மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த் தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச் சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில் இனமாதவ ரிறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.
|
1
|
மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புக ழொளிசேர் கலையார்தரு புலவோரவர் காவன்மிகு குன்றில் இலையார்தரு பொழில்சூழ்தரு மிடும்பாவன மிதுவே.
|
2
|
சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழு மெந்தை ஞாலம்மிகு கடல்சூழ்தரு முலகத்தவர் நலமார் கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில் ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே.
|
3
|
பொழிலார்தரு குலைவாழைக ளெழிலார்திகழ் போழ்தில் தொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில் குழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில் எழிலார்தரு மிறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.
|
4
|
பந்தார்விர லுமையாளொரு பங்காகங்கை முடிமேல் செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல் கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில் எந்தாயென விருந்தானிடம் இடும்பாவன மிதுவே.
|
5
|
Go to top |
நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி அறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக் குறிநீர்மையர் குணமார்தரு மணமார்தரு குன்றில் எறிநீர்வயல் புடைசூழ்தரு மிடும்பாவன மிதுவே.
|
6
|
நீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம் பாறேறிய படுவெண்டலை கையிற்பலி வாங்காக் கூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி ஏறேறிய விறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.
|
7
|
தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை ஓராதெடுத் தார்த்தான்முடி யொருபஃதவை நெரித்துக் கூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த ஏரார்தரு மிறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.
|
8
|
பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலிமலிசீர்த் தெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர்பலதூய் மருளார்தரு மாயன்னயன் காணார்மயலெய்த இருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவன மிதுவே.
|
9
|
தடுக்கையுட னிடுக்கித்தலை பறித்துச்சமண் நடப்பார் உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல் வாரும் மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல் இடுக்கண்பல களைவானிடம் இடும்பாவன மிதுவே.
|
10
|
Go to top |
கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக் கோல இடியார்கட லடிவீழ்தரு மிடும்பாவனத் திறையை அடியாயுமந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன் படியாற்சொன்ன பாடல்சொலப் பறையும் வினை தானே.
|
11
|