சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.088   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருமருகல் - திருக்குறுந்தொகை அருள்தரு வண்டுவார்குழலி உடனுறை அருள்மிகு மாணிக்கவண்ணர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=ya_VWVJgL_Y   Add audio link Add Audio

பெருகல் ஆம், தவம்; பேதைமை தீரல் ஆம்;
திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம்;
பருகல் ஆம், பரம் ஆயது ஓர் ஆனந்தம்-
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.

1
மருகல் இறைவன் திருவடி வாழ்த்தி வணங்கினால் தவம் பெருகலாம் ; அறியாமை தீரலாம் ; மாறுபட்டதாகிய சிந்தை திருத்தலாம் ; கடவுண்மயமாகிய ஒப்பற்ற பேரானந்தத்தைப் பருகலாம் .

பாடம் கொள் பனுவல்-திறம் கற்றுப் போய்,
நாடு அங்கு உள்ளன தட்டிய நாண் இலீர்!
மாடம் சூழ் மருகல் பெருமான் திரு
வேடம் கைதொழ, வீடு எளிது ஆகுமே.

2
பாடங்கொண்ட நூல் திறங்களையெல்லாம் கற்றுப்போய் நாட்டில் உள்ளன எல்லாம் பொருந்திய நாணமற்றீரே ! மாடங்கள் சூழ்ந்த மருகற் பெருமானின் திருவேடத்தைக் கைகளால் தொழுதால் வீட்டுலகமும் உமக்கு எளிதாகும் .

சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை-
அனைத்தும் நீங்கி நின்று, ஆதரவு ஆய், மிக
மனத்தினால் மருகல் பெருமான் திறம்
நினைப்பினார்க்கு இல்லை, நீள் நில வாழ்க்கையே.

3
கோபத்தினால் வருகின்ற செய்யப்படுவதான தொழில்களாகிய பிற தீச்செயல்கள் அனைத்தையும் நீங்கி நின்று ஆதரவாகி உள்ளத்தினால் மருகல் பெருமானாகிய இறைவன் திறத்தை நினைப்பவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை .

ஓது பைங்கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி,
பாதுகாத்துப் பலபல கற்பித்து,
மாதுதான், மருகல் பெருமானுக்குத்
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.

4
இப்பெண் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைக்கு ஒள்ளிய பால் அமுது ஊட்டிப் பின் அதனைப் பாதுகாத்துப் பலபல வார்த்தைகளை அதற்குக் கற்பித்து மருகற் பெருமானுக்குத் தூது சொல்லிவிடத் தொடங்குகின்றாள் .

இன்ன ஆறு என்பது உண்டு அறியேன்; இன்று
துன்னு கைவளை சோர, கண் நீர் மல்கும்;
மன்னு தென் மருகல் பெருமான் திறம்
உன்னி, ஒண்கொடி உள்ளம் உருகுமே.

5
நிலைபெற்ற அழகிய மருகல் இறைவன் திறமே நினைந்து இப்பெண் கொடியாளாகிய தலைவி உள்ளம் உருகுகின்றாள் ; நெருங்கிய கைவளைகள் சோர நின்று கண்ணீர் மல்குகின்றாள் ; இதனைத் தீர்ப்பது இன்ன வழி உண்டு என்பது அறியேனாயினேன் யான் .
Go to top

சங்கு சோர, கலையும் சரியவே,
மங்கைதான், மருகல் பெருமான் வரும்
அங்கவீதி அருகு அணையா நிற்கும்;
நங்கைமீர்! இதற்கு என் செய்கேன், நாளுமே?

6
பெண்களே ! தன் சங்கு வளையல்கள் நெகிழவும் , உடை சரியவும் இம்மங்கைதான் , மருகல் இறைவன் திருவீதியுலா வருகின்ற அங்க வீதியின் அருகு நாளும் அணைந்து நிற்பாள் ; நான் இதற்கு என்னசெய்வேன் ?

காட்சி பெற்றிலள் ஆகிலும், காதலே
மீட்சி ஒன்று அறியாது மிகுவதே?
மாட்சி ஆர் மருகல் பெருமானுக்குத்
தாட்சி சால உண்டாகும்!-என் தையலே.

7
என் பெண் மாட்சிகள் நிறைந்த மருகற்பெரு மானுக்கு மனம் தாழும் விருப்பம் மிகவும் உண்டாயினள் ; அவனைக் காணும் காட்சியைப் பெற்றிலள் ஆயினும் காதலினின்று மீளுகைக்கு ஒன்றும் அறியாதவள் ஆகி அவ்விருப்பமே மிகுந்தது .

நீடு நெஞ்சுள் நினைந்து, கண் நீர் மல்கும்,
ஓடும் மாலினோடு, ஒண் கொடிமாதராள்,
மாடம் நீள் மருகல் பெருமான் வரில்
கூடு, நீ! என்று கூடல் இழைக்குமே.

8
நெஞ்சுக்குள் நீள நினைந்து கண்ணீர் மல்கி ஓடும் மயக்கத்தினோடு இவ்வொண் தொடியணிந்த பெண் , மாடங்கள் நீண்டுயர்ந்த மருகல் இறைவன் வரின் நீ கூடு என்று கூடல் இழைத்து வருந்துவாள் .

கந்தவார் குழல் கட்டிலள், காரிகை
அந்தி, மால் விடையோடும் அன்பு ஆய் மிக
வந்திடாய், மருகல் பெருமான்! என்று
சிந்தைசெய்து திகைத்திடும்; காண்மினே!

9
மணம் வீசும் நீண்ட கூந்தலை முடியாதவளாய் இப்பெண் , மால்விடையோடும் மிக்க அன்பாய் ` மருகற்பெருமானே ! வந்திடாய் !` என்று சிந்தித்து வாராமையாற் பின்னும் திகைப்பாள் ; காண்பீராக .

ஆதி மாமலை அன்று எடுத்தான் இற்று,
சோதி! என்றலும், தொல் அருள் செய்திடும்
ஆதியான், மருகல் பெருமான், திறம்
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.

10
ஆதியிற்றோன்றிய திருக்கயிலாயத் திரு மலையினை அன்று எடுத்தவனாகிய இராவணன் தலை இற்றுச் ` சோதியே ` என்று கூறுதலும் , பழைய அருள் புரிந்திடும் ஆதியானாகிய மருகற்பெருமான் திறத்தையே ஓதி வாழ்பவர் தேவர்க்கும் தேவராவர் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமருகல்
2.018   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சடையாய்! எனுமால்; சரண் நீ!
Tune - இந்தளம்   (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)
5.088   திருநாவுக்கரசர்   தேவாரம்   பெருகல் ஆம், தவம்; பேதைமை
Tune - திருக்குறுந்தொகை   (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)

This page was last modified on Thu, 11 Dec 2025 05:33:28 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org