|
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 -ஆம் திருமுறை பதிகம் 1.054  
பூத் தேர்ந்து ஆயன கொண்டு,
பண் - பழந்தக்கராகம் (திருஓத்தூர் (செய்யாறு) வேதநாதர் இளமுலைநாயகியம்மை)
ஞானசம்பந்தர் கச்சித்திருஏகம்பப் பெருமானை வழிபடும் கருத்தினராய்ச் சீகாழியிலிருந்து புறப்பட்டுத் தில்லை சென்று ஆனந்தக் கூத்தனைப் பணிந்து மாணிகுழி, பாதிரிப் புலியூர், வடுகூர், வக்கரை இரும்பை மாகாளம் முதலிய தலங்களை வணங்கித் திருவதிகை வீரட்டம் தொழுது போற்றிக் கோவலூர் அறையணி நல்லூர் ஆகிய தலங்களை வணங்கி அண்ணாமலை சென்றடைந்தார். உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவனை வணங்கிப் பதிகங்கள் பாடி திருஓத்தூர் அடைந்து இறைவனைப் போற்றினார். சிவனடியார் ஒருவர் அடியவர்க்கெனத் தான் வளர்த்த பனைகள் அனைத்தும் ஆண்பனைகளாக இருத்தலையும் சமணர்கள் சிலர் சிவனருளால் காய்க்க வைக்க முடியுமா? என ஏளனமாகக் கேட்டதையும் ஞான சம்பந்தரிடம் கூற அவர் ஆலயம் சென்று வணங்கி, பூத்தேர்ந்தாயன என்னும் பதிகம் பாடிய அளவில் ஆண்பனைகளனைத்தும் பெண் பனைகளாய்க் குலையீன்றன. அடியவர் அதிசயித்தனர். சமணர்கள் பிழைபொறுக்க வேண்டியதோடு சைவ சமயத்தின் சிறப்பினை அறிந்து சைவ சமயத்திற்கு மதம் மாறி ஞானசம்பந்தரைப் போற்றினர்.
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
Audio: https://sivaya.org/audio/1.054 Poothernthaayina .mp3 Audio: https://www.youtube.com/watch?v=eDjeCtZ_l10
பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின் பொன் அடி ஏத்தாதார் இல்லை, எண்ணுங்கால் ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக் கூத்தீர்! உம குணங்களே.
| [1] |
இடை ஈர் போகா இளமுலையாளை ஓர் புடையீரே! புள்ளிமான் உரி உடையீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர்ச் சடையீரே! உம தாளே.
| [2] |
உள்வேர் போல நொடிமையினார் திறம் கொள்வீர், அல்குல் ஓர் கோவணம்! ஒள் வாழைக்கனி தேன் சொரி ஓத்தூர்க் கள்வீரே! உம காதலே!
| [3] |
தோட்டீரே! துத்தி ஐந்தலை நாகத்தை ஆட்டீரே! அடியார் வினை ஓட்டீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர் நாட்டீரே! அருள் நல்குமே!
| [4] |
குழை ஆர் காதீர்! கொடுமழுவாள் படை உழை ஆள்வீர்! திரு ஓத்தூர் பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார் அழையாமே அருள் நல்குமே!
| [5] |
மிக்கார் வந்து விரும்பிப் பலி இடத் தக்கார் தம் மக்களீர் என்று உட்காதார் உளரோ? திரு ஓத்தூர் நக்கீரே! அருள் நல்குமே!
| [6] |
தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை நாதா! என்று நலம் புகழ்ந்து ஓதாதார் உளரோ? திரு ஓத்தூர் ஆதீரே! அருள் நல்குமே!
| [7] |
என்தான் இம் மலை! என்ற அரக்கனை வென்றார் போலும், விரலினால்; ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர் என்றார் மேல் வினை ஏகுமே.
| [8] |
நன்றா நால் மறையானொடு மாலும் ஆய்ச் சென்றார் போலும், திசை எலாம் ஒன்றாய்! உள் எரி ஆய் மிக, ஓத்தூர் நின்றீரே! உமை நேடியே!
| [9] |
கார் அமண், கலிங்கத் துவர் ஆடையர் தேரர், சொல் அவை தேறன் மின்! ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர்ச் சீரவன், கழல் சேர்மினே!
| [10] |
குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர் அரும்பு கொன்றை அடிகளை, பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல் விரும்புவார் வினை வீடே.
| [11] |
Back to Top
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி Back to Top
|
|