சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.072   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருநீலக்குடி - திருக்குறுந்தொகை அருள்தரு நீலநிறவுமையம்மை உடனுறை அருள்மிகு நீலகண்டேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=z5kYSXqsNYo   Add audio link Add Audio

வைத்த மாடும், மனைவியும், மக்கள், நீர்
செத்தபோது, செறியார் பிரிவதே;
நித்தம் நீலக்குடி அரனை(ந்) நினை
சித்தம் ஆகில், சிவகதி சேர்திரே.

1
தேடிவைத்த செல்வமும் , மனைவியும் , மக்களும் நீர் செத்தபோது உம்மைச் செறியார் ; பிரிவதே இயல்பாம் ; நாள் தோறும் நீலக்குடியரனை நினையும் சித்தம் ஆகின்சிவகதி சேர்வீர் .

செய்ய மேனியன், தேனொடு பால்தயிர்-
நெய் அது ஆடிய நீலக்குடி அரன்,
மையல் ஆய் மறவா மனத்தார்க்கு எலாம்
கையில் ஆமலகக்கனி ஒக்குமே.

2
சிவந்த திருமேனியனாய்த் தேனும் , பாலும் , தயிரும் , நெய்யும் கொண்டு திருமுழுக்காடும் நீலக்குடி அரனின்மேல் காதல் கொண்டு மறவாத மனத்தினர்க்கெல்லாம் உள்ளங்கை நெல்லிக் கனி போல அப்பெருமான் புலப்பட்டு அருள்புரிவான் .

ஆற்ற நீள்சடை, ஆயிழையாள் ஒரு-
கூற்றன்; மேனியில் கோலம் அது ஆகிய
நீற்றன் நீலக்குடி உடையான்; அடி
போற்றினார் இடர் போக்கும் புனிதனே.

3
நீலக்குடி உடைய பெருமான் , கங்கையாற்றுடன் கூடிய நீண்ட சடையையுடையவன் . உமாதேவியை ஒரு கூற்றிற் கொண்ட இயல்பினன் . திருமேனிக்கு அழகு தருவதாகிய திருநீற்றை உடையவன் . திருவடி போற்றினார் இடர்களைப் போக்கும் புனிதன் .

நாலு வேதியர்க்கு இன் அருள் நன்நிழல்
ஆலன்; ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர்
நீலன் -நீலக்குடி உறை நின்மலன்;
காலனார் உயிர் போக்கிய காலனே.

4
நான்கு முனிவர்களுக்கு இன்னருள் புரிய ஆலமரத்தின் நன்னிழலின் கீழ் இருந்தோன் ; ஆலகால நஞ்சு உண்ட கண்டத்துடன் பொருந்திய நீலநிறம் உடையவன் . நீலக்குடி உறையும் மலமற்றவன் ; காலன் உயிர் போக்கிய கடவுள் .

நேச நீலக்குடி அரனே! எனா
நீசராய், நெடுமால் செய்த மாயத்தால்,
ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்து போய்,
நாசம் ஆனார், திரிபுரநாதரே.

5
`நேசத்துக்குரிய நீலக்குடி அரனே !` என்னாத கீழ்மை உடையவராய் நெடுமால் செய்த மாயத்தால் திரிபுரத்து அசுரர்கள் ஈசன் ஓரம்பு எய்ய எரிந்து சாம்பலாய்ப் போய் நாசமாயினர் .
Go to top

கொன்றை சூடியை, குன்றமகளொடும்
நின்ற நீலக்குடி அரனே! எனீர்-
என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர்;
பொன்றும் போது நுமக்கு அறிவு ஒண்ணுமே?

6
என்றும் பொய்யாகிய உலக வாழ்வை உகந்து இறுமாப்பு அடைகின்ற நீர் இறக்கும்போது நுமக்கு அறியவொண்ணுமோ ? ஒண்ணாதாதலால் கொன்றை சூடும் கடவுளுமாகிய மலை மகளோடும் நின்ற நீலக்குடி அரனே என்று உரைப்பீர்களாக !

கல்லினோடு எனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர் புக நூக்க, என் வாக்கினால்,
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி, உய்ந்தேன் அன்றே!

7
கல்லினோடு என்னைச் சேர்த்துக்கட்டி அமண் ஒழுக்கமுடையவர்கள் விரைந்து கடல் நீரிற் புக - நூக்கிவிட , என் வாக்கினால் நெல்வளம் உடைய நீண்ட வயல் சூழ்ந்த நீலக்குடி அரனுடைய நல்ல நாமத்தைச் சொல்லி நன்றே உய்ந்தேன் .

அழகியோம்; இளையோம் எனும் ஆசையால்
ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே,
நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன்
கழல் கொள் சேவடி கைதொழுது, உய்ம்மினே!

8
` யாம் அழகியவர்கள் ; இளையவர்கள் ` எனும் ஆசையால் ஒழுகி , உயிர் உடலைவிட்டுப் பிரிந்துபோவதற்கு முன்பே , நிழல் உடையதாய்ச் செறிந்த பொழில்களையுடைய நீலக்குடி அரனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழுது உய்வீர்களாக .

கற்றைச் செஞ்சடைக் காய் கதிர் வெண் திங்கள்
பற்றிப் பாம்பு உடன் வைத்த பராபரன்
நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன்;
சுற்றித் தேவர் தொழும் கழல் சோதியே.

9
கற்றையாகிய செஞ்சடையில் , குளிர்ந்த கதிர்களை வீசும் வெண்திங்களைப்பற்றிப் பாம்புடன் வைத்த கடவுளாகிய நெற்றிக்கண்ணுடைய நீலக்குடி அரன் , தேவர் சுற்றிவந்து தொழும் கழலணிந்த சோதிவடிவினன் ஆவன் .

தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள்
அரக்கனார் உடல் ஆங்கு ஓர் விரலினால்
நெரித்து, நீலக்குடி அரன், பின்னையும்
இரக்கம் ஆய், அருள் செய்தனன் என்பரே.

10
நீலக்குடி அரன் தருக்கடைந்து திருக் கயிலையைத் தாங்கிய செறிந்த தோளை உடைய இராவணன் உடலை ஓர் திரு விரலால் நெரித்துப் பின்னையும் இரக்கமாகி அருள் புரிந்த கருணைத் திறம் உடையவன் என்பர் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநீலக்குடி
5.072   திருநாவுக்கரசர்   தேவாரம்   வைத்த மாடும், மனைவியும், மக்கள்,
Tune - திருக்குறுந்தொகை   (திருநீலக்குடி நீலகண்டேசுவரர் நீலநிறவுமையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000