Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.016  
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று
பண் - இந்தளம் (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
திருமணம் கைகூட ஓத வேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=3iP3choR434
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று எய்து குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறுஆகி, மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப் பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.
| [1] |
விதியானை, விண்ணவர்தாம் தொழுது ஏத்திய நெதியானை, நீள்சடைமேல் நிகழ்வித்த வான் மதியானை, வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப் பதியானை, பாட வல்லார் வினை பாறுமே.
| [2] |
எய்ப்புஆனார்க்கு இன்புஉறு தேன் அளித்து ஊறிய இப்பால் ஆய் எனையும் ஆள உரியானை, வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி மெய்ப்பானை, மேவி நின்றார் வினை வீடுமே.
| [3] |
விடையானை, மேல் உலகுஏழும் இப் பார் எலாம் உடையானை, ஊழிதோறுஊழி உளதுஆய படையானை, பண் இசை பாடு மணஞ்சேரி அடைவானை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.
| [4] |
எறி ஆர் பூங்கொன்றையினோடும் இள மத்தம் வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைந்தானை, மறி ஆரும் கை உடையானை, மணஞ்சேரிச் செறிவானை, செப்ப வல்லார்க்கு இடர் சேராவே.
| [5] |
மொழியானை, முன் ஒரு நால்மறை ஆறுஅங்கம் பழியாமைப் பண் இசைஆன பகர்வானை; வழியானை; வானவர் ஏத்தும் மணஞ்சேரி இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும், இன்பமே.
| [6] |
எண்ணானை, எண் அமர் சீர் இமையோர்கட்குக் கண்ணானை, கண் ஒருமூன்றும் உடையானை, மண்ணானை, மா வயல் சூழ்ந்த மணஞ்சேரிப் பெண்ணானை, பேச நின்றார் பெரியோர்களே. | [7] |
எடுத்தானை எழில் முடிஎட்டும் இரண்டும் தோள கெடுத்தானை, கேடு இலாச் செம்மை உடையானை, மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி பிடித்து ஆரப் பேண வல்லார் பெரியோர்களே
| [8] |
சொல்லானை; தோற்றம் கண்டானும், நெடுமாலும், கல்லானை; கற்றன சொல்லித் தொழுது ஓங்க வல்லார், நல் மா தவர், ஏத்தும் மணஞ்சேரி எல்லாம் ஆம் எம்பெருமான்; கழல் ஏத்துமே!
| [9] |
சற்றேயும் தாம் அறிவு இல் சமண்சாக்கியர் சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை, வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி பற்றாஆக வாழ்பவர்மேல் வினை பற்றாவே.
| [10] |
கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை, மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி, பண் ஆரப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.
| [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.018  
சடையாய்! எனுமால்; சரண் நீ!
பண் - இந்தளம் (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)
வைப்பூரிலுள்ள தாமன் என்போன் என் தந்தை. அவனுக்கு மகளிர் எழுவர். அரவு தீண்டப்பட்டவன் என் தாய்மாமன். என் தந்தை தன் மகளிருள் மூத்தவளை மாமனுக்குத் தருவதாகக் கூறிப் பொரு ளாசையால் பிறன் ஒருவனுக்கு மணம் செய்வித்தார், அடுத்த பெண்ணை உனக்குத் தருகிறேன் என்று ஆறுதல் கூறிக்கொண்டே ஆறு பெண்களையும் இவ்வாறே பிறருக்கு மணம் முடித்து வந்தார். ஏழாவது பெண்ணாகிய நான் என்னையும் இவ்வாறே வேறு ஒருவருக்கு மணம் செய்வித்துத் தன் மருகனைத் தந்தை தளர்வுறச் செய்வார் என்ற எண்ணத்தால் உறவினர்க்கும் தெரியாமல் இவரோடு போந்து மணம் முடித்து வாழ எண்ணினேன். வழியிடையே இவ்வூரில் அரவு தீண்டி இவரும் இறந்தார். கடல் நடுவே கலம் கவிழ்ந்த நாய்கன் போலத் துன்பத்துக்கு ஆளானேன். இந்நிலையில் என் சுற்றத்தார் போல என்பால் பரிவு காட்டி அருள் செய்கின்றீர்கள்! என்று கூறிய பெண்ணின் ஆற்றாமையைக் கேட்டுத் திருவுளம் இரங்கிய ஞான சம்பந்தர் மருகற் பெருமான் ஆலயம் சென்று பணிந்து உன் பெயர் கூறி ஒள்ளிழையாள் உளம் மெலிந்து வருந்துதல் அருட் கடலாகிய உனக்கு அழகோ என முறையிடும் நிலையில் சடையாயெனுமால் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். அந்நிலையில் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான். இருவரும் தங்கட்கு வாழ்வளித்த ஞான சம்பந்தர் திருவடிகளைப் பணிந்தனர். ஞானசம்பந்தர் அவ்விருவருக்கும் இறைவன் திருமுன்னிலையில் மணம் புணரும் பெருவாழ்வு வழங்கி வாழ்த்தினார்.
திருமணம் விரைவில் நிறைவேற ஓத வேண்டிய பதிகம்.
