சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.470   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்


Add audio link Add Audio
வையம்நிகழ் பல்லவர்தம்
குலமரபின் வழித்தோன்றி
வெய்யகலி யும்பகையும்
மிகையொழியும் வகையடக்கிச்
செய்யசடை யார்சைவத்
திருநெறியால் அரசளிப்பார்
ஐயடிகள் நீதியால்
அடிப்படுத்துஞ் செங்கோலார்.

1


உலகில் சிறந்து விளங்குகின்ற பல்லவரின் மரபில் முறைமையாய்த் தோன்றிக், கொடிய வறுமையும் பகையும் அவற்றால் வரும் துன்பங்களும் நீங்குமாறு, சிவந்த சடையினை உடைய சிவபெருமானின் சைவ நெறியின் வழியே நின்று, ஆட்சி புரிவாராகிய 'ஐயடிகள் காடவர் கோன்' என்னும் மன்னர், நீதி வழுவா நெறி முறையால் உலகம் எல்லாம் தம் அடியின் கீழ்த்தங்குமாறு செய்கின்ற ஆட்சிச் சிறப்பை உடையவராக விளங்கினார். *** கலி - வறுமை. மிகை - குற்றம்.
திருமலியும் புகழ்விளங்கச்
சேணிலத்தில் எவ்வுயிரும்
பெருமையுடன் இனிதுஅமரப்
பிறபுலங்கள் அடிப்படுத்துத்
தருமநெறி தழைத்தோங்கத்
தாரணிமேற் சைவமுடன்
அருமறையின் துறைவிளங்க
அரசளிக்கும் அந்நாளில்.

2


கலி - வறுமை. மிகை - குற்றம்.
குறிப்புரை:

மன்னவரும் பணிசெய்ய
வடநூல்தென் தமிழ்முதலாம்
பன்னுகலை பணிசெய்யப்
பார்அளிப்பார் அரசாட்சி
இன்னல்என இகழ்ந்ததனை
எழிற்குமரன் மேல்இழிச்சி
நன்மைநெறித் திருத்தொண்டு
நயந்தளிப்பார் ஆயினார்.

3


கலி - வறுமை. மிகை - குற்றம். *** 'மாரிபொய்ப்பினும் வாரிகுன்றினும், இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும், காவலர்ப் பழிக்கும் இக்கண்ணகன் ஞாலம்', 'மழைவளம் கரப்பின் வான் பேரச்சம், பிழை உயிர் எய்தின் பெரும் பேரச்சம், குடிபுர வுண்டு கொடுங்கோல் அஞ்சி, மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல், துன்பம் அல்லது தொழுதகவில்' (சிலம்பு - வஞ்சிக். காட்சிக். 100 - 104) என வருவனவும் காண்க. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
தொண்டுரிமை புரக்கின்றார்
சூழ்வேலை யுலகின்கண்
அண்டர்பிரான் அமர்ந்தருளும்
ஆலயங்க ளானவெலாம்
கண்டிறைஞ்சித் திருத்தொண்டின்
கடனேற்ற பணிசெய்தே
வண்தமிழின் மொழிவெண்பா
ஓர்ஒன்றா வழுத்துவார்.

4


திருத்தொண்டிற்குரிய செயல்களை வழுவாது செய்து வரும் அந்நாயனார், கடல் சூழ்ந்த இவ்வுலகில் தேவர் பெருமா னான இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்கள் எல்லாவற்றிற்கும் சென்று, கண்டு வணங்கித் தாம் மேற்கொண்ட திருத்தொண்டிற் கேற்ற முறையான பணி விடைகள் எல்லாவற்றையும் செய்து, ஒவ்வொரு பதியிலும் வளமையுடைய தமிழில் வெண்பா ஒவ்வொன்றால் போற்றி வழிபடுவாராய்,
குறிப்புரை:

பெருத்தெழுகா தலில்வணங்கிப்
பெரும்பற்றத் தண்புலியூர்த்
திருச்சிற்றம் பலத்தாடல்
புரிந்தருளுஞ் செய்யசடை
நிருத்தனார் திருக்கூத்து
நேர்ந்திறைஞ்சி நெடுந்தகையார்
விருப்பினுடன் செந்தமிழின்
வெண்பாமென் மலர்புனைந்தார்.

5


பெருகி எழும் பத்திமையால் வணங்கிக் குளிர்ந்த பெரும்பற்றப் புலியூரின்கண் உள்ள சிற்றம்பலத்தில் ஆடல் இயற்றும் சிவந்த சடையையுடைய கூத்தப் பெருமானின் கூத்தை நேர்பட வணங்கிய பெருந்தகையாராகிய நாயனார், தாம் விருப்புடன் பாடி வந்த இனிய செந்தமிழ் வெண்பாவாகிய மென்மையான மலர் மாலையைச் சூட்டினார். *** இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.
Go to top
அவ்வகையால் அருள்பெற்றங்கு
அமர்ந்துசில நாள்வைகி
இவ்வுலகில் தம்பெருமான்
கோயில்களெல் லாம்எய்திச்
செவ்வியஅன் பொடுபணிந்து
திருப்பணிஏற் றனசெய்தே
எவ்வுலகும் புகழ்ந்தேத்தும்
இன்தமிழ்வெண் பாமொழிந்தார்.

