சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.007   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு
பண் - இந்தளம்   (திருவாஞ்சியம் வாஞ்சியநாதர் வாழவந்தநாயகியம்மை)
Audio: https://sivaya.org/audio/2.007 vanni KonRai.mp3
Audio: https://www.youtube.com/watch?v=pVjS5m3tgMs
5.067   திருநாவுக்கரசர்   தேவாரம்   படையும் பூதமும் பாம்பும் புல்வாய்
பண் - திருக்குறுந்தொகை   (திருவாஞ்சியம் வாஞ்சியநாதர் வாழவந்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ovtRQxKv5ZE
7.076   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொருவனார்; புரிநூலர்; புணர் முலை
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருவாஞ்சியம் சுகவாஞ்சிநாதர் வாழவந்தநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=1UqbekXfyC4

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.007   வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருவாஞ்சியம் ; (திருத்தலம் அருள்தரு வாழவந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு வாஞ்சியநாதர் திருவடிகள் போற்றி )
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார்,
தென்ன என்று வரிவண்டு இசைசெய் திரு வாஞ்சியம்,
என்னை ஆள் உடையான், இடம் ஆக உகந்ததே.

[1]
காலகாலர், கரிகான் இடை மாநடம் ஆடுவர்,
மேலர், வேலைவிடம் உண்டு இருள்கின்ற மிடற்றினர்,
மாலை கோல மதி மாடம் மன்னும் திரு வாஞ்சியம்
ஞாலம் வந்து பணியப் பொலி கோயில் நயந்ததே.

[2]
மேவில் ஒன்றர், விரிவுஉற்ற இரண்டினர், மூன்றும் ஆய்
நாவில் நாலர், உடல் அஞ்சினர், ஆறர், ஏழ் ஓசையர்,
தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார்;
பாவம் தீர்ப்பர், பழி போக்குவர், தம் அடியார்கட்கே.

[3]
சூலம் ஏந்தி வளர் கையினர்; மெய் சுவண்டுஆகவே
சால நல்ல பொடி பூசுவர்; பேசுவர், மாமறை;
சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம்,
ஆலம் உண்ட அடிகள் இடம் ஆக அமர்ந்ததே.

[4]
கை இலங்கு மறி ஏந்துவர், காந்தள் அம்மெல்விரல்
தையல் பாகம் உடையார், அடையார் புரம் செற்றவர்,
செய்யமேனிக் கரிய மிடற்றார் திரு வாஞ்சியத்து
ஐயர்; பாதம் அடைவார்க்கு அடையா, அருநோய்களே

[5]
அரவம் பூண்பர்; அணியும் சிலம்பு ஆர்க்க அகம்தொறும்
இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர்; நாமமே
பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம்
மருவி ஏத்த மடமாதொடு நின்ற எம் மைந்தரே.

[6]
விண்ணில் ஆன பிறை சூடுவர், தாழ்ந்து விளங்கவே;
கண்ணினால் அநங்கன் உடலம் பொடி ஆக்கினார்;
பண்ணில் ஆன இசைபாடல் மல்கும் திரு வாஞ்சியத்து
அண்ணலார் தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை,
அல்லலே.

[7]
மாடம் நீடு கொடி மன்னிய தென் இலங்கைக்கு மன்
வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர்,
வேடவேடர், திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்
பாட நீடு மனத்தார் வினை பற்றுஅறுப்பார்களே

[8]
செடி கொள் நோயின் அடையார்; திறம்பார், செறு தீவினை;
கடிய கூற்றமும் கண்டு அகலும்; புகல்தான் வரும்
நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார், திரு வாஞ்சியத்து
அடிகள், பாதம் அடைந்தார் அடியார், அடியார்கட்கே.

[9]
பிண்டம் உண்டு திரிவார், பிரியும் துவர் ஆடையார்,
மிண்டர் மிண்டு(ம்) மொழி மெய் அல; பொய் இலை,
எம் இறை;
வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து
அண்டவாணன் அடி கைதொழுவார்க்கு இல்லை,
அல்லலே.

[10]
தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திரு
வாஞ்சியத்து
என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால்,
நன்று காழி மறை ஞானசம்பந்தன செந்தமிழ்
ஒன்றும் உள்ளம் உடையார் அடைவார், உயர்வானமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.067   படையும் பூதமும் பாம்பும் புல்வாய்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவாஞ்சியம் ; (திருத்தலம் அருள்தரு வாழவந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு வாஞ்சியநாதர் திருவடிகள் போற்றி )
படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்-
உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம்,
புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம்
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே.

[1]
பறப்பையும் பசுவும் படுத்துப் பல-
திறத்தவும்(ம்) உடையோர் திகழும் பதி,
கறைப் பிறைச் சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்பு உடை, திரு வாஞ்சியம் சேர்மினே!

