இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாயெறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி நெருநலையாய் இன்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.
|
1
|
மண்ணாகி விண்ணாகி மலையு மாகி வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக் கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக் கலையாகிக் கலைஞானந் தானே யாகிப் பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப் பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.
|
2
|
கல்லாகிக் களறாகிக் கானு மாகிக் காவிரியாய்க் கால்ஆறாய்க் கழியு மாகிப் புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப் புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச் சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச் சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி நெல்லாகி நிலனாகி நீரு மாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
|
3
|
காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க் கனவாகி நனவாகிக் கங்கு லாகிக் கூற்றாகிக் கூற்றுதைத்த கொல்களிறு மாகிக் குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய் நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி ஏற்றானா யேறூர்ந்த செல்வ னாகி யெழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
|
4
|
தீயாகி நீராகித் திண்மை யாகித் திசையாகி அத்திசைக் கோர்தெய்வ மாகித் தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித் தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக் காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி நீயாகி நானாகி நேர்மை யாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
|
5
|
Go to top |
அங்கமா யாதியாய் வேத மாகி அருமறையோ டைம்பூதந் தானே யாகிப் பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப் பால்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக் கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக் கடலாகி மலையாகிக் கழியு மாகி எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
|
6
|
மாதா பிதாவாகி மக்க ளாகி மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக் கோதா விரியாய்க் குமரி யாகிக் கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப் போதாய மலர்கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.
|
7
|
ஆவாகி ஆவினில் ஐந்து மாகி அறிவாகி அழலாகி அவியு மாகி நாவாகி நாவுக்கோர் உரையு மாகி நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப் பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப் புக்குளால் வாசமாய் நின்றா னாகித் தேவாகித் தேவர் முதலு மாகிச் செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
|
8
|
நீராகி நீளகலந் தானே யாகி நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப் பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப் பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி ஆரேனுந் தன்னடைந்தோர் தம்மை யெல்லாம் ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம் பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப் பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
|
9
|
மாலாகி நான்முகனாய் மாபூ தமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப் பாலாகி யெண்டிசைக்கும் எல்லை யாகிப் பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப் பூலோக புவலோக சுவலோ கமாய்ப் பூதங்க ளாய்ப்புராணன் தானே யாகி ஏலா தனவெல்லாம் ஏல்விப் பானாய் எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
|
10
|
Go to top |