சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

8.104   மாணிக்க வாசகர்    திருவாசகம்

கோயில் (சிதம்பரம்) - தென் நாடு உடைய சிவனே, போற்றி!
நிலைமண்டில ஆசிரியப்பா
- Hide Meaning   https://sivaya.org/thiruvaasagam/04 Potri Thiruagaval Thiruvasagam.mp3   Add audio link Add Audio

நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
ஈரடி யாலே மூவுல களந்து
நால்திசைமுனிவரும் ஐமுலன் மலரப்
போற்றிச்செய் கதிர்முதித் திருநெடு மாலன்(று)
அடி முடி அரியும் ஆதர வதனிற்

1

கடுமுரண் ஏனம் ஆகி முன்கலந்(து)
ஏழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்(து)
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியுங் காணா மலர் அடி இணைகள்,
வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில்,

2

யானை முதலா எறும்பு ஈறு ஆய,
ஊனம் இல், யோனியின் உள் வினை பிழைத்தும்;
மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து,
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்;
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்;

3

இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்;
மும் மதி தன்னுள் அம் மதம் பிழைத்தும்;
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்;
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்;
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்;

4

ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்;
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்;
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்;
தக்க தச மதி தாயொடு தான் படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்;

5
Go to top

ஆண்டுகள்தோறும் அடைந்த அக் காலை
ஈண்டியும், இருத்தியும், எனைப் பல பிழைத்தும்;
காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:
கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்

6

ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:

7

பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்;
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்;
நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;

8

புல் வரம்பு ஆய பல துறை பிழைத்தும்;
தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி,
முனிவு இலாதது ஓர் பொருள்அது கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின;

9

ஆத்தம் ஆனார் அயலவர் கூடி,
நாத்திகம் பேசி, நாத் தழும்பு ஏறினர்;
சுற்றம் என்னும் தொல் பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர்; பெருகவும்
விரதமே பரம் ஆக, வேதியரும்,

10
Go to top

சரதம் ஆகவே, சாத்திரம் காட்டினர்;
சமய வாதிகள் தம் தம் மதங்களே
அமைவது ஆக, அரற்றி, மலைந்தனர்;
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம், சுழித்து, அடித்து, ஆஅர்த்து,

11

உலோகாயதன் எனும் ஒள் திறல் பாம்பின்
கலா பேதத்த கடு விடம் எய்தி,
அதில் பெரு மாயை எனைப் பல சூழவும்,
தப்பாமே, தாம் பிடித்தது சலியா,
தழல் அது கண்ட மெழுகு அது போல,

12

தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,
கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும்
படியே ஆகி, நல் இடை அறா அன்பின்,
பசு மரத்து ஆணி அறைந்தால் போல,

13

கசிவது பெருகி, கடல் என மறுகி,
அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து,
சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப,
நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை
பூண் அதுவாக, கோணுதல் இன்றி,

14

சதிர் இழந்து, அறி மால் கொண்டு, சாரும்
கதியது பரம அதிசயம் ஆக,
கற்றா மனம் எனக் கதறியும், பதறியும்,
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது,
அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து,

15
Go to top

குருபரன் ஆகி, அருளிய பெருமையை,
சிறுமை என்று இகழாதே, திருவடி இணையை,
பிறிவினை அறியா நிழல் அது போல,
முன் பின் ஆகி, முனியாது, அத் திசை
என்பு நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி,

16

அன்பு எனும் ஆறு கரை அது புரள,
நன் புலன் ஒன்றி, நாத' என்று அரற்றி,
உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்ப,
கர மலர் மொட்டித்து, இருதயம் மலர,
கண் களி கூர, நுண் துளி அரும்ப,

17

சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர்
தாயே ஆகி, வளர்த்தனை போற்றி!
மெய் தரு வேதியன் ஆகி, வினை கெட,
கைதர வல்ல கடவுள், போற்றி!
ஆடக மதுரை அரசே, போற்றி!

18

கூடல் இலங்கு குருமணி, போற்றி!
தென் தில்லை மன்றினுள் ஆடி, போற்றி!
இன்று, எனக்கு ஆர் அமுது ஆனாய், போற்றி!
மூவா நான்மறை முதல்வா, போற்றி!
சே ஆர் வெல் கொடிச் சிவனே, போற்றி!

19

மின் ஆர் உருவ விகிர்தா, போற்றி!
கல் நார் உரித்த கனியே, போற்றி!
காவாய், கனகக் குன்றே, போற்றி!
ஆ! ஆ! என் தனக்கு அருளாய், போற்றி!
படைப்பாய், காப்பாய், துடைப்பாய், போற்றி!

20
Go to top

இடரைக் களையும் எந்தாய், போற்றி!
ஈச, போற்றி! இறைவ, போற்றி!
தேசப் பளிங்கின் திரளே, போற்றி!
அரைசே, போற்றி! அமுதே, போற்றி!
விரை சேர் சரண விகிர்தா, போற்றி!

