சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.084   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருநனிப்பள்ளி - பியந்தைக்காந்தாரம் கரகரப்பிரியா நவரோசு கன்னடகௌலா ராகத்தில் திருமுறை அருள்தரு பர்வதராசபுத்திரி உடனுறை அருள்மிகு நற்றுணையப்பர் திருவடிகள் போற்றி
ஞானசம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் பிறந்த நனிபள்ளியிலுள்ள அந்தணர்கள், அவர் மூவாண்டில் சிவஞானம் பெற்றதையும் சிவபிரானால் பொற்றாளம் அருளப் பெற்றதையும் கேள்வியுற்றுத் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டுமென ஞானசம் பந்தரை வேண்டினர். அதற்கு இசைந்த ஞானசம்பந்தர் தோணிபுரத்து இறைவரை வணங்கி விடைபெற்றுத் தாமரை மலர் போன்ற தம் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தருளினார். ஆளுடைய பிள்ளையார் அடிமலர் வருந்தக் கண்ட சிவபாத இருதயர் ஞானசம்பந்தரைப் பிறர் தூக்கிச் செல்வதை விரும்பாது தாமே தன் திருத்தோளில் அமர்த்திக் கொண்டு செல்வாராயினார். நனிபள்ளியை அணுகிய நிலையில் ஞானசம்பந்தர் எதிரே தோன்றும் இப்பதியாது எனக் கேட்கத் தந்தையார் அது தான் நனிபள்ளி எனச் சொல்லக் கேட்டுக் காரைகள் கூகைமுல்லை எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார்.
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=-hsh2WlPosg   Add audio link Add Audio

காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான்
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.

1

சடையிடைப் புக்கொடுங்கி யுளதங்கு வெள்ளம் வளர்திங்கள் கண்ணி அயலே
இடையிடைவைத்ததொக்கு மலர்தொத்து மாலை யிறைவன் னிடங்கொள் பதிதான்
மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து மணநாறு நீலம் மலரும்
நடையுடை யன்னம்வைகு புனலம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள்.

2

பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபா டிலாத பெருமான்
கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை யிடமாய காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின் விடுபோ தலர்ந்த விரைசூழ்
நறுமல ரல்லிபுல்லி யொலிவண் டுறங்கு நனிபள்ளி போலும் நமர்காள்.

3

குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு தலைமாலை யோடு குலவி
ஒளிர்தரு திங்கள்சூடி யுமைபாக மாக வுடையா னுகந்த நகர்தான்
குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட பெடைவண்டு தானும் முரல
நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகு நனிபள்ளி போலும் நமர்காள்.

4

தோடொரு காதனாகி யொருகா திலங்கு சுரிசங்கு நின்று புரளக்
காடிட மாகநின்று கனலாடும் எந்தை யிடமாய காதல் நகர்தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று வெறிநீர் தெளிப்ப விரலால்
நாடுட னாடுசெம்மை யொலிவெள்ள மாரு நனிபள்ளி போலும் நமர்காள்.

5
Go to top

மேகமொ டோடுதிங்கண் மலரா அணிந்து மலையான் மடந்தை மணிபொன்
ஆகமொர் பாகமாக அனலாடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமொ டாடுமந்தி யுகளுஞ் சிலம்ப அகிலுந்தி யொண்பொன் இடறி
நாகமொ டாரம்வாரு புனல்வந் தலைக்கு நனிபள்ளி போலும் நமர்காள்.

6

தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் கொடுகொட்டிவீணை முரல
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான்
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி
நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள்

7

வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று மதியா வரக்கன் வலியோ
டுலமிகு தோள்கள்ஒல்க விரலா லடர்த்த பெருமான் உகந்த நகர்தான்
நிலமிகு கீழுமேலு நிகராது மில்லை யெனநின்ற நீதி யதனை
நலமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்

8

நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற தொருநீர்மை சீர்மை நினையார்
அறவுரு வேதநாவன் அயனோடுமாலு மறியாத அண்ணல் நகர்தான்
புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை புனைகொன்றை துன்று பொதுளி
நறவிரி போதுதாது புதுவாச நாறும் நனிபள்ளி போலும் நமர்காள்

9

அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில் இடவுண்டு பட்ட அமணும்
மனமிகு கஞ்சிமண்டை யதிலுண்டு தொண்டர் குணமின்றி நின்ற வடிவும்
வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான்
நனமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யு நனிபள்ளி போலும் நமர்காள்

10
Go to top

கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி யென்று கருதப்
படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன்
இடுபறை யொன்றவத்தர் பியன்மே லிருந்தின் இசையா லுரைத்த பனுவல்
நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க வினை கெடுதலாணை நமதே

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநனிப்பள்ளி
2.084   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காரைகள், கூகை, முல்லை, கள,
Tune - பியந்தைக்காந்தாரம்   (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)
4.070   திருநாவுக்கரசர்   தேவாரம்   முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன்
Tune - திருநேரிசை   (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)
7.097   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால்
Tune - பஞ்சமம்   (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000