விரும்பி ஊறு விடேல், மட நெஞ்சமே! கரும்பின் ஊறல் கண்டாய், கலந்தார்க்கு அவன்;- இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண்தலை எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
|
1
|
பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன்; பேணு சீர்க் கறங்கு பூதகணம் உடைக் கண்ணுதல்- நறுங்குழல் மடவாளொடு நாள்தொறும் எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
|
2
|
மருந்து, வானவர் தானவர்க்கு இன்சுவை; புரிந்த புன்சடைப் புண்ணியன், கண்ணுதல்- பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும் எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
|
3
|
நிறம் கொள் கண்டத்து நின்மலன்; எம் இறை; மறம் கொள் வேல்கண்ணி வாணுதல் பாகமா, அறம் புரிந்து அருள்செய்த எம் அம்கணன் எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
|
4
|
நறும் பொன்நாள் மலர்க் கொன்றையும் நாகமும் துறும்பு செஞ்சடை, தூ மதி வைத்து, வான் உறும் பொன்மால்வரைப் பேதையோடு ஊர்தொறும் எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.
|
5
|
| Go to top |
கறும்பி ஊர்வன ஐந்து உள, காயத்தில்; திறம்பி ஊர்வன மற்றும் பல உள; குறும்பி ஊர்வது ஓர் கூட்டு அகத்து இட்டு, எனை எறும்பியூர் அரன் செய்த இயற்கையே!
|
6
|
மறந்தும், மற்று இது பேர் இடர்; நாள்தொறும் திறம்பி, நீ நினையேல், மட நெஞ்சமே! புறம் செய் கோலக் குரம்பையில் இட்டு, எனை எறும்பியூர் அரன் செய்த இயற்கையே!
|
7
|
இன்பமும், பிறப்பும்(ம்), இறப்பி(ன்)னொடு, துன்பமும்(ம்) உடனே வைத்த சோதியான் அன்பனே, அரனே! என்று அரற்றுவார்க்கு இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே.
|
8
|
கண் நிறைந்த கன பவளத்திரள்; விண் நிறைந்த விரி சுடர்ச் சோதியான்; உள்-நிறைந்து, உருஆய், உயிர் ஆயவன் எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே.
|
9
|
நிறம் கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும், நறுங்குழல் மடவாள் நடுக்கு எய்திட, மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான் எறும்பியூர் மலை எம் இறை; காண்மினே!
|
10
|
| Go to top |