Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.078  
நீறு, வரி ஆடு அரவொடு,
பண் - சாதாரி (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை)
கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ ஓத வேண்டிய பதிகம்
Audio: https://www.youtube.com/watch?v=QWAjJTbfqv0
நீறு, வரி ஆடு அரவொடு, ஆமை, மனவு, என்பு, நிரை பூண்பர்; இடபம், ஏறுவர்; யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர்; இருந்த இடம் ஆம் தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற, இணைவாளை மடுவில் வேறு பிரியாது விளையாட, வளம் ஆரும் வயல் வேதிகுடியே.
| [1] |
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர், தொல் ஆனை உரிவை மல் புரி புயத்து இனிது மேவுவர், எந்நாளும் வளர் வானவர் தொழத் துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர், இயன்ற தொகு சீர் வெற்பு அரையன் மங்கை ஒரு பங்கர், நகர் என்பர் திரு வேதிகுடியே.
| [2] |
போழும் மதி, பூண் அரவு, கொன்றைமலர், துன்று சடை வென்றி புக மேல் வாழும் நதி தாழும் அருளாளர்; இருள் ஆர் மிடறர்; மாதர் இமையோர் சூழும் இரவாளர்; திருமார்பில் விரி நூலர்; வரிதோலர்; உடைமேல் வேழ உரி போர்வையினர்; மேவு பதி என்பர் திரு வேதிகுடியே.
| [3] |
காடர், கரி காலர், கனல் கையர், அனல் மெய்யர், உடல் செய்யர், செவியில்- தோடர், தெரி கீளர், சரி கோவணவர், ஆவணவர் தொல்லை நகர்தான்- பாடல் உடையார்கள் அடியார்கள், மலரோடு புனல் கொண்டு பணிவார் வேடம் ஒளி ஆன பொடி பூசி, இசை மேவு திரு வேதிகுடியே.
| [4] |
சொக்கர்; துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து, தொழும் மூவர் மகிழத் தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார்; இனிது தங்கும் நகர்தான்- கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரிவண்டு இசை குலாம், மிக்க அமரர் மெச்சி இனிது, அச்சம் இடர் போக நல்கு, வேதிகுடியே.
| [5] |
செய்ய திரு மேனிமிசை வெண்பொடி அணிந்து, கருமான் உரிவை போர்த்து ஐயம் இடும்! என்று மடமங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம் வையம் விலை மாறிடினும், ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார் வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர், வேதிகுடியே.
| [6] |
உன்னி இருபோதும் அடி பேணும் அடியார் தம் இடர் ஒல்க அருளித் துன்னி ஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன் இடம் ஆம் கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி, அரு மங்கலம் மிக, மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே.
| [7] |
உரக் கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடிதோள் அரக்கனை அடர்த்தவன், இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன், இடம் முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை விரைக் குழல் மிகக் கமழ, விண் இசை உலாவு திரு வேதிகுடியே.
| [8] |
பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட, எரி ஆய், தேவும் இவர் அல்லர், இனி யாவர்? என, நின்று திகழ்கின்றவர் இடம் பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம், மேவு அரிய செல்வம் நெடுமாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே.
| [9] |
வஞ்ச(அ)மணர், தேரர், மதிகேடர், தம் மனத்து அறிவு இலாதவர் மொழி தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம் அஞ்சுபுலன் வென்று, அறுவகைப் பொருள் தெரிந்து, எழு இசைக் கிளவியால், வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே.
| [10] |
கந்தம் மலி தண்பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்- பந்தன் மலி செந்தமிழின் மாலைகொடு, வேதிகுடி ஆதி கழலே சிந்தை செய வல்லவர்கள், நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி, இமையோர் அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம்; ஆணை நமதே.
