சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.114   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு
பண் - செவ்வழி   (திருக்கேதாரம் கேதாரேசுவரர் கௌரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=FNR8RErV8cE
7.078   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   வாழ்வு ஆவது மாயம்(ம்); இது
பண் - நட்டபாடை   (திருக்கேதாரம் கேதாரேசுவரர் கேதாரேசுவரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=2pgUwFPemjk

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.114   தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு  
பண் - செவ்வழி   (திருத்தலம் திருக்கேதாரம் ; (திருத்தலம் அருள்தரு கௌரியம்மை உடனுறை அருள்மிகு கேதாரேசுவரர் திருவடிகள் போற்றி )
தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு ஆர் மலர்
இண்டை கட்டி, வழிபாடு செய்யும் இடம் என்பரால்
வண்டு பாட, மயில் ஆல, மான் கன்று துள்ள(வ்), வரிக்
கெண்டை பாய, சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே.

[1]
பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்து ஏத்தவே,
வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு
இடம்
தாது விண்ட(ம்), மது உண்டு மிண்டி(வ்) வரு வண்டு இனம்
கீதம் பாட(ம்), மடமந்தி கேட்டு உகளும் கேதாரமே.

[2]
முந்தி வந்து புரோதயம் மூழ்கி(ம்) முனிகள் பலர்,
எந்தைபெம்மான்! என நின்று இறைஞ்சும் இடம்
என்பரால்
மந்தி பாய, சரேலச் சொரிந்து(ம்) முரிந்து உக்க பூக்
கெந்தம் நாற, கிளரும் சடை எந்தை கேதாரமே.

[3]
உள்ளம் மிக்கார், குதிரை(ம்) முகத்தார், ஒரு காலர்கள்
எள்கல் இல்லா இமையோர்கள், சேரும்(ம்) இடம் என்பரால்
பிள்ளை துள்ளிக் கிளை பயில்வ கேட்டு, பிரியாது போய்,
கிள்ளை, ஏனல் கதிர் கொணர்ந்து வாய்ப் பெய்யும்
கேதாரமே.

[4]
ஊழி ஊழி உணர்வார்கள், வேதத்தின் ஒண்
பொருள்களால்,
வாழி, எந்தை! என வந்து இறைஞ்சும் இடம் என்பரால்
மேழித் தாங்கி உழுவார்கள் போல(வ்), விரை தேரிய,
கேழல் பூழ்தி, கிளைக்க, மணி சிந்தும் கேதாரமே.

[5]
நீறு பூசி, நிலத்து உண்டு, நீர் மூழ்கி, நீள் வரைதன் மேல்
தேறு சிந்தை உடையார்கள் சேரும்(ம்) இடம் என்பரால்
ஏறி மாவின் கனியும் பலாவின்(ன்) இருஞ் சுளைகளும்
கீறி, நாளும் முசுக் கிளையொடு உண்டு உகளும்
கேதாரமே.

[6]
மடந்தை பாகத்து அடக்கி(ம்), மறை ஓதி வானோர் தொழ,
தொடர்ந்த நம்மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம்
என்பரால்
உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர, கல்
அறைகள் மேல்
கிடந்த வேங்கை சினமா முகம் செய்யும் கேதாரமே.

[7]
அரவ முந்நீர் அணி இலங்கைக் கோனை, அருவரைதனால்
வெருவ ஊன்றி, விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால்
குரவம், கோங்கம், குளிர் பிண்டி, ஞாழல், சுரபுன்னை,
மேல்
கிரமம் ஆக வரிவண்டு பண் செய்யும் கேதாரமே.

[8]
ஆழ்ந்து காணார், உயர்ந்து எய்தகில்லார், அலமந்தவர்
தாழ்ந்து, தம் தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பரால்
வீழ்ந்து செற்று(ந்) நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண்
மருப்பினைக்
கீழ்ந்து சிங்கம் குருகு உண்ண, முத்து உதிரும் கேதாரமே.

[9]
கடுக்கள் தின்று கழி மீன் கவர்வார்கள், மாசு உடம்பினர்,
இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால்
அடுக்க நின்ற(வ்) அற உரைகள் கேட்டு ஆங்கு அவர்
வினைகளைக்
கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே.

