சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.008   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்காளத்தி - திருத்தாண்டகம் அருள்தரு ஞானப்பூங்கோதையாரம்மை உடனுறை அருள்மிகு காளத்திநாதர் திருவடிகள் போற்றி
திருப்பைஞ்ஞீலியில் சிலநாள் தங்கித் திருவண்ணாமைலக்குப் புறப்பட்டார். திருவண்ணாமைல, திருவோத்தூர், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், திருவொற்றியூர், மயிலாப்பூர், திருப்பாசூர், திருவாலங்காடு, காரிகரை முதலான தலங்களைத் தரிசித்துத் திருக்காளத்திக்கு வந்தார். கண்ணப்பர்க்கருள் செய்த காளத்திநாதனைப் பாடிப் பரவி இன்புற்றார்.
https://www.youtube.com/watch?v=PHR3JLFtuIk   Add audio link Add Audio
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண்,
  வியன்கச்சிக் கம்பன் காண், பிச்சை அல்லால்
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண்,
மயானத்து மைந்தன்காண், மாசு ஒன்று இல்லாப்
பொன் தூண் காண், மா மணி நல்குன்று ஒப்பான்
காண், பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற
கல்-தூண் காண்-காளத்தி காணப்பட்ட கண
  நாதன் காண்;அவன் என் கண் உளானே.


1


இடிப்பான் காண், என் வினையை;ஏகம்பன்
 காண்;எலும்பு ஆபரணன் காண்;எல்லாம் முன்னே
முடிப்பான் காண்;மூஉலகும் ஆயினான் காண்;
 முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண்;
  பராய்த்துறையான்;பழனம், பைஞ்ஞீலியான் காண்;
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணியான் காண் -
  காளத்தியான் அவன், என் கண் உளானே.


2


நாரணன் காண், நான்முகன் காண், நால்வேதன்
  காண், ஞானப் பெருங்கடற்கு ஓர் நாவாய் அன்ன
பூரணன் காண், புண்ணியன் காண், புராணன் தான்
காண், புரிசடைமேல் புனல் ஏற்ற புனிதன் தான்காண்,
சாரணன் காண், சந்திரன் காண், கதிரோன் தான்
 காண், தன்மைக் கண்-தானேகாண், தக்கோர்க்கு எல்லாம்
காரணன் காண்-காளத்தி காணப்பட்ட கண நாதன்
காண்;அவன் என் கண் உளானே.


3


செற்றான் காண், என் வினையை;தீ ஆடீ காண்;
திரு ஒற்றியூரான் காண்;சிந்தைசெய்வார்க்கு
உற்றான் காண்;ஏகம்பம் மேவினான் காண்;
 உமையாள் நல்கொழு நன் காண்;இமையோர் ஏத்தும்
சொல்-தான் காண்;சோற்றுத்துறை உளான் காண்;
 சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்
கற்றான் காண்-காளத்தி காணப்பட்ட கணநாதன்
  காண்;அவன் என் கண் உளானே.


4


மனத்து அகத்தான்;தலைமேலான்;வாக்கின் உள்ளான்;
வாய் ஆரத் தன் அடியே பாடும் தொண்டர்-
இனத்து அகத்தான்;இமையவர்தம் சிரத்தின்மேலான்;
ஏழ் அண்டத்து அப்பாலான்;இப் பால் செம்பொன்
புனத்து அகத்தான்;நறுங்கொன்றைப் போதின் உள்ளான்;
 பொருப்பு இடையான்;நெருப்பு இடையான்;காற்றின் உள்ளான்;
கனத்து அகத்தான்;கயிலாயத்து உச்சி உள்ளான்
 காளத்தியான் அவன், என் கண் உளானே.


5


Go to top
எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண்;
ஏகம்பம் மேயான் காண்;இமையோர் ஏத்தப்
பொல்லாப் புலன் ஐந்தும் போக்கினான் காண்;
  புரிசடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண்;
நல்ல விடை மேற்கொண்டு, நாகம் பூண்டு, நளிர்
  சிரம் ஒன்று ஏந்தி, ஓர் நாண் ஆய் அற்ற
கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் - 
  காளத்தியான் அவன், என் கண் உளானே.


6


கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண்; கண்டன் காண்; வண்டு உண்ட கொன்றையான் காண்;
எரி, பவள, வண்ணன் காண், ஏகம்பன் காண்; எண்திசையும் தான் ஆய குணத்தினான் காண்;
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடி காண்; தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண்;
கரி உரிவை போர்த்து உகந்த காபாலீ காண் -  காளத்தியான் அவன், என் கண் உளானே.


7


இல் ஆடிச் சில்பலி சென்று ஏற்கின்றான் காண்; இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண்;
வில் ஆடி வேடனாய் ஓடினான் காண்; வெண் நூலும் சேர்ந்த அகலத்தான் காண்;
மல் ஆடு திரள் தோள்மேல் மழுவாளன் காண்; மலைமகள் தன் மணாளன் காண்; மகிழ்ந்து முன்நாள்
கல்லாலின் கீழ் இருந்த காபாலீகான் காளத்தியான் அவன், என் கண் உளானே.


8


தேனப் பூ வண்டு உண்ட கொன்றையான் காண்;
 திரு ஏகம்பத்தான் காண்;தேன் ஆர்ந்து உக்க
ஞானப் பூங்கோதையாள் பாகத்தான் காண்;
  நம்பன் காண்;ஞானத்து ஒளி ஆனான் காண்;
வானப் பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து
 நின்றான் காண்;வண்டு ஆர் சோலைக்
கானப்பேரூரான் காண்;கறைக் கண்டன் காண் -
காளத்தியான் அவன், என் கண் உளானே.


9


இறையவன் காண்;ஏழ் உலகும் ஆயினான்காண்;
  ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண்;
குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண்;
 குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண்;
மறை உடைய வானோர் பெருமான் தான் காண்;
  மறைக்காட்டு உறையும் மணிகண்டன் காண்;
கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் -
காளத்தியான் அவன், என் கண் உளானே.


10


Go to top
உண்ணா அருநஞ்சம் உண்டான் தான் காண்;ஊழித்தீ
அன்னான் காண்;உகப்பார் காணப்
பண் ஆரப் பல் இலயம் பாடினான் காண்;பயின்ற
நால் வேதத்தின் பண்பினான் காண்;
அண்ணாமலையான் காண்;அடியார் ஈட்டம் அடி
இணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண்;
கண் ஆரக் காண்பார்க்கு ஓர் காட்சியான் காண் -
 காளத்தியான் அவன், என் கண் உளானே.


11



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்காளத்தி
3.036   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சந்தம், ஆர், அகிலொடு, சாதி,
Tune - கொல்லி   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
3.069   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது
Tune - சாதாரி   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
6.008   திருநாவுக்கரசர்   தேவாரம்   விற்று ஊண் ஒன்று இல்லாத
Tune - திருத்தாண்டகம்   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
7.026   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   செண்டு ஆடும் விடையாய்! சிவனே!
Tune - நட்டராகம்   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal pathigam no 6.008