| [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4 -ஆம் திருமுறை பதிகம் 4.082  
பார் கொண்டு மூடிக் கடல்
பண் - திருவிருத்தம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
தில்லையில் திருநாவுக்கரசர் தங்கியிருந்த பொழுது சீகாழிப் பதியில் சிவபெருமானது திருவருளால் உமையம்மை தம் திருமுலைப் பாலோடு சிவஞானங்குழைத்தூட்ட உண்டு, இவர் எம்பெருமான் என்று சுட்டிக்காட்டி ஏழிசை இன் தமிழ்ப்பாமாலை பாடிய திருஞான சம்பந்தரின் சிறப்பினை அடியார்கள் சொல்லக் கேட்டு, அவரது திரு வடிகளை வணங்குதற்குப் பேரவாக் கொண்டு சீகாழிக்குப் புறப் பட்டார். திருநாரையூர் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு சீகாழிக்கு விரைந்தார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசர் வருகையைக் கேட்டு எதிர்கொண்டழைத்தார். திருநாவுக்கரசர் அன்புப்பெருக்கால் திருஞானசம்பந்தரை வணங்கினார். திருஞான சம்பந்தர் கைகளைப்பற்றிக்கொண்டு தாமும் வணங்கி அப்பரே என்று அழைக்க, நாவுக்கரசரும் அடியேன் என்றார். மகிழ்ச்சியால் இருவர் உள்ளமும் இணைந்து இதயங்கலந்து திருத்தோணியப்பர் தம் திருக்கோயிலை அடைந்தனர். திருக்கோயிலுக்குள் சென்று அடியவர் இருவரும் பெருமானைப் பணிந்தெழுந்தனர். சம்பந்தர் அப்பர் பெருமானைப்பார்த்து நீர் உங்கள் பெருமானைப் பாடுவீராக என்றார். அப்பரும் ஆனந்தம் மேலிட்டுப் பார்கொண்டுமூடி என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார்.
நல்ல நண்பரகள் நட்பு கிடைக்க
Audio: https://www.youtube.com/watch?v=A32b1qIWuMw
பார் கொண்டு மூடிக் கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம் நால்-அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர்; நளிர் மதியம் கால் கொண்ட வண்கைச் சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு ஆள் அன்றி மற்றும் உண்டோ, அம் தண் ஆழி அகலிடமே?
| [1] |
கடை ஆர் கொடி நெடுமாடங்கள் எங்கும் கலந்து இலங்க உடையான், உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி விடைதான் உடைய அவ் வேதியன் வாழும் கழுமலத்துள அடைவார்-வினைகள் அவை என்க!-நாள் தொறும் ஆடுவரே!
| [2] |
திரைவாய்ப் பெருங்கடல் முத்தம் குவிப்ப, முகந்து கொண்டு நுரைவாய் நுளைச்சியர் ஓடிக் கழு மலத்துள்(ள்) அழுந்தும் விரை வாய் நறுமலர் சூடிய விண்ணவன் தன் அடிக்கே வரையாப் பரிசு இவை நாள்தொறும் நம் தமை ஆள்வனவே.
| [3] |
விரிக்கும், அரும் பதம்; வேதங்கள் ஓதும்; விழுமிய நூல் உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர்; கேட்கில் உலகம் முற்றும் இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட, கழுமலவன் நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே.
| [4] |
சிந்தித்து எழு,-மனமே!-நினையா முன் கழுமலத்தை! பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை, பசுபதியை, சந்தித்த காலம் அறுத்தும் என்று எண்ணி இருந்தவர்க்கு முந்தித் தொழு கழல் நாள்தொறும் நம் தம்மை ஆள்வனவே.
| [5] |
நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்து ஆய், அலையும் பெரு வெள்ளத்து அன்று மிதந்த இத் தோணிபுரம், சிலையில்-திரி புரம் மூன்றும் எரித்தார், தம் கழுமலவர், அலரும் கழல் அடி நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.
| [6] |
முற்றிக் கிடந்து முந்நீரின் மிதந்து, உடன் மொய்த்து அமரர் சுற்றிக் கிடந்து, தொழப்படுகின்றது-சூழ் அரவம் தெற்றிக் கிடந்து வெங் கொன்றையும் துன்றி வெண் திங்கள் சூடும் கற்றைச் சடை முடியார்க்கு இடம் ஆய கழுமலமே.
| [7] |
உடலும் உயிரும் ஒருவழிச் செல்லும் உலகத்து அடையும் உனை வந்து அடைந்தார், அமரர் அடி இணைக்கீழ்; நடையும் விழவொடு நாள்தொறும் மல்கும் கழுமலத்துள விடையன் தனிப் பதம் நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.
| [8] |
பரவைக்-கடல் நஞ்சம் உண்டதும் இல்லை; இப் பார்முழுதும் நிரவிக் கிடந்து தொழப்படுகின்றது;-நீண்டு இருவர் சிரமப்பட வந்து சார்ந்தார், கழல் அடி காண்பதற்கே- அரவக் கழல் அடி நாள்தொறும் நம் தமை ஆள்வனவே.
| [9] |
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர் கோன் தன் முடி சிதறத் தொலையா மலர் அடி ஊன்றலும், உள்ளம் விதிர் விதிர்த்துத் தலை ஆய்க் கிடந்து, உயர்ந்தான் தன் கழுமலம் காண்பதற்கே- அலையாப் பரிசு இவை நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.
| [10] |
Back to Top
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி Back to Top
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400 |
|