[10]
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான்,
ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்து சொன்ன அருந்தமிழ்கள் பத்தும் இசை வல்லவர்,
வேந்தர் ஆகி உலகு ஆண்டு, வீடுகதி பெறுவரே.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.078   வாழ்வு ஆவது மாயம்(ம்); இது  
பண் - நட்டபாடை   (திருத்தலம் திருக்கேதாரம் ; (திருத்தலம் அருள்தரு கேதாரேசுவரியம்மை உடனுறை அருள்மிகு கேதாரேசுவரர் திருவடிகள் போற்றி )
வாழ்வு ஆவது மாயம்(ம்); இது மண் ஆவது திண்ணம்;
பாழ் போவது பிறவிக் கடல்; பசி, நோய், செய்த பறி தான்;
தாழாது அறம் செய்ம்மின்! தடங்கண்ணான் மலரோனும்
கீழ் மேல் உற நின்றான் திருக்கேதாரம் எனீரே!

[1]
பறியே சுமந்து உழல்வீர்; பறி நரி கீறுவது அறியீர்;
குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே?
அறிவானிலும் அறிவான்-நல நறுநீரொடு, சோறு,
கிறி பேசி நின்று இடுவார் தொழு கேதாரம் எனீரே!

[2]
கொம்பைப் பிடித்து ஒருக்(கு)காலர்கள் இருக்கால் மலர் தூவி,
நம்பன் நமை ஆள்வான் என்று, நடுநாளையும் பகலும்;
கம்பக் களிற்று இனம் ஆய் நின்று, சுனை நீர்களைத் தூவி,
செம்பொன் பொடி சிந்தும் திருக்கேதாரம் எனீரே!

[3]
உழக்கே உண்டு, படைத்து ஈட்டி வைத்து, இழப்பார்களும், சிலர்கள்;
வழக்கே? எனில், பிழைக்கேம் என்பர், மதி மாந்திய மாந்தர்;
சழக்கே பறி நிறைப்பாரொடு தவம் ஆவது செயன்மின்!
கிழக்கே சலம் இடுவார் தொழு கேதாரம் எனீரே!

[4]
வாள் ஓடிய தடங்கண்ணியர் வலையில்(ல்) அழுந்தாதே,
நாள் ஓடிய நமனார் தமர் நணுகாமுனம் நணுகி,
ஆள் ஆய் உய்ம்மின்! அடிகட்கு இடம் அதுவே எனில் இதுவே;
கீளோடு அரவு அசைத்தான் இடம் கேதாரம் எனீரே!

[5]
தளி சாலைகள் தவம் ஆவது, தம்மைப் பெறில் அன்றே?
குளியீர், உளம்! குருக்கேத்திரம் கோதாவிரி, குமரி,
தெளியீர் உளம்! சீ பர்ப்பதம்; தெற்கு(வ்) வடக்கு ஆக
கிளி வாழை ஒண்கனி கீறி உண் கேதாரம் எனீரே!

[6]
பண்ணின் தமிழ் இசை பாடலின், பழ வேய் முழவு அதிர,
கண்ணின்(ன்) ஒளி கனகச்சுனை வயிரம்(ம்) அவை சொரிய,
மண் நின்றன மதவேழங்கள் மணி வாரிக் கொண்டு எறிய,
கிண்ணென்று இசை முரலும் திருக்கேதாரம் எனீரே!

[7]
முளைக்கைப் பிடி முகமன் சொலி, முது வேய்களை இறுத்து,
துளைக்கைக் களிற்று இனம் ஆய் நின்று சுனை நீர்களைத் தூவி,
வளைக்கைப் பொழி மழை கூர்தர, மயில் மான்பிணை நிலத்தைக்
கிளைக்க(ம்) மணி சிந்தும் திருக்கேதாரம் எனீரே!



[8]
பொதியே சுமந்து உழல்வீர்; பொதி அவம் ஆவதும் அறியீர்;
மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும், வினையால்;
கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க(வ்) வரை அடர்த்துக்
கெதி பேறு செய்து இருந்தான் இடம் கேதாரம் எனீரே!

[9]
நாவின் மிசை அரைய(ன்)னொடு, தமிழ் ஞானசம்பந்தன்,
யாவர் சிவன் அடியார்களுக்கு, அடியான் அடித்தொண்டன்,
தேவன் திருக்கேதாரத்தை ஊரன்(ன்) உரை செய்த
பாவின் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list