21

வேதி, போற்றி! விமலா, போற்றி!
ஆதி, போற்றி! அறிவே, போற்றி!
கதியே, போற்றி! கனியே, போற்றி!
நதி சேர் செம் சடை நம்பா, போற்றி!
உடையாய், போற்றி! உணர்வே, போற்றி!

22

கடையேன் அடிமை கண்டாய், போற்றி!
ஐயா, போற்றி! அணுவே, போற்றி!
சைவா, போற்றி! தலைவா, போற்றி!
குறியே, போற்றி! குணமே, போற்றி!
நெறியே, போற்றி! நினைவே, போற்றி!

23

வானோர்க்கு அரிய மருந்தே, போற்றி!
ஏனோர்க்கு எளிய இறைவா, போற்றி!
மூ ஏழ் சுற்றமும் முரண் உறு நரகிடை
ஆழாமே அருள் அரசே, போற்றி!
தோழா, போற்றி! துணைவா, போற்றி!

24

வாழ்வே, போற்றி! என் வைப்பே, போற்றி!
முத்தா போற்றி! முதல்வா, போற்றி!
அத்தா, போற்றி! அரனே, போற்றி!
உரை, உணர்வு, இறந்த ஒருவ, போற்றி!
விரி கடல் உலகின் விளைவே, போற்றி!

25
Go to top

அருமையில் எளிய அழகே, போற்றி!
கரு முகில் ஆகிய கண்ணே, போற்றி!
மன்னிய திருஅருள் மலையே, போற்றி!
என்னையும் ஒருவன் ஆக்கி, இரும் கழல்
சென்னியில் வைத்த சேவக, போற்றி!

26

தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!
அழிவு இலா ஆனந்த வாரி, போற்றி!
அழிவதும், ஆவதும், கடந்தாய், போற்றி!
முழுவதும் இறந்த முதல்வா, போற்றி!
மான் நேர் நோக்கி மணாளா, போற்றி!

27

வானகத்து அமரர் தாயே, போற்றி!
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி!
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி!

28

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!
அளிபவர் உள்ளத்து அமுதே, போற்றி!
கனவிலும் தேவர்க்கு அரியாய், போற்றி!
நனவிலும் நாயேற்கு அருளினை, போற்றி!
இடைமருது உறையும் எந்தாய், போற்றி!

29

சடையிடைக் கங்கை தரித்தாய், போற்றி!
ஆரூர் அமர்ந்த அரசே, போற்றி!
சீர் ஆர் திருவையாறா, போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா, போற்றி!
கண் ஆர் அமுதக் கடலே, போற்றி!

30
Go to top

ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி!
பாகம் பெண் உரு ஆனாய், போற்றி!
பராய்த்துறை மேவிய பரனே, போற்றி!
சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி!
மற்று ஓர் பற்று இங்கு அறியேன், போற்றி!

31

குற்றாலத்து எம் கூத்தா, போற்றி!
கோகழி மேவிய கோவே, போற்றி!
ஈங்கோய்மலை எம் எந்தாய், போற்றி!
பாங்கு ஆர் பழனத்து அழகா, போற்றி!
கடம்பூர் மேவிய விடங்கா, போற்றி!

32

அடைந்தவர்க்கு அருளும் அப்பா, போற்றி!
இத்தி தன்னின் கீழ், இரு மூவர்க்கு,
அத்திக்கு, அருளிய அரசே, போற்றி!
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

33

ஏனக் குருளைக்கு அருளினை, போற்றி!
மானக் கயிலை மலையாய், போற்றி!
அருளிட வேண்டும் அம்மான், போற்றி!
இருள் கெட அருளும் இறைவா, போற்றி!
தளர்ந்தேன், அடியேன், தமியேன், போற்றி!

34

களம் கொளக் கருத அருளாய், போற்றி!
அஞ்சேல்' என்று இங்கு அருளாய், போற்றி!
நஞ்சே அமுதா நயந்தாய், போற்றி!
அத்தா, போற்றி! ஐயா, போற்றி!
நித்தா, போற்றி! நிமலா, போற்றி!

35
Go to top

பத்தா, போற்றி! பவனே, போற்றி!
பெரியாய், போற்றி! பிரானே, போற்றி!
அரியாய், போற்றி! அமலா, போற்றி!
மறையோர் கோல நெறியே, போற்றி!
முறையோ? தரியேன்! முதல்வா, போற்றி!

36

உறவே, போற்றி! உயிரே, போற்றி!
சிறவே, போற்றி! சிவமே, போற்றி!
மஞ்சா, போற்றி! மணாளா, போற்றி!
பஞ்சு ஏர் அடியாள் பங்கா, போற்றி!
அலந்தேன், நாயேன், அடியேன், போற்றி!

37

இலங்கு சுடர் எம் ஈசா, போற்றி!
கவைத்தலை மேவிய கண்ணே, போற்றி!
குவைப்பதி மலைந்த கோவே, போற்றி!
மலை நாடு உடைய மன்னே, போற்றி!
கலை ஆர் அரிகேசரியாய், போற்றி!

