சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.114
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு பண் - செவ்வழி (திருக்கேதாரம் கேதாரேசுவரர் கௌரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=FNR8RErV8cE |
7.078
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வாழ்வு ஆவது மாயம்(ம்); இது பண் - நட்டபாடை (திருக்கேதாரம் கேதாரேசுவரர் கேதாரேசுவரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=2pgUwFPemjk |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.114  
தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு
பண் - செவ்வழி (திருத்தலம் திருக்கேதாரம் ; (திருத்தலம் அருள்தரு கௌரியம்மை உடனுறை அருள்மிகு கேதாரேசுவரர் திருவடிகள் போற்றி )
தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு ஆர் மலர் இண்டை கட்டி, வழிபாடு செய்யும் இடம் என்பரால் வண்டு பாட, மயில் ஆல, மான் கன்று துள்ள(வ்), வரிக் கெண்டை பாய, சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே. | [1] |
பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்து ஏத்தவே, வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு இடம் தாது விண்ட(ம்), மது உண்டு மிண்டி(வ்) வரு வண்டு இனம் கீதம் பாட(ம்), மடமந்தி கேட்டு உகளும் கேதாரமே. | [2] |
முந்தி வந்து புரோதயம் மூழ்கி(ம்) முனிகள் பலர், எந்தைபெம்மான்! என நின்று இறைஞ்சும் இடம் என்பரால் மந்தி பாய, சரேலச் சொரிந்து(ம்) முரிந்து உக்க பூக் கெந்தம் நாற, கிளரும் சடை எந்தை கேதாரமே. | [3] |
உள்ளம் மிக்கார், குதிரை(ம்) முகத்தார், ஒரு காலர்கள் எள்கல் இல்லா இமையோர்கள், சேரும்(ம்) இடம் என்பரால் பிள்ளை துள்ளிக் கிளை பயில்வ கேட்டு, பிரியாது போய், கிள்ளை, ஏனல் கதிர் கொணர்ந்து வாய்ப் பெய்யும் கேதாரமே. | [4] |
ஊழி ஊழி உணர்வார்கள், வேதத்தின் ஒண் பொருள்களால், வாழி, எந்தை! என வந்து இறைஞ்சும் இடம் என்பரால் மேழித் தாங்கி உழுவார்கள் போல(வ்), விரை தேரிய, கேழல் பூழ்தி, கிளைக்க, மணி சிந்தும் கேதாரமே. | [5] |
நீறு பூசி, நிலத்து உண்டு, நீர் மூழ்கி, நீள் வரைதன் மேல் தேறு சிந்தை உடையார்கள் சேரும்(ம்) இடம் என்பரால் ஏறி மாவின் கனியும் பலாவின்(ன்) இருஞ் சுளைகளும் கீறி, நாளும் முசுக் கிளையொடு உண்டு உகளும் கேதாரமே. | [6] |
மடந்தை பாகத்து அடக்கி(ம்), மறை ஓதி வானோர் தொழ, தொடர்ந்த நம்மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர, கல் அறைகள் மேல் கிடந்த வேங்கை சினமா முகம் செய்யும் கேதாரமே. | [7] |
அரவ முந்நீர் அணி இலங்கைக் கோனை, அருவரைதனால் வெருவ ஊன்றி, விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால் குரவம், கோங்கம், குளிர் பிண்டி, ஞாழல், சுரபுன்னை, மேல் கிரமம் ஆக வரிவண்டு பண் செய்யும் கேதாரமே. | [8] |
ஆழ்ந்து காணார், உயர்ந்து எய்தகில்லார், அலமந்தவர் தாழ்ந்து, தம் தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பரால் வீழ்ந்து செற்று(ந்) நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினைக் கீழ்ந்து சிங்கம் குருகு உண்ண, முத்து உதிரும் கேதாரமே. | [9] |
