சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.107
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விருது குன்ற, மாமேரு வில், பண் - நட்டராகம் (திருக்கேதீச்சரம் கேதீச்சுவரர் கௌரிநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=lGhLAa2QCPA |
7.080
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நத்தார் புடை ஞானன்; பசு பண் - நட்டபாடை (திருக்கேதீச்சரம் கேதீசுவரர் கௌரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Gfng394m-KU |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.107  
விருது குன்ற, மாமேரு வில்,
பண் - நட்டராகம் (திருத்தலம் திருக்கேதீச்சரம் ; (திருத்தலம் அருள்தரு கௌரிநாயகியம்மை உடனுறை அருள்மிகு கேதீச்சுவரர் திருவடிகள் போற்றி )
விருது குன்ற, மாமேரு வில், நாண் அரவா, அனல் எரி அம்பா, பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி எந்நாளும் கருதுகின்ற ஊர் கனைகடல் கடி கமழ் பொழில் அணி மாதோட்டம், கருத நின்ற கேதீச்சுரம் கைதொழ, கடுவினை அடையாவே. | [1] |
பாடல் வீணையர், பல பல சரிதையர், எருது உகைத்து அரு நட்டம் ஆடல் பேணுவர், அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு இருள் கண்டத்தர், ஈடம் ஆவது இருங்கடல் கரையினில் எழில் திகழ் மாதோட்டம், கேடு இலாத கேதீச்சுரம் கைதொழ, கெடும், இடர் வினைதானே. | [2] |
பெண் ஒர் பாகத்தர், பிறை தவழ் சடையினர், அறை கழல் சிலம்பு ஆர்க்கச் சுண்ணம் ஆதரித்து ஆடுவர், பாடுவர், அகம்தொறும் இடு பிச்சைக்கு உண்ணல் ஆவது ஓர் இச்சையின் உழல்பவர், உயர்தரு மாதோட்டத்து, அண்ணல், நண்ணு கேதீச்சுரம் அடைபவர்க்கு அருவினை அடையாவே. | [3] |
பொடி கொள் மேனியர், புலி அதள் அரையினர், விரிதரு கரத்து ஏந்தும் வடி கொள் மூ இலை வேலினர், நூலினர், மறிகடல் மாதோட்டத்து அடிகள், ஆதரித்து இருந்த கேதீச்சுரம் பரிந்த சிந்தையர் ஆகி, முடிகள் சாய்த்து, அடி பேண வல்லார் தம்மேல் மொய்த்து எழும் வினை போமே. | [4] |
நல்லர், ஆற்றவும் ஞானம் நன்கு உடையர் தம் அடைந்தவர்க்கு அருள் ஈய வல்லர், பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர், மலி கடல் மாதோட்டத்து எல்லை இல் புகழ் எந்தை, கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து ஏத்தி, அல்லல் ஆசு அறுத்து, அரன் அடி இணை தொழும் அன்பர் ஆம் அடியாரே. | [5] |
பேழை வார்சடைப் பெருந் திருமகள் தனைப் பொருந்த வைத்து, ஒருபாகம் மாழை அம் கயல் கண்ணிபால் அருளிய பொருளினர், குடிவாழ்க்கை வாழை அம்பொழில் மந்திகள் களிப்பு உற மருவிய மாதோட்ட, கேழல் வெண்மருப்பு அணிந்த நீள் மார்பர், கேதீச்சுரம் பிரியாரே. | [6] |
பண்டு நால்வருக்கு அறம் உரைத்து அருளிப் பல் உலகினில் உயிர் வாழ்க்கை கண்ட நாதனார், கடலிடம் கைதொழ, காதலித்து உறை கோயில் வண்டு பண் செயும் மா மலர்ப்பொழில் மஞ்ஞை நடம் இடு மாதோட்டம், தொண்டர் நாள்தொறும் துதிசெய, அருள் செய் கேதீச்சுரம் அதுதானே. | [7] |
தென் இலங்கையர் குலபதி, மலை நலிந்து எடுத்தவன், முடி திண்தோள தன் நலம் கெட அடர்த்து, அவற்கு அருள் செய்த தலைவனார் கடல்வாய் அப் பொன் இலங்கிய முத்து மா மணிகளும் பொருந்திய மாதோட்டத்து, உன்னி அன்பொடும் அடியவர் இறைஞ்சு கேதீச்சுரத்து உள்ளாரே. | [8] |
பூ உளானும் அப் பொரு கடல் வண்ணனும், புவி இடந்து எழுந்து ஓடி, மேவி நாடி, நுன் அடி இணை காண்கிலா வித்தகம் என் ஆகும்? மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்நகர் மன்னி, தேவி தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த எம்பெருமானே! | [9] |