38

திருக்கழுக்குன்றில் செல்வா, போற்றி!
பொருப்பு அமர் பூவணத்து அரனே, போற்றி!
அருவமும், உருவமும், ஆனாய், போற்றி!
மருவிய கருணை மலையே, போற்றி!
துரியமும் இறந்த சுடரே, போற்றி!

39

தெரிவு அரிது ஆகிய தெளிவே, போற்றி
தோளா முத்தச் சுடரே, போற்றி!
ஆள் ஆனவர்கட்கு அன்பா, போற்றி!
ஆரா அமுதே, அருளே, போற்றி!
பேர் ஆயிரம் உடைப் பெம்மான், போற்றி!

40
Go to top

தாளி அறுகின் தாராய், போற்றி!
நீள் ஒளி ஆகிய நிருத்தா, போற்றி!
சந்தனச் சாந்தின் சுந்தர, போற்றி!
சிந்தனைக்கு அரிய சிவமே, போற்றி!
மந்திர மா மலை மேயாய், போற்றி!

41

எம் தமை உய்யக் கொள்வாய், போற்றி!
புலி முலை புல்வாய்க்கு அருளினை, போற்றி!
அலை கடல் மீமிசை நடந்தாய், போற்றி!
கருங்குருவிக்கு அன்று அருளினை, போற்றி!
இரும் புலன் புலர இசைந்தனை, போற்றி!

42

படி உறப் பயின்ற பாவக, போற்றி!
அடியொடு, நடு, ஈறு, ஆனாய், போற்றி!
நரகொடு, சுவர்க்கம், நால் நிலம், புகாமல்,
பர கதி பாண்டியற்கு அருளினை, போற்றி!
ஒழிவு அற நிறைந்த ஒருவ, போற்றி!

43

செழு மலர்ச் சிவபுரத்து அரசே, போற்றி!
கழுநீர் மாலைக் கடவுள், போற்றி!
தொழுவார் மையல் துணிப்பாய், போற்றி!
பிழைப்பு, வாய்ப்பு, ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல் மாலை கொண்டருள், போற்றி!

44

புரம் பல எரித்த புராண, போற்றி!
பரம் பரம் சோதிப் பரனே, போற்றி!
போற்றி! போற்றி! புயங்கப் பெருமான்!
போற்றி! போற்றி! புராண காரண!
போற்றி! போற்றி! சய, சய, போற்றி! (225)

