சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
5.074   திருநாவுக்கரசர்   தேவாரம்   விரும்பி ஊறு விடேல், மட
பண் - திருக்குறுந்தொகை   (திருவெறும்பூர் எறும்பீசுவரர் நறுங்குழல்நாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=7eauDoQUDPk
6.091   திருநாவுக்கரசர்   தேவாரம்   பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல்
பண் - திருத்தாண்டகம்   (திருவெறும்பூர் )
Audio: https://www.youtube.com/watch?v=ZjxhsI_PTcE

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.074   விரும்பி ஊறு விடேல், மட  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவெறும்பூர் ; (திருத்தலம் அருள்தரு நறுங்குழல்நாயகியம்மை உடனுறை அருள்மிகு எறும்பீசுவரர் திருவடிகள் போற்றி )
விரும்பி ஊறு விடேல், மட நெஞ்சமே!
கரும்பின் ஊறல் கண்டாய், கலந்தார்க்கு அவன்;-
இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண்தலை
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

[1]
பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன்; பேணு சீர்க்
கறங்கு பூதகணம் உடைக் கண்ணுதல்-
நறுங்குழல் மடவாளொடு நாள்தொறும்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

[2]
மருந்து, வானவர் தானவர்க்கு இன்சுவை;
புரிந்த புன்சடைப் புண்ணியன், கண்ணுதல்-
பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

[3]
நிறம் கொள் கண்டத்து நின்மலன்; எம் இறை;
மறம் கொள் வேல்கண்ணி வாணுதல் பாகமா,
அறம் புரிந்து அருள்செய்த எம் அம்கணன்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

[4]
நறும் பொன்நாள் மலர்க் கொன்றையும் நாகமும்
துறும்பு செஞ்சடை, தூ மதி வைத்து, வான்
உறும் பொன்மால்வரைப் பேதையோடு ஊர்தொறும்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

[5]
கறும்பி ஊர்வன ஐந்து உள, காயத்தில்;
திறம்பி ஊர்வன மற்றும் பல உள;
குறும்பி ஊர்வது ஓர் கூட்டு அகத்து இட்டு, எனை
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே!

[6]
மறந்தும், மற்று இது பேர் இடர்; நாள்தொறும்
திறம்பி, நீ நினையேல், மட நெஞ்சமே!
புறம் செய் கோலக் குரம்பையில் இட்டு, எனை
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே!

[7]
இன்பமும், பிறப்பும்(ம்), இறப்பி(ன்)னொடு,
துன்பமும்(ம்) உடனே வைத்த சோதியான்
அன்பனே, அரனே! என்று அரற்றுவார்க்கு
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே.

[8]
கண் நிறைந்த கன பவளத்திரள்;
விண் நிறைந்த விரி சுடர்ச் சோதியான்;
உள்-நிறைந்து, உருஆய், உயிர் ஆயவன்
எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே.

[9]
நிறம் கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும்,
நறுங்குழல் மடவாள் நடுக்கு எய்திட,
மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான்
எறும்பியூர் மலை எம் இறை; காண்மினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.091   பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவெறும்பூர் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல் மாட்டேன்; எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய-
தன்னையும் தன் திறத்து அறியாப் பொறி இலேனைத் தன் திறமும் அறிவித்து, நெறியும் காட்டி,
அன்னையையும் அத்தனையும் போல, அன்பு ஆய் அடைந்தேனைத் தொடர்ந்து, என்னை ஆளாக் கொண்ட
தென் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.

[1]
பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை, பசுபதியை, பாசுபத வேடத்தானை,
விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை, வேதியனை, விண்ணவனை, மேவி வையம்
அளந்தவனை, நான்முகனை, அல்லல் தீர்க்கும் அருமருந்தை, ஆம் ஆறு அறிந்து என் உள்ளம்
தெளிந்து எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.

[2]
கருவை; என் தன் மனத்து இருந்த கருத்தை; ஞானக் கடுஞ்சுடரை; படிந்து கிடந்து அமரர் ஏத்தும்
உருவை; அண்டத்து ஒரு முதலை; ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடு ஆய் நின்ற,
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த, மயானத்து, மாசிலா மணியை; வாசத்
திரு எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை; செழுஞ்சுடரை; சென்று அடையப் பெற்றேன், நானே.

[3]
பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை, பரிந்து தன்னைப்
புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை, தேனை,   புண்ணியனை, புவனி அது முழுதும் போத
உமிழும் அம் பொன் குன்றத்தை, முத்தின் தூணை, உமையவள் தம் பெருமானை, இமையோர் ஏத்தும்
திகழ் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.

[4]
பாரிடங்கள் உடன் பாடப் பயின்று நட்டம் பயில்வானை, அயில்வாய சூலம் ஏந்தி
நேரிடும் போர் மிக வல்ல நிமலன் தன்னை, நின்மலனை, அம் மலர் கொண்ட (அ)அயனும் மாலும்
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை, நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும்
சீர் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.

[5]
கார் முகில் ஆய்ப் பொழிவானை, பொழிந்த முந்நீர் கரப்பானை, கடிய நடை விடை ஒன்று ஏறி
ஊர் பலவும் திரிவானை, ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு
பேர் எழுத்து ஒன்று உடையானை, பிரமனோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும்
சீர் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.

[6]
நீள் நிலமும், அம் தீயும், நீரும், மற்றை நெறி இலங்கும் மிகு காலும், ஆகாச(ம்)மும்,
வாள் நிலவு தாரகையும், மண்ணும், விண்ணும், மன் உயிரும், என் உயிரும், தான் ஆம் செம்பொன்
ஆணி! என்றும், அஞ்சன மாமலையே! என்றும், அம் பவளத்திரள்! என்றும், அறிந்தோர் ஏத்தும்
சேண் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை; செழுஞ்சுடரை; சென்று அடையப் பெற்றேன், நானே.

[7]
அறம் தெரியா, ஊத்தைவாய், அறிவு இல் சிந்தை ஆரம்பக் குண்டரோடு, அயர்த்து நாளும்
மறந்தும் அரன் திருவடிகள் நினைய மாட்டா மதி இலியேன் வாழ்வு எல்லாம் வாளா; மண்மேல்
பிறந்த நாள் நாள் அல்ல, வாளா; ஈசன் பேர் பிதற்றிச் சீர் அடிமைத் திறத்து உள் அன்பு
செறிந்து எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை,  செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.

[8]
அறிவு இலங்கு மனத்தானை, அறிவார்க்கு அன்றி அறியாதார் தம் திறத்து ஒன்று அறியாதானை,
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை, பொரு திரைவாய் நஞ்சம் உண்ட
குறி இலங்கு மிடற்றானை, மடல்-தேன் கொன்றைச் சடையானை, மடைதோறும் கமலம் மென் பூச்
செறி எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.

[9]
அருந்தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி, அடல் அரக்கன் தடவரையை எடுத்தான் திண்தோள்
முரிந்து, நெரிந்து, அழிந்து, பாதாளம் உற்று, முன் கை நரம்பினை எடுத்துக் கீதம் பாட,
இருந்தவனை; ஏழ் உலகும் ஆக்கினானை; எம்மானை; கைம்மாவின் உரிவை போர்த்த,
திருந்து எறும்பியூர் மலைமேல், மாணிக்கத்தை; செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list