உகவீர் ஆகிலும் உகப்பன்;
நைவான் அன்று, உமக்கு ஆட்பட்டது, அடியேன்; நாட்டியத்தான் குடி நம்பீ! .

[7]
கலியேன், மானுட வாழ்க்கை ஒன்று ஆக; கருதிடின் கண்கள் நீர் பில்கும்;
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன்; பசுவே ஏறிலும் பழியேன்;
வலியே ஆகிலும் வணங்குதல் ஒழியேன்; மாட்டேன்; மறுமையை நினையேன்;
நலியேன் ஒருவரை, நான் உமை அல்லால்; நாட்டியத்தான் குடி நம்பீ!.

[8]
குண்டாடிச் சமண் சாக்கியப் பேய்கள் கொண்டார் ஆகிலும், கொள்ளக்
கண்டாலும், கருதேன்; எருது ஏறும் கண்ணா! நின் அலது அறியேன்;
தொண்டாடித் தொழுவார் தொழக் கண்டு தொழுதேன், என் வினை போக;
நண்டு ஆடும் வயல்-தண்டலை வேலி நாட்டியத்தான் குடி நம்பீ! .

[9]
கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன், கோட்புலி, சென்னி
நாடு ஆர் தொல்புகழ் நாட்டியத்தான் குடி நம்பியை நாளும் மறவா,
சேடு ஆர் பூங்குழல் சிங்கடி அப்பன்-திரு ஆரூரன்-உரைத்த,
பாடீர் ஆகிலும், பாடுமின், தொண்டீர்! பாட, நும் பாவம் பற்று அறுமே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list