மாலுலா மனந்தந் தென்கையிற் சங்கம் வவ்வினான் மலைமகள் மதலை மேலுலாந் தேவர் குலமுழு தாளுங் குமரவேள் வள்ளிதன் மணாளன் சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன் என்னும்என் மெல்லியல் இவளே.
|
1
|
இவளைவார் இளமென் கொங்கைபீர் பொங்க எழில்கவர்ந் தான் இளங்காளை கவளமா கரிமேற் கவரிசூழ் குடைக்கீழ்க் கனகக்குன் றெனவருங் கள்வன் திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற குவளைமா மலர்க்கண் நங்கையாள் நயக்குங் குழகன்நல் லழகன்நம் கோவே.
|
2
|
கோவினைப் பவளக் குழமணக் கோலக் குழாங்கள்சூழ் கோழிவெல் கொடியோன் காவனற்சேனை யென்னக்காப் பவன்என் பொன்னைமே கலைகவர் வானே தேவினற் றலைவன் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற தூவிநற் பீலி மாமயி லூருஞ் சுப்பிர மண்ணியன் றானே.
|
3
|
தானமர் பொருது தானவர் சேனை மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன் மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை மறைநிறை சட்டறம் வளரத் தேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற கோனமர் கூத்தன் குலஇளங் களிறென் கொடிக்கிடர் பயப்பதுங் குணமே.
|
4
|
குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை படுமிடர் குறிக்கொளா தழகோ மணமணி மறையோர் வானவர் வையம் உய்யமற் றடியனேன் வாழத் திணமணி மாடத் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன் கணபதி பின்னிளங் கிளையே.
|
5
|
Go to top |
கிளையிளஞ் சேய்அக் கிரிதனைக் கீண்ட ஆண்டகை கேடில்வேற் செல்வன் வளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை கார்நிற மால்திரு மருகன் திளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற முளைஇளங் களிறென் மொய்குழற் சிறுமிக் கருளுங்கொல் முருகவேள் பரிந்தே.
|
6
|
பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன் சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ சுந்தரத் தரசிது என்னத் தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல் மையல்கொண் டையுறும் வகையே.
|
7
|
வகைமிகும் அசுரர் மாளவந் துழிஞை வானமர் விளைத்ததா ளாளன் புகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த பொன்மலை வில்லிதன் புதல்வன் திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்கென் துடியிடை மடல்தொடங் கினளே.
|
8
|
தொடங்கினள் மடல் என் றணிமுடித் தொங்கற் புறஇத ழாகிலும் அருளான் இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன் மறத்தொழில் வார்த்தையும் உடையன் திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற மடங்கலை மலரும் பன்னிரு நயனத் தறுமுகத் தமுதினை மருண்டே.
|
9
|
மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப் பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர் வெருண்டமான் விழியார்க் கருள்செயா விடுமே விடலையே எவர்க்குமெய் யன்பர் தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற குருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக் கண்ணுடைக் கோமளக் கொழுந்தே.
|
10
|
Go to top |
கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத் தூமொழி அமரர்கோ மகனைச் செழுந்திரட் சோதிச் செப்புறைச் சேந்தன் வாய்ந்தசொல் லிவைசுவா மியையே செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற எழுங்கதி ரொளியை ஏத்துவார் கேட்பார் இடர்கெடும் மாலுலா மனமே.
|
11
|