45
பிரமன் முதலாகத் தேவர்கள் யாவரும் தொழுது நிற்க, இரண்டு திருவடிகளாலே மூன்று உலகங்களையும் அளந்து, நான்கு திக்கிலுள்ள முனிவர்களும் ஐம்புலன்களும் மகிழும்படி வணங்குகின்ற, ஒளி பொருந்திய திருமுடியையுடைய அழகிய நெடுமால், அந்நாளில் திருவடியின் முடிவையறிய வேண்டுமென்ற விருப்பத்தால், வேகமும் வலிமையுமுடைய பன்றியாகி முன்வந்து ஏழுலகங்களும் ஊடுருவும்படி தோண்டிச் சென்று பின்னே இளைத்து `ஊழியை நடத்தும் முதல்வனே வெல்க வெல்க` என்று துதித்தும் காணப் பெறாத தாமரை மலர் போலும் திருவடிகள், துதித்தற்கு எளிதாகி,நெடிய கடலாற் சூழப்பட்ட உலகத்தில், யானை முதலாக, எறும்பு இறுதியாகிய குறைவில்லாத கருப்பைகளினின்றும் உள்ள நல்வினையால் தப்பியும், மனிதப் பிறப்பில் தாயின் வயிற்றில் அதனை அழித்தற்குச் செய்யும் குறை வில்லாத புழுக்களின் போருக்குத் தப்பியும், முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவுடைய கரு இரண்டாகப் பிளவுபடுவதனின்றும் தப்பியும், இரண்டாம் மாதத்தில் விளைக்கின்ற விளைவினால் உருக்கெடுவதினின்று தப்பியும் மூன்றாம் மாதத்தில் தாயின் மதநீர்ப் பெருக்குக்குத் தப்பியும், நான்காம் மாதத்தில் அம்மதநீர் நிறைவினால் உண்டாகும், பெரிய இருளுக்குத் தப்பியும், ஐந்தாம் மாதத்தில் உயிர் பெறாது இருத்தலினின்று தப்பியும், ஆறாம் மாதத்தில் கருப்பையில் தினவு மிகுதியால் உண்டாகிய துன்பத்தினின்றும் தப்பியும், ஏழாவது மாதத்தில் கருப்பை தாங்காமையால் பூமியில் காயாய் விழுவதனின்று தப்பியும், எட்டாவது மாதத்தில் வளர்ச்சி நெருக்கத்தினால் உண்டாகும் துன்பத்தினின்றும் தப்பியும், ஒன்பதாவது மாதத்தில் வெளிப்பட முயல்வதனால் வரும் துன்பத்தினின்று தப்பியும், குழவி வெளிப்படுதற்குத் தகுதியாகிய பத்தாவது மாதத்தில், தாய்படுகின்றதனோடு தான்படுகின்ற, கடல் போன்ற துயரத்தினின்று தப்பியும், பூமியிற் பிறந்த பின்பு, வளர்ச்சியடையும் வருடங்கள் தோறும் தாய் தந்தையர் முதலியோர் நெருக்கியும், அழுத்தியும் செய்கின்ற எத்தனையோ பல துன்பங்களில் தப்பியும் காலைப் பொழுதில் மலத்தாலும், உச்சிப் பொழுதில் பசியாலும், இராப்பொழுதில் தூக்கத்தாலும், ஊர்ப்பயணங்களாலும் உண்டா கின்ற துன்பங்களினின்று தப்பியும், கரிய கூந்தலையும் சிவந்த வாயினையும், வெண்மையாகிய பற்களையும், கார்காலத்து மயில் போலப் பொருந்திய. சாயலையும், நெருக்கமாகி உள்ளே களிப்புக் கொண்டு, கச்சு அறும்படி நிமிர்ந்து ஒளி பெற்று முன்னே பருத்து, இடை இளைத்து வருந்தும்படி எழுந்து பக்கங்களில் பரவி ஈர்க்குக் குச்சியும் இடையே நுழையப் பெறாத இளங்கொங்கைகளையும் உடைய மாதருடைய கூர்மையாகிய கண்களின் கொள்ளைக்குத் தப்பியும், மயக்கம் கொண்ட உலகினரது பெரிய மத்தக்களிறு என்று சொல்லத் தக்க ஆசைக்குத் தப்பியும், கல்விஎன்கின்ற பலவாகிய கடலுக்குத் தப்பியும், செல்வமென்கின்ற துன்பத்தினின்று தப்பியும், வறுமை என்கின்ற பழமையாகிய விடத்தினின்று தப்பியும், சிறிய எல்லைகளையுடைய பல வகைப்பட்ட முயற்சிகளில் தப்பியும், தெய்வம் உண்டு என்பதாகிய ஒரு நினைப்பு உண்டாகி, வெறுப்பில்லாததாகிய ஒரு பொருளை நாடுதலும்,ஆறுகோடியெனத் தக்கனவாய் மயக்கம் செய்யவல்ல சடவுலக ஆற்றல்கள், வேறு வேறாகிய தம் மாயைகளைச் செய்யத் தொடங்கினவாகவும், அயலா ராயினோரும் கடவுள் இல்லையென்று பொய் வழக்குப் பேசி நாவில் தழும்பேறப் பெற்றனர். உறவினர் என்கின்ற பசுக்கூட்டங்கள் பின் பற்றி அழைத்துப் பதறிப் பெருகவும், மறையோரும், விரதத்தையே மேன்மையான சாதனம் என்று தம் கொள்கை உண்மையாகும் படி நூற்பிரமாணங்களைக் காட்டினார்களாகவும், சமயவாதிகள் எல்லாம் தம்தம் மதங்களே ஏற்புடைய மதங்களாகும் எனச் சொல்லி ஆர வாரித்துப் பூசலிட்டார்களாகவும், உறுதியான மாயாவாதம் என்கிற பெருங்காற்றானது சுழன்று வீசி முழங்கவும், உலோகாயத மதம் என்கிற, ஒள்ளிய வலிமையுடைய பாம்பினது கலை வேறுபாடு களையுடைய கொடிய நஞ்சு வந்து சேர்ந்து அதிலுள்ள பெருஞ் சூழ்ச்சிகள் எத்தனையோ பலவாகச் சுற்றித் தொடரவும், முற்கூறிய அவற்றால் வழுவாது தாம் பிடித்த கொள்கையை விட்டு விடாமல், நெருப்பினிற் பட்ட மெழுகுபோல வணங்கி மனம் உருகி, அழுது உடல் நடுக்கமடைந்து ஆடுதல் செய்தும், அலறுதல் செய்தும், பாடுதல் செய்தும், வழிபட்டும், குறடும் மூடனும் தாம் பிடித்ததை விடா என்கிற முறைமையேயாகி நல்ல, இடையறாத கடவுள் பத்தியில் பச்சை மரத்தில் அடித்த ஆணி திண்மையாய்ப் பற்றி நிற்பது போல உறைத்து நின்று உருக்கம் மிகுந்து கடல் அலைபோல அலைவுற்று மனம் வாடி, அதற்கு ஏற்ப உடல் அசைவுற்று உலகவர் பேய் என்று தம்மை இகழ்ந்து சிரிக்க வெட்கமென்பது தவிர்ந்து, நாட்டில் உள்ளவர் கூறும் குறைச்சொற்களை அணியாக ஏற்று, மனம் கோணுதல் இல்லாமல், தமது திறமை ஒழிந்து, சிவஞானம் என்னும் உணர்வினால் அடையப் பெறுகின்ற மேலான வியப்பாகக் கருதி கன்றினை உடைய பசுவின் மனம் போல அலறியும் நடுங்கியும், வேறொரு தெய்வத்தைக் கனவிலும் நினையாமல், அரிய மேலான ஒருவன் பூமியில் வந்து குருமூர்த்தியாகி அருள் செய்த பெருமையை எளிமையாக எண்ணி அசட்டை செய்யாது திருவடிகள் இரண்டையும் உருவைவிட்டு அகலாத நிழலைப் போல வெறுக்காமல், முன்பின்னும் நீங்காது நின்று அந்தத் திசை நோக்கி நினைந்து எலும்பு மெலிவுற்று உருக, மிகக் கனிவுற்று இரங்கிப் பத்தியென்னும் நதியானது கரை புரண்டு ஒட, நல்ல புலனறிவு ஒருமைப்பட்டு, `நாதனே!