முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா விளம்பிறையன் ஒற்றைப் படவரவ மதுகொண் டரைக்கணிந்தான் செற்றமில் சீரானைத் திருவாப்ப னூரானைப் பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
|
1
|
குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர் விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின் அரவ மணிந்தானை யணியாப்ப னூரானைப் பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
|
2
|
முருகு விரிகுழலார் மனங்கொ ளநங்கனைமுன் பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின் அரவ மணிந்தானை யணியாப்ப னூரானைப் பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
|
3
|
பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில் துணியி னுடைதாழச் சுடரேந்தி யாடுவான் அணியும் புனலானை யணியாப்ப னூரானைப் பணியு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
|
4
|
தகர மணியருவித் தடமால் வரைசிலையா நகர மொருமூன்று நலங்குன்ற வென்றுகந்தான் அகர முதலானை யணியாப்ப னூரானைப் பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
|
5
|
Go to top |
ஓடுந் திரிபுரங்க ளுடனே யுலந்தவியக் காட திடமாகக் கனல்கொண்டு நின்றிரவில் ஆடுந் தொழிலானை யணியாப்ப னூரானைப் பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
|
6
|
இயலும் விடையேறி யெரிகொண் மழுவீசிக் கயலி னிணைக்கண்ணா ளொருபாற் கலந்தாட இயலு மிசையானை யெழிலாப்ப னூரானைப் பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
|
7
|
கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான் உருக்கு மடியவரை யொளிவெண் பிறைசூடி அரக்கன் றிறலழித்தா னணியாப்ப னூரானைப் பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
|
8
|
கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும் அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல் எண்ணில் வினைகளைவா னெழிலாப்ப னூரானைப் பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே.
|
9
|
செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள் பொய்யர் புறங்கூறப் புரிந்த வடியாரை ஐய மகற்றுவா னணியாப்ப னூரானைப் பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே.
|
10
|
Go to top |
அந்தண் புனல்வைகை யணியாப்ப னூர்மேய சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை நந்தி யடிபரவு நலஞான சம்பந்தன் சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே.
|
11
|