பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே அடிகளாரத் தொழுதேத்த நின்ற அழகன்னிடம் கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி வடிகொள்சோலைம் மலர் மணங்கமழும் மதிமுத்தமே.
|
1
|
தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலும் கொண்டுகண்டார் குறிப்புணர நின்ற குழகன்னிடம் தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்த திலதைப்பதி வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலைம் மதிமுத்தமே.
|
2
|
அடலுளேறுய்த் துகந்தான் அடியார் அமரர்தொழக் கடலுள்நஞ்ச அமுதாக வுண்ட கடவுள்ளிடம் திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்த திலதைப்பதி மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும் மதிமுத்தமே.
|
3
|
கங்கைதிங்கள் வன்னிதுன் எருக்கின்னொடு கூவிளம் வெங்கண்நாகம் விரிசடையில் வைத்த விகிர்தன்னிடம் செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்த திலதைப்பதி மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகார் மதிமுத்தமே.
|
4
|
புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடித் தேரினான் பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர் விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள் மரவமவ்வல் மலருந் திலதைம் மதிமுத்தமே.
|
5
|
Go to top |
விண்ணர்வேதம் விரித்தோத வல்லார் ஒருபாகமும் பெண்ணர்எண்ணார் எயில் செற்றுகந்த பெருமானிடம் தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத் திலதைப்பதி மண்ணுளார்வந் தருள்பேண நின்றம் மதிமுத்தமே.
|
6
|
ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி கூறுசேரும் முருவர்க் கிடமாவது கூறுங்கால் தேறலாரும் பொழில் சூழ்ந்தழகார் திலதைப்பதி மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்தம் மதிமுத்தமே.
|
7
|
கடுத்துவந்த கனன்மேனி யினான்கரு வரைதனை எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க் கிடமாவது புடைக்கொள்பூகத் திளம்பாளை புல்கும் மதுப்பாயவாய் மடுத்துமந்தி யுகளுந் திலதைம் மதிமுத்தமே.
|
8
|
படங்கொணாகத் தணையானும் பைந்தா மரையின்மிசை இடங்கொணால்வே தனுமேத்த நின்ற இறைவன்னிடம் திடங்கொள்நாவின் இசைதொண்டர் பாடுந் திலதைப்பதி மடங்கல்வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே.
|
9
|
புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப் பித்தர்சொன்னம் மொழிகேட்கி லாத பெருமானிடம் பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந் திலதைப்பதி மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே.
|
10
|
Go to top |
மந்தமாரும் பொழில் சூழ்திலதைம் மதிமுத்தர்மேற் கந்தமாருங் கடற்காழி யுள்ளான் தமிழ்ஞானசம் பந்தன்மாலை பழிதீர நின்றேத்த வல்லார்கள்போய்ச் சிந்தைசெய்வார் சிவன்சேவடி சேர்வது திண்ணமே.
|
11
|