புத்தராய்ச் சில புனை துகில் உடையவர், புறன் உரைச் சமண் ஆதர், எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்மின்! மத்தயானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர், மாதோட்டத்து அத்தர், மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம் அடைமி(ன்)னே! | [10] |
மாடு எலாம் மணமுரசு எனக் கடலினது ஒலி கவர் மாதோட்டத்து ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சுரத்து அடிகளை, அணி காழி நாடு உளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலைப் பாடல் ஆயின பாடுமின், பத்தர்காள்! பரகதி பெறல் ஆமே. | [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.080  
நத்தார் புடை ஞானன்; பசு
பண் - நட்டபாடை (திருத்தலம் திருக்கேதீச்சரம் ; (திருத்தலம் அருள்தரு கௌரியம்மை உடனுறை அருள்மிகு கேதீசுவரர் திருவடிகள் போற்றி )
நத்தார் புடை ஞானன்; பசு ஏறிந்(ன்); நனை கவுள் வாய்ப் மத்தம் மத யானை உரி போர்த்த மழுவாளன்; பத்து ஆகிய தொண்டர் தொழு, பாலாவியின் கரைமேல், செத்தார் எலும்பு அணிவான்-திருக்கேதீச்சுரத்தானே. | [1] |
சுடுவார் பொடி-நீறும், நல துண்டப் பிறை, கீளும், கடம் ஆர் களியானை உரி, அணிந்த(க்) கறைக் கண்டன்; பட ஏர் இடை மடவாளொடு, பாலாவியின் கரை மேல்- திடமா உறைகின்றான்-திருக்கேதீச்சுரத்தானே. | [2] |
அங்கம் மொழி அன்னார் அவர், அமரர், தொழுது ஏத்த, வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்நகரில் பங்கம் செய்த பிறை சூடினன்; பாலாவியின் கரைமேல்- செங்கண்(ண்) அரவு அசைத்தான் திருக்கேதீச்சுரத்தானே. | [3] |
கரியக் கறைக்கண்டன்(ன்); நல கண்மேல் ஒரு கண்ணான்; வரிய சிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நன் நகருள் பரிய திரை எறியா வரு பாலாவியின் கரைமேல்- தெரியும் மறை வல்லான்திருக்கேதீச்சுரத்தானே. | [4] |
அங்கத்து உறு நோய்கள்(ள்) அடியார் மேல் ஒழித்து அருளி வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்நகரில் பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல்- தெங்கு அம்பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சுரத்தானே. | [5] |
வெய்ய வினை ஆய அடியார்மேல் ஒழித்துஅருளி வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்நகரில பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் செய்ய சடை முடியான்-திருக்கேதீச்சுரத்தானே. | [6] |
ஊனத்து உறு நோய்கள்(ள்) அடியார் மேல் ஒழித்து அருளி, வால் நத்து உறு மலியும் கடல் மாதோட்ட நன் நகரில் பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரைமேல் ஏனத்து எயிறு அணிந்தான் திருக்கேதீச்சுரத்தானே. | [7] |
அட்டன்(ந்) அழகு ஆக (வ்) அரைதன் மேல் அரவு ஆர்த்து மட்டு உண்டு வண்டு ஆலும் பொழில் மாதோட்ட நன்நகரில் பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரைமேல சிட்டன் நமை ஆள்வான் திருக்கேதீச்சுரத்தானே. | [8] |
மூவர் என, இருவர் என, முக்கண் உடை மூர்த்தி; மா இன் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன்நகரில் பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல்- தேவன்; எனை ஆள்வான் திருக்கேதீச்சுரத்தானே. | [9] |
கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நன் நகருள் சிறை ஆர் பொழில் வண்டு யாழ் செயும் கேதீச்சுரத்தானை மறை ஆர் புகழ் ஊரன்(ந்)-அடித் தொண்டன்(ந்)-உரை செய்த குறையாத் தமிழ்பத்தும் சொலக் கூடா, கொடுவினையே. | [10] |