` என்று கூவி அழைத்துச் சொற்கள் குழறி, மயிர்சிலிர்க்க, கைம்மலர் குவித்து நெஞ்சத் தாமரை விரிய, கண்கள் களிப்பு மிக நுண்ணிய துளிகள் அரும்பத் தளராத பேரன்பினை, தினந்தோறும், வளர்ப்பவர்களுக்குத் தாயாகியே அவர்களை வளர்த்தவனே! வணக்கம். மெய்யுணர்வை நல்கும் மறையோனாகி, வினைகள் நீங்க, கைகொடுத்துக் காப்பாற்ற வல்ல கடவுளே! வணக்கம். பொன்மயமா யிருக்கிற மதுரைக்கு அரசனே! வணக்கம். கூடற்பதியில் விளங்கு கின்ற நன்னிற மாணிக்கமே! வணக்கம். தென்தில்லையம்பலத்தில் ஆடுவோனே! வணக்கம். இன்று எனக்கு அரிய அமிர்தமாயினவனே! வணக்கம். கெடாத நான்கு வேதங்களுக்கும் முதல்வனே! வணக்கம். இடபம் பொருந்திய வெற்றிக் கொடியை உடைய சிவபிரானே! வணக்கம். மின்னல் ஒளி பொருந்திய பல அழகிய வேறுவேறு உருவங்களை உடையவனே! வணக்கம். கல்லில் நார் உரித்தது போல என் மனத்தை இளகச் செய்த கனியே! வணக்கம். பொன்மலை போன்றவனே! காத்தருள்வாய். வணக்கம். ஐயோ! எனக்கருள் செய்வாய். நினக்கு வணக்கங்கள். எல்லா உலகங்களையும் படைப் பவனே! காப்பவனே! ஒடுக்குபவனே! வணக்கம். பிறவித்துன்பத்தை நீக்கி அருள் புரிகின்ற எம் தந்தையே! வணக்கம். ஆண்டவனே! வணக்கம். எங்கும் நிறைந்தவனே! வணக்கம். ஒளியை வீசுகின்ற படிகத்தின் திரட்சியே! வணக்கம். தலைவனே! வணக்கம். சாவாமையைத் தரும் மருந்தான வனே! வணக்கம். நறுமணம் பொருந்திய திருவடியையுடைய நீதியாளனே! வணக்கம். வேதத்தை உடையவனே! வணக்கம். குற்ற மற்றவனே! வணக்கம். முதல்வனே! வணக்கம். அறிவாய் இருப் பவனே! வணக்கம், வீட்டு நெறியானவனே! வணக்கம். கனியின் சுவை போன்றவனே! வணக்கம். கங்கையாறு தங்கிய சிவந்த சடையை யுடைய நம்பனே! வணக்கம். எல்லாப் பொருள்களையும் உடைய வனே! வணக்கம். உயிர்களின் உணர்விற்கு உணர்வாய் இருப்பவனே! வணக்கம். கடையேனுடைய அடிமையைக் கடைக்கணித்து ஏற்றுக் கொண்டவனே! வணக்கம். பெரியோனே! வணக்கம். நுண்ணியனே! வணக்கம். சைவனே! வணக்கம், தலைவனே! வணக்கம், அனற் பிழம்பாகிய இலிங்கவடிவினனே! வணக்கம். எண்குணங்கள் உடையவனே! வணக்கம். நல்வழியானவனே! வணக்கம். உயிர்களின் நினைவில் கலந்துள்ளவனே! வணக்கம். தேவர்களுக்கும் அரிதாகிய மருந்தானவனே! வணக்கம். மற்றையோர்க்கு எளிமையான இறைவனே! வணக்கம். இருபத்தொரு தலை முறையில் வருகின்ற சுற்றத்தார் வலிய நரகத்தில் ஆழ்ந்து போகாமல் அருள் செய்கின்ற அரசனே! வணக்கம். தோழனே! வணக்கம். துணைபுரிபவனே! வணக்கம். என்னுடைய வாழ்வானவனே! வணக்கம். என் நிதியானவனே! வணக்கம். இயல்பாகவே பாசங்கள் இல்லாதவனே! வணக்கம். தலைவனே! வணக்கம். அப்பனே! வணக்கம். பாசத்தை அழிப்பவனே! வணக்கம். சொல்லையும் அறிவையும் கடந்த ஒப்பற்றவனே! வணக்கம். விரிந்த கடல் சூழ்ந்த உலக வாழ்வின் பயனே! வணக்கம். அருமையாய் இருந்தும் எளிமையாய் வந்தருளும் அழகனே! வணக்கம். கார்மேகம் போல அருள் புரிகின்ற கண் போன்றவனே! வணக்கம். நிலைபெற்ற பெருங்கருணை மலையே! வணக்கம். என்னையும் ஓர் அடியவனாக்கிப் பெருமையாகிய திருவடியை என் தலையில் வைத்த வீரனே! வணக்கம். வணங்கிய கையினரின் துன்பங்களை நீக்குவோனே! வணக்கம். அழிவில்லாத இன்பக்கடலே! வணக்கம். ஒடுக்கமும் தோற்றமும் கடந்தவனே! வணக்கம். எல்லாம் கடந்த முதல்வனே! வணக்கம். மானை நிகர்த்த நோக்கத்தையுடைய உமா தேவியின் மணவாளனே! வணக்கம். விண்ணுலகத்திலுள்ள தேவர்களுக்குத் தாய் போன்றவனே! வணக்கம். பூமியில் ஐந்து தன்மைகளாய்ப் பரவியிருப்பவனே! வணக்கம். நீரில் நான்கு தன்மைகளாய் நிறைந்து இருப்பவனே! வணக்கம். நெருப்பில் மூன்று தன்மைகளாய்த் தெரிபவனே! வணக்கம். காற்றில் இரண்டு தன்மைகளாய் மகிழ்ந்து இருப்பவனே! வணக்கம். ஆகாயத்தில் ஒரு தன்மையாய்த் தோன்றியவனே! வணக்கம். கனிபவருடைய மனத்தில் அமுதமாய் இருப்பவனே! வணக்கம். கனவிலும் தேவர்கட்கு அருமையானவனே! வணக்கம். நாய் போன்ற எனக்கு விழிப்பிலும் அருள் செய்தவனே! வணக்கம். திருவிடை மருதூரில் வீற்றிருக்கும் எம் அப்பனே! வணக்கம். சடையில் கங்கையைத் தாங்கியவனே! வணக்கம். திருவாரூரில் தங்கியருளிய தலைவனே! வணக்கம். சிறப்புப் பொருந்திய திருவையாற்றில் உள்ளவனே! வணக்கம். அண்ணாமலையிலுள்ள எம்மேலோனே! வணக்கம். கண்ணால் நுகரப்படும் அமுதக் கடலாய் உள்ளவனே! வணக்கம். திருவேகம்பத்தில் வாழ்கின்ற எந்தையே! வணக்கம். அங்கு ஒரு பாகம் பெண்ணுருவாகியவனே! வணக்கம். திருப்பராய்த் துறையில் பொருந்திய மேலோனே! வணக்கம். திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளிய சிவபிரானே! வணக்கம். இவ்விடத்து உன்னையன்றி மற்றொருபற்றையும் யான் அறிந்திலேன் ஆதலின் வணக்கம். திருக்குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள எம் கூத்தனே! வணக்கம். திருப் பெருந்துறையில் பொருந்திய இறைவனே! வணக்கம். திரு ஈங்கோய் மலையில் வாழ்கின்ற எம் தந்தையே! வணக்கம். வனப்பு நிறைந்த திருப்பழனத்தில் உள்ள