[2]
புற்றில் ஆடு அரவோடு புனல் மதி
தெற்று செஞ்சடைத் தேவர்பிரான் பதி,
சுற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க்குப் பாவம் இல்லையே.

[3]
அங்கம் ஆறும் அருமறை நான்கு உடன்
தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர்,
செங்கண் மால இடம் ஆர், திரு வாஞ்சியம்
தங்குவார் நம் அமரர்க்கு அமரரே.

[4]
நீறு பூசி நிமிர்சடைமேல் பிறை
ஆறு சூடும் அடிகள் உறை பதி,
மாறுதான் ஒருங்கும் வயல், வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க்குச் செல்வம் ஆகுமே.

[5]
அற்றுப் பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு
உற்ற நல்-துணை ஆவான் உறை பதி,
தெற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம்
கற்றுச் சேர்பவர்க்குக் கருத்து ஆவதே.

[6]
அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்தும் சேவடியான் திகழும் நகர்
ஒருத்தி பாகம் உகந்தவன், வாஞ்சியம்
அருத்தியால் அடைவார்க்கு இல்லை, அல்லலே.

[7]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.076   பொருவனார்; புரிநூலர்; புணர் முலை  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருவாஞ்சியம் ; (திருத்தலம் அருள்தரு வாழவந்தநாயகி உடனுறை அருள்மிகு சுகவாஞ்சிநாதர் திருவடிகள் போற்றி )
பொருவனார்; புரிநூலர்; புணர் முலை உமையவளோடு
மருவனார்; மருவார் பால் வருவதும் இல்லை, நம் அடிகள்;
திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
ஒருவனார்; அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே.

[1]
தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென, இடி குரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓட, செங்கயல் பங்கயத்து ஒதுங்க,
கறுவு இலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள்
மறு இலாத வெண்நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே.

[2]
தூர்த்தர் மூ எயில் எய்து, சுடு நுனைப் பகழி அது ஒன்றால்,
பார்த்தனார் திரள் தோள் மேல் பல்-நுனைப் பகழிகள் பாய்ச்சி,
தீர்த்தம் ஆம் மலர்ப் பொய்கைத் திகழ் திரு வாஞ்சியத்து அடிகள்
சாத்து மா மணிக் கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே.

[3]
சள்ளை வெள்ளை அம் குருகுதான் அது ஆம் எனக் கருதி,
வள்ளை வெண் மலர் அஞ்சி, மறுகி, ஓர் வாளையின் வாயில்
துள்ளு தெள்ளும் நீர்ப் பொய்கைத் துறை மல்கு வாஞ்சியத்து அடிகள்
வெள்ளை நுண்பொடிப் பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர், தாமே.

[4]
மை கொள் கண்டர், எண்தோளர், மலை மகள் உடன் உறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர்,
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள்,
பைதல் வெண் பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே?

[5]
கரந்தை கூவிள மாலை கடி மலர்க் கொன்றையும் சூடி,
பரந்த பாரிடம் சூழ, வருவர், எம் பரமர், தம் பரிசால்;
திருந்து மாடங்கள் நீடு திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
மருந்தனார், அடியாரை வல்வினை நலிய ஒட்டாரே.

[6]
அருவி பாய்தரு கழனி, அலர் தரு குவளை அம் கண்ணார்,
குருவி ஆய் கிளி சேர்ப்ப, குருகு இனம் இரிதரு கிடங்கின்
பரு வரால் குதி கொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும்
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே.

[7]
களங்கள் ஆர் தரு கழனி அளி தரக் களி தரு வண்டு
உளங்கள் ஆர் கலிப் பாடல் உம்பரில் ஒலித்திடும் காட்சி,
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில், வாஞ்சியத்து அடிகள்
விளங்கு தாமரைப் பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே.

[8]
வாழை இன் கனி தானும், மது விம்மி, வருக்கை இன் சுளையும்,
கூழை வானரம் தம்மில், கூறு இது சிறிது எனக் குழறி,
தாழை வாழை அம் தண்டால் செருச் செய்து தருக்கு வாஞ்சியத்துள்,
ஏழை பாகனை அல்லால் இறை எனக் கருதுதல் இலமே.

[9]
செந்நெல் அங்கு அலங்(கு) கழனித் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறைகழல் பரவும்
பொன் அலங்கல் நல் மாடப் பொழில் அணி நாவல் ஆரூரன்
பன் அலங்கல் நல் மாலை பாடுமின், பத்தர் உளீரே!

[10]
Back to Top

This page was last modified on Sun, 09 Mar 2025 21:46:14 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list column name thalam string value %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D