கடுக்கள் தின்று கழி மீன் கவர்வார்கள், மாசு உடம்பினர், இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால் அடுக்க நின்ற(வ்) அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளைக் கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே. | [10] |
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான், ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை ஆய்ந்து சொன்ன அருந்தமிழ்கள் பத்தும் இசை வல்லவர், வேந்தர் ஆகி உலகு ஆண்டு, வீடுகதி பெறுவரே. | [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.078  
வாழ்வு ஆவது மாயம்(ம்); இது
பண் - நட்டபாடை (திருத்தலம் திருக்கேதாரம் ; (திருத்தலம் அருள்தரு கேதாரேசுவரியம்மை உடனுறை அருள்மிகு கேதாரேசுவரர் திருவடிகள் போற்றி )
வாழ்வு ஆவது மாயம்(ம்); இது மண் ஆவது திண்ணம்; பாழ் போவது பிறவிக் கடல்; பசி, நோய், செய்த பறி தான்; தாழாது அறம் செய்ம்மின்! தடங்கண்ணான் மலரோனும் கீழ் மேல் உற நின்றான் திருக்கேதாரம் எனீரே! | [1] |
பறியே சுமந்து உழல்வீர்; பறி நரி கீறுவது அறியீர்; குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே? அறிவானிலும் அறிவான்-நல நறுநீரொடு, சோறு, கிறி பேசி நின்று இடுவார் தொழு கேதாரம் எனீரே! | [2] |
கொம்பைப் பிடித்து ஒருக்(கு)காலர்கள் இருக்கால் மலர் தூவி, நம்பன் நமை ஆள்வான் என்று, நடுநாளையும் பகலும்; கம்பக் களிற்று இனம் ஆய் நின்று, சுனை நீர்களைத் தூவி, செம்பொன் பொடி சிந்தும் திருக்கேதாரம் எனீரே! | [3] |
உழக்கே உண்டு, படைத்து ஈட்டி வைத்து, இழப்பார்களும், சிலர்கள்; வழக்கே? எனில், பிழைக்கேம் என்பர், மதி மாந்திய மாந்தர்; சழக்கே பறி நிறைப்பாரொடு தவம் ஆவது செயன்மின்! கிழக்கே சலம் இடுவார் தொழு கேதாரம் எனீரே! | [4] |
வாள் ஓடிய தடங்கண்ணியர் வலையில்(ல்) அழுந்தாதே, நாள் ஓடிய நமனார் தமர் நணுகாமுனம் நணுகி, ஆள் ஆய் உய்ம்மின்! அடிகட்கு இடம் அதுவே எனில் இதுவே; கீளோடு அரவு அசைத்தான் இடம் கேதாரம் எனீரே! | [5] |
தளி சாலைகள் தவம் ஆவது, தம்மைப் பெறில் அன்றே? குளியீர், உளம்! குருக்கேத்திரம் கோதாவிரி, குமரி, தெளியீர் உளம்! சீ பர்ப்பதம்; தெற்கு(வ்) வடக்கு ஆக கிளி வாழை ஒண்கனி கீறி உண் கேதாரம் எனீரே! | [6] |
பண்ணின் தமிழ் இசை பாடலின், பழ வேய் முழவு அதிர, கண்ணின்(ன்) ஒளி கனகச்சுனை வயிரம்(ம்) அவை சொரிய, மண் நின்றன மதவேழங்கள் மணி வாரிக் கொண்டு எறிய, கிண்ணென்று இசை முரலும் திருக்கேதாரம் எனீரே! | [7] |
முளைக்கைப் பிடி முகமன் சொலி, முது வேய்களை இறுத்து, துளைக்கைக் களிற்று இனம் ஆய் நின்று சுனை நீர்களைத் தூவி, வளைக்கைப் பொழி மழை கூர்தர, மயில் மான்பிணை நிலத்தைக் கிளைக்க(ம்) மணி சிந்தும் திருக்கேதாரம் எனீரே! | [8] |
பொதியே சுமந்து உழல்வீர்; பொதி அவம் ஆவதும் அறியீர்; மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும், வினையால்; கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க(வ்) வரை அடர்த்துக் கெதி பேறு செய்து இருந்தான் இடம் கேதாரம் எனீரே! | [9] |
நாவின் மிசை அரைய(ன்)னொடு, தமிழ் ஞானசம்பந்தன், யாவர் சிவன் அடியார்களுக்கு, அடியான் அடித்தொண்டன், தேவன் திருக்கேதாரத்தை ஊரன்(ன்) உரை செய்த பாவின் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே. | [10] |