Audio: https://www.youtube.com/watch?v=f_ZJk-kJhbA Audio: https://sivaya.org/audio/2.018 sadaiyai enumaal.mp3
சடையாய்! எனுமால்; சரண் நீ! எனுமால்; விடையாய்! எனுமால்; வெருவா விழுமால்; மடை ஆர் குவளை மலரும் மருகல் உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே?
| [1] |
சிந்தாய்! எனுமால்; சிவனே! எனுமால்; முந்தாய்! எனுமால்; முதல்வா! எனுமால்; கொந்து ஆர் குவளை குலவும் மருகல் எந்தாய்! தகுமோ, இவள் ஏசறவே?
| [2] |
அறை ஆர் கழலும், அழல் வாய் அரவும், பிறை ஆர் சடையும், உடையாய்! பெரிய மறையார் மருகல் மகிழ்வாய்! இவளை இறை ஆர் வளை கொண்டு, எழில் வவ்வினையே?
| [3] |
ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம் பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்! மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளை மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே?
| [4] |
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன மணி நீலகண்டம்(ம்) உடையாய், மருகல்! கணி நீலவண்டு ஆர் குழலாள் இவள்தன் அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே?
| [5] |
பலரும் பரவப்படுவாய்! சடைமேல் மலரும் பிறை ஒன்று உடையாய், மருகல்! புலரும்தனையும் துயிலாள், புடை போந்து அலரும் படுமோ, அடியாள் இவளே
| [6] |
வழுவாள்; பெருமான்கழல் வாழ்க! எனா எழுவாள்; நினைவாள், இரவும் பகலும்; மழுவாள் உடையாய்! மருகல் பெருமான்! தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே?
| [7] |
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப, துலங்க விரல் ஊன்றலும், தோன்றலனாய்; வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்! அலங்கல் இவளை அலர் ஆக்கினையே?
| [8] |
எரி ஆர் சடையும், அடியும், இருவர் தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே! மரியார் பிரியா மருகல் பெருமான்! அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?
| [9] |
அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும் நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்; மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்! நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே?
| [10] |
வயஞானம் வல்லார் மருகல் பெருமான் உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால், இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார், வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே.
| [11] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 -ஆம் திருமுறை பதிகம் 8.117  
அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்
பண் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி (கோயில் (சிதம்பரம்) )
கலிவிருத்தம்
Audio: https://sivaya.org/thiruvaasagam/17 Annaipatthu Thiruvasagam.mp3
வேத மொழியர், வெள் நீற்றர், செம் மேனியர், நாதப் பறையினர்; அன்னே! என்னும், நாதப் பறையினர் நான்முகன், மாலுக்கும், நாதர், இந் நாதனார்; அன்னே! என்னும்.
| [1] |
கண் அஞ்சனத்தர், கருணைக் கடலினர், உள் நின்று உருக்குவர்; அன்னே! என்னும், உள் நின்று உருக்கி, உலப்பு இலா ஆனந்தக் கண்ணீர் தருவரால்; அன்னே! என்னும்.
| [2] |
நித்த மணாளர், நிரம்ப அழகியர், சித்தத்து இருப்பரால்; அன்னே! என்னும். சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை அத்தர், ஆனந்தரால்; அன்னே! என்னும்.
| [3] |
ஆடு அரப் பூண், உடைத் தோல், பொடிப் பூசிற்று ஓர் வேடம் இருந்த ஆறு; அன்னே! என்னும். வேடம் இருந்தவா, கண்டு கண்டு, என் உள்ளம் வாடும்; இது என்னே! அன்னே! என்னும்.
| [4] |
நீண்ட கரத்தர், நெறிதரு குஞ்சியர், பாண்டி நல் நாடரால்; அன்னே! என்னும். பாண்டி நல் நாடர் பரந்து எழு சிந்தையை ஆண்டு அன்பு செய்வரால்; அன்னே! என்னும்.
| [5] |
உன்னற்கு அரிய சீர் உத்தரமங்கையர் மன்னுவது என் நெஞ்சில்; அன்னே! என்னும். மன்னுவது என் நெஞ்சில்; மால், அயன், காண்கிலார்; என்ன அதிசயம்! அன்னே! என்னும்.
| [6] |
வெள்ளைக் கலிங்கத்தர், வெண் திருமுண்டத்தர் பள்ளிக் குப்பாயத்தர்; அன்னே! என்னும். பள்ளிக் குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு, என் உள்ளம் கவர்வரால்; அன்னே! என்னும்.
| [7] |
தாளி அறுகினர், சந்தனச் சாந்தினர், ஆள் எம்மை ஆள்வரால்; அன்னே! என்னும். ஆள் எம்மை ஆளும் அடிகளார் தம் கையில், தாளம் இருந்த ஆறு; அன்னே! என்னும்.
| [8] |
தையல் ஓர் பங்கினர், தாபத வேடத்தர், ஐயம் புகுவரால்; அன்னே! என்னும். ஐயம் புகுந்து அவர் போதலும், என் உள்ளம் நையும்; இது என்னே! அன்னே! என்னும்.
| [9] |
கொன்றை, மதியமும், கூவிளம், மத்தமும், துன்றிய சென்னியர்; அன்னே! என்னும். துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமே, இன்று, எனக்கு ஆன ஆறு; அன்னே! என்னும்.
| [10] |
Back to Top
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி Back to Top
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400 |
|