தழைகொள்சந் தும்மகிலும் மயிற்பீலி யுஞ்சாதியின் பழமும்உந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சரத் தழகர்பாதந் தொழுதேத்த வல்லார்க் கழகாகுமே.
|
1
|
பெண்ணொர்பாகம் அடையச் சடையிற் புனல்பேணிய வண்ணமான பெருமான் மருவும் இடம்மண்ணுளார் நண்ணிநாளுந் தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரம் கண்ணினாற் காணவல்லா ரவர்கண் ணுடையார்களே.
|
2
|
குறவர்கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும் மணிகுலவுநீர் பறவையாலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை நறவநாறும் பொழில்சூழ்ந் தழகாய நாகேச்சரத் திறைவர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே.
|
3
|
கூசநோக்காதுமுன் சொன்ன பொய்கொடு வினைகுற்றமும் நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரம் தேசமாக்குந் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல் நேசமாக்குந் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே.
|
4
|
வம்புநாறும் மலரும்மலைப் பண்டமுங் கொண்டுநீர் பைம்பொன்வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார் உம்பர்வானோர் தொழச் சென்றுடனாவதும்உண்மையே.
|
5
|
Go to top |
காளமேகந் நிறக்கால னோடந்தகன் கருடனும் நீளமாய்நின் றெய்தகாமனும் பட்டன நினைவுறின் நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார் கோளுநாளுந் தீயவேனும் நன்காங் குறிக்கொண்மினே.
|
6
|
வேயுதிர்முத் தொடுமத்த யானை மருப்பும்விராய்ப் பாய்புனல்வந் தலைக்கும் பழங்காவிரித் தென்கரை நாயிறுந்திங் களுங்கூடி வந்தாடு நாகேச்சரம் மேயவன்றன் அடிபோற்றி யென்பார் வினைவீடுமே.
|
7
|
இலங்கைவேந்தன் சிரம்பத்தி ரட்டியெழிற் றோள்களும் மலங்கிவீழம் மலையால் அடர்த்தா னிடமல்கிய நலங்கொள்சிந்தை யவர்நாள்தொறும் நண்ணும் நாகேச்சரம் வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே.
|
8
|
கரியமாலும் மயனும் மடியும்முடி காண்பொணா எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்இட மீண்டுகா விரியின்நீர்வந் தலைக்குங் கரைமேவு நாகேச்சரம் பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே.
|
9
|
தட்டிடுக்கி யுறிதூக்கி யகையினர் சாக்கியர் கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளி லங்காட்டிடை நட்டிருட்கண் நடமாடிய நாதன் நாகேச்சுரம் மட்டிருக்கும் மலரிட் டடிவீழ்வது வாய்மையே.
|
10
|
Go to top |
கந்தநாறும் புனற்காவிரித் தென்கரைக் கண்ணுதல் நந்திசேருந் திருநாகேச் சரத்தின் மேன்ஞானசம் பந்தனாவிற் பனுவல் லிவைபத்தும் வல்லார்கள்போய் எந்தையீசன் இருக்கும் உலகெய்த வல்லார்களே.
|
11
|