6


அவ்வகையில் அருளைப் பெற்று அப்பதியில் அமர்ந்து, சில நாள்கள் தங்கி, இவ்வுலகில் தம் பெருமானார் வீற்றிருந்தருளும் கோயில்கள் எல்லாவற்றிற்கும் சென்று, தம் ஒரு நெறிய மனம் கொண்ட அன்பினால் வணங்கி, ஏற்ற பிற திருப்பணி களையும் செய்து, எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் இனிய தமிழ் வெண்பாக்களைப் பாடி வழிபட்டார். *** இவர் அருளிய நூல் திருப்பதிக வெண்பாக்கள் கே்ஷத்திரத் திருவெண்பா என அழைக்கப் பெறுகிறது. அவ்வாறு அருளிய பாடல்கள் மிகப் பலவாய் இருத்தல் வேண்டும். எனினும் இது பொழுது 24 வெண்பாக்களே உள்ளன. அவற்றில் இருபத்திரண்டு பாடல்கள் இன்ன இன்ன திருப்பதியில் அருளப்பெற்றன எனத் தெரிகின்றது. இருபாடல்கள் அருளப் பெற்ற இடம் தெரியாமையின் அவை (10 , 23) பொது எனக் கூறப் பெறுகின்றன.
அப்பதிகள் 1. திருத்தில்லைச் சிற்றம்பலம் 2. திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் 3. திருஐயாறு 4. திரு ஆரூர் 5. திருத்துருத்தி 6. திருக்கோடிகா 7. திருவிடைவாய் 8. திருநெடுங்களம் 9. திருக்குழித் தண்டலை (திருக்கடம்பந்துறை) 11. திரு ஆனைக்கா 12. திரு மயிலை 13. திருஉஞ்சேனை மாகாளம் 14. திருவளைகுளம் 15. திருச்சாய்க்காடு 16. திருப்பாச்சிலாச்சிராமம் 17. திருச்சிராப்பள்ளி 18. திருமழபாடி 19. திருஆப்பாடி 20. கச்சித் திருஏகம்பம் 21. திருப்பனந்தாள் - தாடகையீச்சரம் 22. திருஓற்றியூர். 24. திருமயானம் (திருக்கடவூர் மயானம்). 10, 23 ஆகிய இரு பாடல்களும் பொதுவெண்பாக்களாம்.

இந்நெறியால் அரனடியார்
இன்பமுற இசைந்தபணி
பன்னெடுநாள் ஆற்றியபின்
பரமர்திரு வடிநிழற்கீழ்
மன்னுசிவ லோகத்து
வழியன்பர் மருங்கணைந்தார்
கன்னிமதில் சூழ்காஞ்சிக்
காடவர் ஐடிகளார்.

7


பிறரால் வென்று அழிக்கப்படாத மதிலையுடைய காஞ்சி நகரில் அரசியற்றிய ஐயடிகள் காடவர்கோன், இந்நெறியினால் சிவனடியார்கள் இன்பம் அடையத் தமக்கு இயைந்த தொண்டுகளைப் பல காலமாகச் செய்திருந்து, பின்னர் இறைவரின் திருவடியின் கீழ்ச் சிவவுலகில் வழிவழியாக வாழ்ந்து வரும் அடியவர்களுடன் சேர்ந்தார்.
குறிப்புரை:

பையரவ மணியாரம்
அணிந்தார்க்குப் பாவணிந்த
ஐயடிகள் காடவனார்
அடியிணைத்தா மரைவணங்கிக்
கையணிமான் மழுவுடையார்
கழல்பணிசிந் தனையுடைய
செய்தவத்துக் கணம்புல்லர்
திருத்தொண்டு விரித்துரைப்பாம்.

8


நச்சுப் பையையுடைய பாம்பை மணி மாலையாய் அணிந்த இறைவற்கு வெண்பாப் பாடிச் சாத்திய ஐயடிகள் காடவர் கோன் நாயனாரின் திருவடிகளை வணங்கி, கையில் மழுவையுடைய இறைவரின் திருவடிகளைப் பணியும் சிந்தனையைச் செய்தவத்தால் பெற்றுவிளங்கும் கணம் புல்ல நாயனாரின் திருத்தொண்டினை இனி விரித்துச் சொல்வாம்.

குறிப்புரை:

உளத்திலொரு துளக்கம் இலோம்
உலகுய்ய இருண்ட திருக்
களத்து முது குன்றர்தரு
கனகம் ஆற்றினிலிட்டு
வளத்தின் மலிந்தேழ் உலகும்
வணங்குபெருந் திருவாரூர்க்
குளத்தில்எடுத் தார்வினையின்
குழிவாய்நின்று எனையெடுத்தார்.

9


உலகம் உய்யும் பொருட்டு நஞ்சு உண்டதால் கருமையுடைய கழுத்தையுடைய திருமுதுகுன்றவாணர் அளித்த பொன்னை மணிமுத்தாற்றில் இட்டுப்பின் வளத்தினால் மிக்க ஏழ் உலகங்களும் வணங்கும் பெரிய திருவாரூர்க் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்தருளியவரான நம்பியாரூரர், வினையான பெருங்குழியின் வாயினின்றும் எம்மை மேல் எடுத்தவர்; ஆதலால், உள்ளத்தில் யாம் சிறிதும் நடுக்கம் இல்லோம். *** வகைநூல் புகலூரில் பொன் பெற்றதும் நாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு நல்லவன் என்பதும் கூறி ஆரூரரை வணங்கிற்று. விரிநூல் திருமுதுகுன்றத்தில் ஆற்றிலிட்ட பொன்னைத் திருவாரூர்க் குளத்தில் எடுத்த நிகழ்ச்சியை உளங் கொண்டு போற்றிற்று. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் முற்றிற்று.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song author %E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D paadal name %E0%AE%90%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D pathigam no 12.470