அழகனே! வணக்கம். திருக்கடம்பூரில் எழுந்தருளிய சுயம்புவே! வணக்கம். உன்னை அடுத்தவர்க்கு அருள் செய்கின்ற அப்பனே! வணக்கம். கல்லால மரத்தின் கீழ் இயக்கியர் அறுவருக்கும், வெள்ளானைக்கும் அருள் செய்த அரசனே! வணக்கம். மற்றும்பல தலங்கள் உள்ள தென்னாடுடைய சிவபிரானே! வணக்கம். வேறு பல நாட்டவர்களுக்கும் வழிபடு தெய்வமானவனே! வணக்கம். பன்றிக்குட்டிகளுக்குக் கருணை காட்டி அருளியவனே! வணக்கம். பெரிய கயிலாயமலையில் இருப்பவனே! வணக்கம். அம்மானே! அருள் செய்ய வேண்டும். அஞ்ஞான இருள் அழியும்படி அருள் செய்கின்ற இறைவனே! வணக்கம். அடியேன் துணையற்றவனாய்த் தளர்ச்சி அடைந்தேன்; வணக்கம். நிலையான இடத்தைப் பெற எண்ணும்படி அருள்புரிவாய், வணக்கம். அஞ்சாதே என்று இப்பொழுது எனக்கு அருள் செய்ய வேண்டும்; வணக்கம். நஞ்சையே அமுதமாக விரும்பினவனே! வணக்கம், அப்பனே! வணக்கம், குருவே! வணக்கம். என்றும் உள்ளவனே! வணக்கம். குற்றம் அற்றவனே! வணக்கம். தலைவனே! வணக்கம். எவற்றுக்கும் பிறப்பிடமானவனே! வணக்கம். பெரியவனே! வணக்கம். வள்ளலே! வணக்கம், அரியவனே! வணக்கம். பாசம் இல்லாதவனே! வணக்கம். அந்தணர் கோலத்தோடு வந்து அருள் புரிந்த நீதியானவனே! வணக்கம். முறையோ பொறுக்க மாட்டேன். முதல்வனே! வணக்கம். சுற்றமானவனே! வணக்கம். உயிர்க்கு உயிராய் இருப்பவனே! வணக்கம். சிறந்த பொருளான வனே! வணக்கம். மங்கலப் பொருளானவனே! வணக்கம். ஆற்ற லுடையவனே! வணக்கம். அழகுடையவனே! வணக்கம். செம்பஞ்சுக் குழம்பு பூசிய அழகிய பாதங்களை உடைய உமாதேவி பாகனே! வணக்கம். நாயினேன் வருத்த முற்றேன். நின் அடியவன் நினக்கு வணக்கம். விளங்குகின்ற ஒளியையுடைய எம் ஆண்டவனே! வணக்கம். கவைத்தலை என்னும் திருப்பதியில் விரும்பி எழுந்தருளிய கண் போன்றவனே! வணக்கம். குவைப்பதி என்னும் ஊரிலே மகிழ்ந்து இருந்த இறைவனே! வணக்கம். மலைநாட்டை உடைய மன்னனே! வணக்கம். கல்வி மிகுந்த அரிகேசரி யென்னும் ஊரினை உடையாய்! வணக்கம். திருக்கழுக்குன்றிலுள்ள செல்வனே! வணக்கம். கயிலை மலையில் வீற்றிருக்கும், திருப்பூவணத் திலுள்ள பெருமானே! வணக்கம். அருவம் உருவம் என்னும் திருமேனிகளைக் கொண்டவனே! வணக்கம். என்னிடத்தில் வந்து பொருந்திய அருள் மலையே! வணக்கம். சாக்கிரம் முதலிய நான்கு நிலையும் கடந்த பேரறிவே! வணக்கம். அறிதற்கு அருமையாகிய தெளிவே! வணக்கம். துளைக்கப் படாத தூய முகத்தின் சோதியே! வணக்கம். அடிமையானவர்க்கு அன்பனே! வணக்கம். தெவிட்டாத அமுதமே! திருவருளே! வணக்கம். ஆயிரம் திருப்பெயர்களை உடைய பெருமானே! வணக்கம். நீண்ட தாளினையுடைய அறுகம்புல் கட்டிய மாலை அணிந் தவனே! வணக்கம். பேரொளி வடிவாகிய கூத்தப் பெருமானே! வணக்கம். சந்தனக் குழம்பை அணிந்த அழகனே! வணக்கம். நினைத்தற்கரிய சிவமே! வணக்கம். மந்திர நூல் வெளிப்பட்ட பெரிய மகேந்திர மலையில் வீற்றிருந்தவனே! வணக்கம். எங்களை உய்யும்படி ஆட்கொள்வோனே! வணக்கம். புலியின் பாலை மானுக்கு ஊட்டுமாறு அருளினவனே! வணக்கம். அசையாநின்ற கடலின் மேல் நடந்தவனே! வணக்கம். கரிக் குருவிக்கு அன்று அருள் செய்தவனே! வணக்கம். வலிய ஐம்புல வேட்கைகள் அற்றொழியும் உள்ளம் பொருந்தி அருளினவனே! வணக்கம். நிலத்தின் கண் பொருந்தப் பழகிய பல்வகைத் தோற்ற முடையவனே! வணக்கம். உலகத்திற்கு எல்லாம் முதலும் நடுவும் முடிவுமானவனே! வணக்கம். நாகம், விண்ணுலகம், நிலவுலகம் என்ற மூவிடத்தும் புகாதபடி பாண்டியனுக்கு மேலான வீட்டுலகை நல்கி அருளியவனே! வணக்கம். எங்கும் நீக்கமற நிறைந்த ஒருவனே! வணக்கம். செழுமை மிக்க மலர் நிறைந்த திருப்பெருந்துறைத் தலைவனே! வணக்கம். செங்கழுநீர் மாலையை அணிந்த கடவுளே! வணக்கம். வணங்குவோருடைய மயக்கத்தை அறுப்பவனே! வணக்கம். தவறு யாது? பொருத்தம் யாது? என்று அறியாத நாயினேன் குழைந்து சொன்ன சொல் மாலையைக் கொண்டருள வேண்டும்; வணக்கம். மூன்றுபுரங்களை எரித்த பழையோனே! வணக்கம். மேலான ஒளியை உடைய மேலோனே! வணக்கம். பாம்பை அணிந்த பெரியோனே! வணக்கம். பழமையானவனே! எல்லாவற்றிற்கும் மூல காரணனே! வணக்கம். வணக்கம். வெற்றியுண்டாக வணக்கம்! வணக்கம்!.
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: கோயில் (சிதம்பரம்)
1.080   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கற்றாங்கு எரி ஓம்பி, கலியை
Tune - குறிஞ்சி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
3.001   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!
Tune - காந்தாரபஞ்சமம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.022   திருநாவுக்கரசர்   தேவாரம்   செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா
Tune - காந்தாரம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.023   திருநாவுக்கரசர்   தேவாரம்   பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!
Tune - கொல்லி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.080   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாளை உடைக் கமுகு ஓங்கி,
Tune - திருவிருத்தம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.081   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரு நட்ட கண்டனை, அண்டத்
