Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.094  
ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும்
பண் - திருவிருத்தம் (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை)
திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவனடியார்கள் இச் செய்தி கேட்டு மகிழ்ந்தனர். எல்லோரும்கூடி அரஹர முழக்கம் செய்து திரு நாவுக்கரசரை வரவேற்றனர். திருநாவுக்கரசர் அடியார் கூட்டத்தோடு திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானை ஈன்றாளுமாய் என்று தொடங்கும் திருப்பதிகத்தால் போற்றிப் பரவினார்.
கடல் மற்றும் நீரினால் வரும் துன்பங்களில் இருந்து தப்பிக்க
Audio: https://www.youtube.com/watch?v=D2gzNhT2Uj8
ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும் ஆய், உடன் தோன்றினராய், மூன்று ஆய் உலகம் படைத்து உகந்தான்; மனத்துள் இருக்க ஏன்றான்; இமையவர்க்கு அன்பன்; திருப் பாதிரிப்புலியூர்த் தோன்றாத் துணை ஆய் இருந்தனன், தன் அடியோங்களுக்கே.
| [1] |
பற்று ஆய் நினைந்திடு, எப்போதும்!-நெஞ்சே!-இந்தப் பாரை முற்றும் சுற்று ஆய் அலைகடல் மூடினும் கண்டேன், புகல் நமக்கு; உற்றான், உமையவட்கு அன்பன், திருப் பாதிரிப்புலியூர் முற்றா முளைமதிக் கண்ணியினான்தன மொய்கழலே.
| [2] |
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான்; இனி நமக்கு இங்கு அடையா, அவலம்; அருவினை சாரா; நமனை அஞ்சோம்; புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர் உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே?
| [3] |
மாயம் எல்லாம் முற்ற விட்டு, இருள் நீங்க, மலைமகட்கே நேயம் நிலாவ இருந்தான் அவன்தன் திருவடிக்கே தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும்-திருப் பாதிரிப்புலியூர் மேய நல்லான் மலர்ப்பாதம் என் சிந்தையுள் நின்றனவே.
| [4] |
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி, மனத்து அடைத்து சித்தம் ஒருக்கி, சிவாயநம என்று இருக்கின் அல்லால், மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர் அத்தன் அருள் பெறல் ஆமோ?-அறிவு இலாப் பேதைநெஞ்சே!
| [5] |
கருஆய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்; உருஆய்த் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன், உனது அருளால், திருவாய் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன்; தருவாய், சிவகதி நீ!-பாதிரிப்புலியூர் அரனே!
| [6] |
எண்ணாது அமரர் இரக்கப் பரவையுள் நஞ்சம் உண்டாய்! திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழச் செற்றவனே! பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர்க் கண் ஆர் நுதலாய்!-கழல் நம் கருத்தில் உடையனவே.
| [7] |
புழுஆய்ப் பிறக்கினும், புண்ணியா!-உன் அடி என் மனத்தே வழுவாது இருக்க வரம் தரவேண்டும்-இவ் வையகத்தே தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச் செழுநீர்ப்-புனல் கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே!
| [8] |
மண் பாதலம் புக்கு, மால்கடல் மூடி, மற்று ஏழ் உலகும் விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும், அஞ்சல், நெஞ்சே! திண்பால் நமக்கு ஒன்று கண்டோம்; திருப் பாதிரிப்புலியூர்க் கண் பாவும் நெற்றிக் கடவுள் சுடரான் கழல் இணையே.
| [9] |
திருந்தா அமணர்தம் தீ நெறிப் பட்டு, திகைத்து, முத்தி தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன்; வரை எடுத்த பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய்! பாதிரிப்புலியூர் இருந்தாய்! அடியேன் இனிப் பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே!
| [10] |
Back to Top
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி Back to Top
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400 |
|