சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.062
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் பொலி நெற்றியினான், திகழ் பண் - பஞ்சமம் (திருப்பனந்தாள் சடையப்பஈசுவரர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=3JbxFHtr2P8 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.062  
கண் பொலி நெற்றியினான், திகழ்
பண் - பஞ்சமம் (திருத்தலம் திருப்பனந்தாள் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு சடையப்பஈசுவரர் திருவடிகள் போற்றி )
கண் பொலி நெற்றியினான், திகழ் கையில் ஓர் வெண்மழுவான், பெண் புணர் கூறு உடையான், மிகு பீடு உடை மால்விடையான், விண் பொலி மா மதி சேர்தரு செஞ்சடை வேதியன், ஊர் தண் பொழில் சூழ் பனந்தாள் திருத் தாடகையீச்சுரமே. | [1] |
விரித்தவன், நால்மறையை; மிக்க விண்ணவர் வந்து இறைஞ்ச எரித்தவன், முப்புரங்கள்(ள்); இயல் ஏழ் உலகில் உயிரும் பிரித்தவன்; செஞ்சடைமேல் நிறை பேர் ஒலி வெள்ளம் தன்னைத் தரித்தவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே. | [2] |
உடுத்தவன், மான் உரி-தோல்; கழல் உள்க வல்லார் வினைகள் கெடுத்து அருள்செய்ய வல்லான்; கிளர் கீதம் ஓர் நால்மறையான்; மடுத்தவன். நஞ்சு அமுதா; மிக்க மா தவர் வேள்வியை முன் தடுத்தவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே. | [3] |
சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும் பாழ்பட வேண்டுதிரேல், மிக ஏத்துமின்-பாய்புனலும், போழ் இளவெண்மதியும்(ம்), அனல் பொங்கு அரவும், புனைந்த தாழ்சடையான் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே! | [4] |
விடம் படு கண்டத்தினான், இருள் வெள்வளை மங்கையொடும் நடம் புரி கொள்கையினான் அவன், எம் இறை, சேரும் இடம் படம் புரி நாகமொடு திரை பல்மணியும் கொணரும் தடம் புனல் சூழ் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே. | [5] |
விடை உயர் வெல்கொடியான்; அடி விண்ணொடு மண்ணும் எல்லாம் புடைபட ஆடவல்லான்; மிகு பூதம் ஆர் பல் படையான்; தொடை நவில் கொன்றையொடு, வன்னி, துன் எருக்கும், அணிந்த சடையவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே. | [6] |
மலையவன் முன் பயந்த மடமாதை ஓர் கூறு உடையான்; சிலை மலி வெங்கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான்; அலை மலி தண்புனலும், மதி, ஆடு அரவும்(ம்), அணிந்த தலையவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே. | [7] |
செற்று, அரக்கன் வலியை, திருமெல்விரலால் அடர்த்து முற்றும் வெண் நீறு அணிந்த திருமேனியன்; மும்மையினான்; புற்று அரவம், புலியின்(ன்) உரி-தோலொடு, கோவணமும், தற்றவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே. | [8] |
வில் மலை, நாண் அரவம், மிகு வெங்கனல் அம்பு, அதனால், புன்மை செய் தானவர் தம் புரம் பொன்றுவித்தான்; புனிதன்; நல் மலர்மேல் அயனும், நண்ணு நாரணனும்(ம்), அறியாத் தன்மையன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே. | [9] |
ஆதர் சமணரொடும்(ம்), அடை ஐ(ந்)துகில் போர்த்து உழலும் நீதர், உரைக்கும் மொழி அவை கொள்ளன்மின்! நின்மலன் ஊர் போது அவிழ் பொய்கைதனுள்-திகழ் புள் இரிய, பொழில்வாய்த் தாது அவிழும் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே. | [10] |
தண்வயல் சூழ் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரத்துக் கண் அயலே பிறையான் அவன் தன்னை, முன் காழியர் கோன்- நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன்-நல்ல பண் இயல் பாடல் வல்லார் அவர்தம் வினை பற்று அறுமே. | [11] |