Tune - திருவிருத்தம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
5.001   திருநாவுக்கரசர்   தேவாரம்   அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
Tune - பழந்தக்கராகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
5.002   திருநாவுக்கரசர்   தேவாரம்   பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
Tune - திருக்குறுந்தொகை   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
6.001   திருநாவுக்கரசர்   தேவாரம்   அரியானை, அந்தணர் தம் சிந்தை
Tune - பெரியதிருத்தாண்டகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
6.002   திருநாவுக்கரசர்   தேவாரம்   மங்குல் மதி தவழும் மாட
Tune - புக்கதிருத்தாண்டகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
7.090   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,
Tune - குறிஞ்சி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
8.102   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.103   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.104   மாணிக்க வாசகர்    திருவாசகம்   போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா
Tune - தென் நாடு உடைய சிவனே, போற்றி!   (கோயில் (சிதம்பரம்) )
8.109   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி   (கோயில் (சிதம்பரம்) )
8.110   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.111   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.112   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.113   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பூவல்லி - இணையார் திருவடி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.114   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருஉந்தியார் - வளைந்தது வில்லு
Tune - அயிகிரி நந்தினி   (கோயில் (சிதம்பரம்) )
8.115   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.116   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்
Tune - தாலாட்டு பாடல்   (கோயில் (சிதம்பரம்) )
8.117   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி   (கோயில் (சிதம்பரம்) )
8.118   மாணிக்க வாசகர்    திருவாசகம்   குயிற்பத்து - கீத மினிய குயிலே
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )
8.119   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
Tune - ஏரார் இளங்கிளியே   (கோயில் (சிதம்பரம்) )
8.121   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )
8.122   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை
Tune - அக்ஷரமணமாலை   (கோயில் (சிதம்பரம்) )
8.131   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
8.135   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.140   மாணிக்க வாசகர்    திருவாசகம்   குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே
Tune - அயிகிரி நந்தினி   (கோயில் (சிதம்பரம்) )
8.145   மாணிக்க வாசகர்    திருவாசகம்   யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )
8.146   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.149   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.151   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத
Tune - முல்லைத் தீம்பாணி   (கோயில் (சிதம்பரம்) )
8.201   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   முதல் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.202   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இரண்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.203   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   மூன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.204   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   நான்காம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.205   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   ஐந்தாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.206   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   ஆறாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.207   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   ஏழாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.208   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   எட்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.209   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   ஒன்பதாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.210   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பத்தாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.211   