கடலக மேழி னோடும் பவனமுங் கலந்த விண்ணும் உடலகத் துயிரும் பாரு மொள்ளழ லாகி நின்று தடமலர்க் கந்த மாலை தண்மதி பகலு மாகி மடலவிழ் கொன்றை சூடி மன்னுமாப் பாடி யாரே.
|
1
|
ஆதியு மறிவு மாகி யறிவினுட் செறிவு மாகிச் சோதியுட் சுடரு மாகித் தூநெறிக் கொருவ னாகிப் பாதியிற் பெண்ணு மாகிப் பரவுவார் பாங்க ராகி வேதியர் வாழுஞ் சேய்ஞல் விரும்புமாப் பாடி யாரே.
|
2
|
எண்ணுடை யிருக்கு மாகி யிருக்கினுட் பொருளு மாகிப் பண்ணொடு பாட றன்னைப் பரவுவார் பாங்க ராகிக் கண்ணொரு நெற்றி யாகிக் கருதுவார் கருத லாகாப் பெண்ணொரு பாக மாகிப் பேணுமாப் பாடி யாரே.
|
3
|
அண்டமா ரமரர் கோமா னாதியெம் மண்ணல் பாதம் கொண்டவன் குறிப்பி னாலே கூப்பினான் றாப ரத்தைக் கண்டவன் றாதை பாய்வான் காலற வெறியக் கண்டு சண்டியார்க் கருள்கள் செய்த தலைவராப் பாடி யாரே.
|
4
|
சிந்தையுந் தெளிவு மாகித் தெளிவினுட் சிவமு மாகி வந்தநற் பயனு மாகி வாணுதல் பாக மாகி மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித் தென்கரைமேன் மன்னி அந்தமோ டளவி லாத வடிகளாப் பாடி யாரே.
|
5
|
Go to top |
வன்னிவா ளரவு மத்த மதியமு மாறுஞ் சூடி மின்னிய வுருவாஞ் சோதி மெய்ப்பொருட் பயனு மாகிக் கன்னியோர் பாக மாகிக் கருதுவார் கருத்து மாகி இன்னிசை தொண்டர் பாட விருந்தவாப் பாடி யாரே.
|
6
|
உள்ளுமாய்ப் புறமு மாகி யுருவுமா யருவு மாகி வெள்ளமாய்க் கரையு மாகி விரிகதிர் ஞாயி றாகிக் கள்ளமாய்க் கள்ளத் துள்ளார் கருத்துமா யருத்த மாகி அள்ளுவார்க் கள்ளல் செய்திட் டிருந்தவாப் பாடி யாரே.
|
7
|
மயக்கமாய்த் தெளிவு மாகி மால்வரை வளியு மாகித் தியக்கமா யொருக்க மாகிச் சிந்தையு ளொன்றி நின்று இயக்கமா யிறுதி யாகி யெண்டிசைக் கிறைவ ராகி அயக்கமா யடக்க மாய வைவராப் பாடி யாரே.
|
8
|
ஆரழ லுருவ மாகி யண்டமேழ் கடந்த வெந்தை பேரொளி யுருவி னானைப் பிரமனு மாலுங் காணாச் சீரவை பரவி யேத்திச் சென்றடி வணங்கு வார்க்குப் பேரரு ளருளிச் செய்வார் பேணுமாப் பாடி யாரே.
|
9
|
திண்டிற லரக்க னோடிச் சீகயி லாயந் தன்னை எண்டிற லிலனு மாகி யெடுத்தலு மேழை யஞ்ச விண்டிறல் நெரிய வூன்றி மிகக்கடுத் தலறி வீழப் பண்டிறல் கேட் டுகந்த பரமராப் பாடி யாரே.
|
10
|
Go to top |