வானவன்காண் வானவர்க்கு மேலா னான்காண் வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண் ஆனைந்தும் ஆடி னான்காண் ஐயன்காண் கையிலனல் ஏந்தி யாடும் கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண் கருதுவார் இதயத்துக் கமலத் தூறும் தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண் சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.
|
1
|
நக்கன்காண் நக்கரவம் அரையி லார்த்த நாதன்காண் பூதகண மாட ஆடும் சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண் துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வதாகும் பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற்றான்காண் புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற திக்கன்காண் செக்கரது திகழு மேனிச் சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.
|
2
|
வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண் மலரவன்மால் காண்பரிய மைந்தன் தான்காண் கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண் கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண் அம்பர்நகர்ப் பெருங்கோயில் அமர்கின் றான்காண் அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண் செம்பொனெனத் திகழ்கின்ற வுருவத் தான்காண் சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.
|
3
|
பித்தன்காண் தக்கன்தன் வேள்வி யெல்லாம் பீடழியச் சாடி யருள்கள் செய்த முத்தன்காண் முத்தீயு மாயினான் காண் முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க அத்தன்காண் புத்தூரில் அமர்ந்தான் தான்காண் அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட சித்தன்காண் சித்தீச் சரத்தான் தான்காண் சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.
|
4
|
தூயவன்காண் நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண் தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண் சிறுமான்கொள் செங்கையெம் பெருமான்தான் காண் ஆயவன்காண் ஆரூரி லம்மான் தான்காண் அடியார்கட் காரமுத மாயி னான்காண் சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண் சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.
|
5
|
Go to top |
பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண் பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண் நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும் பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றிப் பிரியாது பலநாளும் வழிபட் டேத்தும் சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ் சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.
|
6
|
வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண் வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண் மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண் வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க கையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண் காமனங்கம் பொடிவிழித்த கண்ணி னான்காண் செய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்த சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.
|
7
|
இப்பாடல் கிடைக்கவில்லை.
|
8
|