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினொன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.212   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பன்னிரண்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.213   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதின்மூன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.214   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினென்காம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.215   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினைந்தாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.216   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினாறாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.217   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினேழாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.218   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பதினெட்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.219   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   பத்தொன்பதாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.220   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபதாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.221   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்தொன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.222   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்திரண்டாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.223   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்திமூன்றாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.224   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்திநான்காம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
8.225   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்   இருபத்தைந்தாம் அதிகாரம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.001   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா   திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.002   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா   திருமாளிகைத் தேவர் - கோயில் - உயர்கொடி யாடை
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.003   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா   திருமாளிகைத் தேவர் - கோயில் - உறவாகிய யோகம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.004   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா   திருமாளிகைத் தேவர் - கோயில் - இணங்கிலா ஈசன்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.008   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.019   பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா   பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.020   கண்டராதித்தர்   திருவிசைப்பா   கண்டராதித்தர் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.021   வேணாட்டடிகள்   திருவிசைப்பா   வேணாட்டடிகள் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.022   திருவாலியமுதனார்   திருவிசைப்பா   திருவாலியமுதனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.023   திருவாலியமுதனார்   திருவிசைப்பா   திருவாலியமுதனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.024   திருவாலியமுதனார்   திருவிசைப்பா   திருவாலியமுதனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.025   திருவாலியமுதனார்   திருவிசைப்பா   திருவாலியமுதனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.026   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா   புருடோத்தம நம்பி - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.027   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா   புருடோத்தம நம்பி - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.028   சேதிராயர்   திருவிசைப்பா   சேதிராயர் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
9.029   சேந்தனார்   திருப்பல்லாண்டு   சேந்தனார் - கோயில்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
11.006   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி   பொன்வண்ணத்தந்தாதி
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
11.026   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை   கோயில் நான்மணிமாலை
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
11.032   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
Tune -   (கோயில் (சிதம்பரம்) )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000